தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு

Viduthalai
2 Min Read

சென்னை, ஜன.1- தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்திலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆறு மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிகமழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குர் பாலசந்திரன் கூறினார்.
இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இயல்பைவிட 28 சதவீதம் மழை அதிகமாக பதிவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பாலசந்திரன் நுங்கம்பாக்கத்தில் நேற்று (31.12.2024) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்த மழை நிலவரம் குறித்து அவர் கூறியதாவது:
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பதிவான மொத்த மழை அளவு 1,179 மி.மீட்டர் ஆகும்.
இதில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 52 மிமீ, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 147 மிமீ மழையும் பதிவானது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 389 மிமீ மழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 590 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதிக மழை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2023 ஆம் ஆண்டைவிட 2024 இல் 143 மில்லி மீட்டர் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு பதிவான மொத்த மழையளவு 1,036 மில்லி மீட்டர். தென்மேற்கு பருவ மழை காலத்தில் 18 சதவீதமும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 33 சதவீதமும், ஆண்டுக்கணக்கில் 28 சதவீதமும் இயல்பை விட அதிகமாக மழை பொழிந்துள்ளது.

பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு: மேலும், தமிழ்நாட்டில் பொங்கல் விழா வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை விலகுவது குறித்து பொங்கலுக்கு பிறகே தெரியவரும். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு, மூன்று நாள்கள் குறிப்பாக 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *