பிற இதழிலிருந்து….வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிறைவில் – பிரமாண்டமாக அமைந்த தந்தை பெரியார் நினைவிடச் சிறப்புக்கெல்லாம் சொந்தக்காரர் முதல்வர்தான்!

Viduthalai
21 Min Read

‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!

சென்னை, டிச. 31 – ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிறைவில், பிரம்மாண்டமாக அமைந்த தந்தை பெரியார் நினை விடத்தின் சிறப்புக்கெல்லாம் சொந்தக்காரர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்’’ என்று “கலைஞர் செய்திகள்” தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழாவை இரண்டு மாநில அரசுகளின் சமூக நீதியின் அடையாளமாக வைக்கத்தில் தந்தை பெரியாரின் நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அந்த நினைவகத்தை மிகவும் எழிலுற எழுப்பி யிருக்கிறார். முதலில் அந்த நினைவகம் எப்படி இருந்தது? இப்போது எப்படி எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது? முதலமைச்சர் என்ன எல்லாம் சொன்னார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து 17.12.2024 அன்று ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: –
நெறியாளர் சரவணன்: உங்களைச் சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி. வழக்கமாக ஒரு நினைவிடமோ அல்லது அரசின் அடையாளமாக ஒரு கட்டடம் கட்டுகிறபோது, உங்களை ஒவ்வொரு முறையும் அதே ஆர்வத்தோடும், பெரிய எதிர்பார்ப்போடும்தான் நான் சந்திக்கிறேன். அந்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் இந்த நினைவகத்தை பார்த்ததற்கு பிறகும் இருந்தது. எனக்கு என்ன கேள்வி என்றால், முதன் முதலில் அந்த நினைவகத்திற்கு நீங்கள் செல்லும்போது, அது எப்படி இருந்தது?

அமைச்சர் எ.வ.வேலு: பாழ்பட்டது என்றுகூட சொல்லலாம். எந்தவித நிர்வாகமும் நேரடியாகச் சென்று பார்க்காத அளவில், கேட்பாரற்ற நிலையில், ஏதோ பெரியாரின் நினைவகம் என்ற அடிப்படையில்தான் அந்த நினைவகம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், அங்கு இடம்பெற்ற புகைப்படங்கள்கூட செல்லரித்த நிலையில்தான் அந்த நினைவகம் இருந்தது.

சீர் செய்யாமல் பாழ்பட்ட நிலையில் கட்டிடம்!
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், அந்த நினைவகத்திற்குள் செல்வதற்கு முன்னால், “தூசி எல்லாம் மிகவும் அதிகமாக இருக்கிறது. மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள் சார்” என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். பெரியாரின் நினைவகத்தை மாஸ்க் போட்டுக்கொண்டு சென்று பார்க்கக் கூடாது. எப்போதுமே பெரியாருக்கு என்று ஒரு தைரியம் இருக்கிறது அல்லவா… எதற்கும் அஞ்சாதவர் அல்லவா அவர். மாஸ்க் போடாமலே உள்ளே சென்று நான் அனைத்தையும் சுற்றிப் பார்த்தேன்.
அது 715 சதுர அடி உள்ள ஒரு கட்டடம்தான். அதுவும் தரைத்தளம் மட்டும்தான். மேல் தளம் கிடையாது. சாதாரணமாக மழை பெய்தால்கூட, சாரல் அடித்தால்கூட உள்ளேதான் தண்ணீர் நிற்கும். அது போன்ற ஒரு பழமையான கட்டடம். பாழடைந்த கட்டடம் என்று சொல்லலாம். அங்கு நிர்வாகம் செய்ய யாருமே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அந்தக் கட்டடம் நான் முதன் முதலில் பார்க்கும்போது சீர் செய்யப்படாமல் பாழ்பட்டுக் கிடந்தது.

நெறியாளர்:இப்போது நீங்கள் சொல்கிறீர்கள்… கிட்டத்தட்ட 700 சதுர அடிதான் அந்த இடமே இருந்தது. அதுவும் பாழடைந்து இருந்தது என்று. வைக்கம் என்றால், பெரியார் போராடினார் என்றுதான் எங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், இப்படி ஒரு நினைவகம் அங்கு இருக்கிறது. அதற்கு உயிர் கொடுக்க வேண்டும்; புதுப்பிக்க வேண்டும் எண்ணம் எப்போது வந்தது?

சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!
அமைச்சர் எ.வ.வேலு:முதலமைச்சர் அவர்கள் 2023 இல் கேரளா விற்குச் சென்றிருந்தார். கேரளாவின் முதலமைச்சர் அவர்கள் நம்முடைய தமிழ்நாடு ‘திராவிட மாடல்+ ஆட்சி நாயகர் தளபதியாரை ஒரு நிகழ்வின் காரணமாக அழைத்திருந்தார்கள். பெரியார் கேரளாவிற்கு வந்து, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதைமையமாக வைத்து, ஒரு விழாவை கேரள அரசாங்கம் சார்பில் எடுத்தார்கள். அதற்கு சிறப்பு விருந்தினராக நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை அழைத்தார்கள். அந்த நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற முதலமைச்சர், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு, அந்த நினைவகத்தைப் பார்க்கிறபோதுதான், இப்படியா பெரியாருக்கு நினைவகம் என்று, அவர் மனம் மிகவும் பதை பதைத்து விட்டது.

அதனுடைய விளைவுதான், தமிழ்நாடு முதலமைச்சர் திரும்ப வரும்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தது. எப்போதுமே மார்ச் மாதம்தான் சட்டமன்றத்தில் நிதி நிலை இருக்கும். நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் 110 விதியின்கீழ் முதலமைச்சர் அவர்கள்தான் அறிவித்தார்கள்.
இன்றைக்கு, தந்தை பெரியாரின் நினைவு தினம். நான் அதில் சொல்கிறேன், “வைக்கத்திற்கு சென்று போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களுக்கு அங்கே ஒரு நினைவகம் இருக்கிறது. அந்த நினைவகத்தை புதுப்பிக்கின்ற பணியும், நூலகத்தை புதிதாக கட்டுகின்ற பணியும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள இருக்கிறோம்” என்ற ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதனுடைய விளைவாக, பொதுப் பணித் துறை அமைச்சர் என்ற அடிப்படையில், என்னை அழைத்து, அதைச் சென்று பார்த்து வாருங்கள் என்று சொன்னார். அதன் பிறகு, என்னுடைய துறையின் செயலாளர்களை அழைத்துக் கொண்டு நேரடியாக கேரளாவிற்குச் சென்று, காலையில் இருந்து மாலை வரை ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து, என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்? என்ன திட்டமிடலாம்? என்று ஒரு யோசனையோடு, நான் மீண்டும் வந்து முதலமைச்சரிடம் செல்லும்போதே வரைபடத்தோடு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து, கட்டட வரைபடங்கள் எல்லாம் போடப்பட்டு, முகப்பெல்லாம் போடப்பட்டு, மூன்று வகையான படங்கள் எல்லாம் போட்டு முதலமைச்சரிடம் கொண்டு சென்று காண்பித்தேன்.

முதல்வர் ஆலோசனை – அறிவுரை!
அவர், இல்லை… நூலகம் இன்னும் கூடுதலாக போட வேண்டும்; இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கலாம் என்று அவர்தான் ஆலோசனை வழங்கினார். அதற்குப் பிறகு, அந்த கூடுதலான இடங்களையும், வரைபடங்களையும் சேர்த்து, இரண்டாவது முறையும் கொண்டு சென்று காண்பித்தோம். அதில் ஒரு படத்தைத் தேர்வு செய்தார். நூலகத்திற்கு முகப்பு நன்றாக இருக்கிறது. அதேபோன்று, ஏற்கனவே இருக்கும் நினைவகத்தின் உறுதித் தன்மை நன்றாக இருக்கிறதா? என்று கேட்டார்.
இதில் ஒன்றே ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். 1985-இல் கட்டப்பட்ட கட்டடம் அது. முதலமைச்சர் புதிதாக நூலகம் கட்ட வேண்டும் என்று ஆணையிடுகிறார். நூலகம் சிறப்பாக வர வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு முறைக்கு இரண்டு முறை ஆய்வு நடத்தி அந்த வரைபடத்தை ஆய்வு செய்து இதுதான் கட்ட வேண்டும் என்று சொன்ன முதலமைச்சர் – அவர் எங்கு கவனம் செலுத்துகிறார் என்றால், பழைய கட்டடங்கள் ஏதோ வரலாற்றுக்குரிய கட்டடங்களை, திராவிட மாடல் ஆட்சியில் இருக்கிற இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வந்து விடுமோ என்று யோசிக்கிறார். அதன் உறுதித் தன்மையைப் பாருங்கள். அது உறுதியாகத்தான் இருக்கிறது என்றதும். “அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். அதையே டெவலப் செய்யுங்கள். பழைய கட்டடத்தை மையப்பகுதியாக வைத்துக் கொண்டு, அதையே நீங்கள் டெவலப் செய்யுங்கள். அதை ஒன்றும் டேமேஜ் செய்து, இடித்துவிட வேண்டாம்” என்று ஒரு அறிவுரை சொன்னார்.

அந்த அடிப்படையில்தான், அந்த 700 சதுர அடி என்ற அளவில் கீழே இருக்கும் தரைமட்டம். அந்த 700 சதுர அடியையும் டெவலப் செய்கிறோம். ஏனென்றால், அதைச் சுற்றி வராண்டா பகுதி எல்லாம் கிடையாது. இன்றைக்கு முதலமைச்சர் உரை நிகழ்த்துகிறபோது, ஒரு பிரம்மாண்டத்தை நான் கண்டேன் என்று சொல்கிறார் பாருங்கள். பெரிய பெரிய தூண்கள். அந்த தூண்கள் எல்லாம் அரண்மனையில் இருப்பதைப் போன்று இருக்கும். அதை விரிவுபடுத்தியதில்தான் அந்த தூண்கள் எல்லாம் வருகிறது. இரண்டு வாசற்படி இருக்கும். இன்றைக்கு இருக்கும் புது கட்டட அமைப்பு கொண்டதாகத்தான் அது இருக்கும். அதற்குப் பின்னால், படி போட்டு, மேலே சென்று, மேலே இருக்கும் தளங்கள் அனைத்தும் புதுமையானது. முகப்பும் பார்த்தால் பெரிய தூணோடு பிரமாண்டமாக இருக்கும். அது முதலமைச்சரின் பெரும் ஆலோசனைதான்.
ஆனால், இப்போது அந்த நினைவகம் என்று எடுத்துக் கொண்டீர்கள் என்றால், ஏறத்தாழ 3,650 சதுர அடி கொண்ட ஒரு நினைவகம் அது. இப்போது கீழ்ப்பகுதியிலும் படக் காட்சி வைத்திருக்கிறோம். மேலேயும் படக் காட்சி வைத்திருக்கிறோம். அதுமட்டுமின்றி, அங்குஒரு டி.வி. வைத்திருக்கிறோம். அந்த படக் காட்சியில் என்னென்ன எல்லாம் இருக்கிறதோ, அதன் வரலாறு மற்றும் விடுபட்ட சில காட்சிகள் எல்லாம் அந்த டி.வி.யில் வரும். அந்த டி.வி. எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். அது போன்று அமைத்திருக்கிறோம்.
இன்னொரு பகுதி, நூலகம். நூலகத்தைப் பொருத்தவரையில் முழுவதும் புதுமையான கட்டடம். அதில் பழைமையான கட்டிடம் எதுவும் கிடையாது.

பெரியார் நூலகம் முழுவதும் புதுமையாக கட்டப்பட்டது!
நெறியாளர்:புகைப்படக் காட்சியரங்கம் மட்டும்தான் இருந்ததா? நூலகம் முழுவதும் புதிதாக கட்டப்பட்டது தானா?
அமைச்சர் எ.வ.வேலு: புகைப் படக் காட்சியரங்கமும் முழுமையாக இல்லை. இப்போது அந்த கட்டடத்தின் சதுர அடி 3,650. ஏற்கனவே இருந்தது 700 சதுர அடி. அய்ந்தில் ஒரு பங்குதான் இருந்தது. அதனால், பெரியார் நூலகத்தை பொருத்தவரையில் முழுமையும் புதுமை யானது. அந்த முழுமையும் புதுமையான நூலகத்தில், 5,500 புத்தகங்கள் உள்ளன. ஆங்கில மொழியில் இருக்கும் புத்தகங்களும் இருக்கிறது; மலையாள மொழியில் இருக்கும் புத்தகங்களும் இருக்கிறது; தமிழ் மொழியில் இருக்கும் புத்தகங்களும் இருக்கிறது. அதில் இலக்கியப் புத்தகங்கள், வைக்கம் போராட்டம் பற்றி பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் எல்லாம் அதில் இருக்கிறது. அந்தப் புத்தகங்கள் எப்போதும் பயன்பாட்டிற்குரிய புத்தகங்களாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருதுகிறார். இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் புத்தகங்களாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். கொள்கை சார்ந்த புத்தகங்களாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில், பயனுள்ள புத்தகங்களாகவும் இருக்க வேண்டும். அதை இரு வகையாக எடுத்துக் கொள்ளலாம். அய்.ஏ.எஸ். தேர்வுக்கான புத்தகங்களையும் அங்கு படிக்கலாம். அதுபோன்று, தமிழ்நாடு தேர்வாணையம் இருப்பது போன்று, கேரளாவிலும் இருக்கிறது. அதற்கு தயாராகும் புத்தகங்களும் இருக்கிறது.

நெறியாளர்:இப்போது நீங்கள் சொன்னீர்கள்… 700 சதுர அடிதான் அந்தப் புகைப்படக் கண்காட்சி இருந்தது. இப்போது அந்தப் புகைப்படக் கண்காட்சி மட்டும் கிட்டத்தட்ட 3,000 சதுர அடிக்கு மேலே என்று சொல்கிறீர்கள். கேரள மாநில அரசு எந்த வகையில் ஒத்துழைத்தார்கள். அவர்களிடம் என்னென்ன கோரிக்கைகளைவைத்திருந்தீர்கள்?
ஒப்பிட முடியாத அளவில் பணிகள்!

அமைச்சர் எ.வ.வேலு :70 சென்ட் இடம் கேரளா அரசாங்கம் கொடுத்ததுதான். அப்போதைய மாநில அரசாங்கம் அந்தக் கட்டடத்தை கட்டித் தருவதற்கு ரூ.15 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். அந்த பழமை யான கட்டடத்தை கேரள அரசாங்கம்தான் கட்டினார்கள். தமிழ்நாடு அரசாங்கம் கட்டவில்லை. அதற்கு ரூ.15 லட்சம் அரசுப் பணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்த ரூ.15 லட்சத்தில் 1985-இல் அந்த 700 சதுர அடி கொண்ட அந்தக் கட்டடத்தை கட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் இடம் கொடுத்திருக்கிறார்கள். 15 லட்சம் பெற்றுக் கொண்டு அந்தக் கட்டடத்தை கட்டி இருக்கிறார்கள். சுற்றுச் சுவரும் கட்டி இருக்கிறார்கள். இது கேரள அரசாங்கத்தின் பணிகள்.
அங்குமிகவும் சொற்பமான படங்கள்தான் இருந்தன. 700 சதுர அடியில் எத்தனை படங்கள் வைத்திட முடியும். அதனால் குறிப்பிட்ட படங்கள்தான் அங்கு வைத்திருந்தார்கள். இப்போது விரிந்து பரந்து அழகாக … நீங்களே பார்த்தீர்கள் இல்லையா… இப்போது இருப்பதையும், அப்போது இருந்ததையும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஆகிவிட்டது.

ஆசிரியரின் வாழ்த்து – பாராட்டு!
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நம்முடைய ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அந்த நிகழ்ச்சிக்குச் சென்ற மறுநாள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அவர் பெரும்பான்மையான நேரத்தில் பெரியாரோடு இருந்தவர். அவர் எழுதியிருந்தார், முதலமைச்சருக்கு மிகவும் நன்றி சொல்லிவிட்டு, 100 ஆண்டு நிகழ்வுகளை என் கண் முன்னே நிறுத்துகிற படக் காட்சியாக அது அமைந்திருக்கிறது. அதற்காக முதலமைச்சர் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த உங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், நன்றி, பாராட்டு… என்று ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

நெறியாளர்:அவர்களுடைய கடிதம் என்றதும் எனக்கு ஒரு கேள்வி இயல்பாக வருகிறது. தமிழ்நாட்டின் எல்லைக்குள் கலைஞர் உலகத்தை கொண்டு வந்து விட்டீர்கள்; கலைஞரின் நூலகம் இருக்கிறது; ஏறுதழுவுதல் அரங்கம் இருக்கிறது; மருத்துவமனை இருக்கிறது; இப்போது தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியே சென்று இப்படி ஒரு கட்டடத்தை கட்டப் போகிறோம் என்கிறபோது அந்த இடத்திலும், உங்க ளுடைய கடமை உணர்ச்சி என்பதை நாங்கள் பல்வேறு இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் கடமை உணர்ச்சியைத் தாண்டி, ஒரு பொறுப்புணர்ச்சி இருந்ததை நீங்கள் உணர்ந்தீர்களா?

பிற இதழிலிருந்து...

பெரியார் மீது மிகப்பெரிய ஈடுபாடு!
அமைச்சர் எ.வ.வேலு:அமைச்சர் என்பது கடமை உணர்ச்சி. ஒரு முதலமைச்சர் ஆணையிடுகிறார். அது எந்தத் துறையாக இருந்தாலும், அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் முதலமைச்சர் சொல்கிற ஆணையை நிறைவேற்றுவது ஒரு அமைச்சரின் கடமை. முதலமைச்சரை பொருத்தவரையில், அந்தக் கடமை என்பது எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். அது அழகுற அமைய வேண்டும். முதலமைச்சர் இப்படித்தான் எண்ணுவார்.
முதலமைச்சர் இத்தகைய எண்ணங்களோடுதான் படுத்து உறங்கிக் கொண்டிருப்பார். அவ்வாறு எனக்குத் தோன்றுவதற்கு என்ன காரணம் என்றால், நானே ஒரு பகுத்தறிவாளன்.

அதை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு 13 வயது. திரு வண்ணாமலையில் மண்டித் தெரு என்கிற இடத்தில் தந்தை பெரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். அதிலிருந்து 9 கிலோமீட்டர் என்னுடைய கிராமம், சிற்றூர். என்னுடைய தாய் மாமன் கிராமத்தில் இருந்து புல்லட் மோட்டார் பைக்கில், “பெரியார் பேச்சை கேளு வா” என்று என்னை அழைத்து வந்தார். அதிலிருந்து எனக்கு பெரியார் மீது ஒரு அளப்பரிய ஈடுபாடு. அவர்தான் தமிழ்நாட்டுக்கு பெரிய வழிகாட்டி என்ற உணர்வு எனக்கு மேலோங்கி இருந்த காலகட்டங்கள்.
அதற்குப் பிறகு, ஏறத்தாழ 26 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞரோடு நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எவ்வளவுதான் பாராட்டுக்குரிய கட்டடம் இருந்திருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எனக்கு வாழ்க்கையில் கொடுத்த 2 பெரும் வாய்ப்பு – பெரும் வாய்ப்பு என்பதைவிட மன நிறைவு என்று கூட சொல்லலாம்.

கலைஞர் வீட்டு கட்டுத்தறிகள்!
ஒன்று,கலைஞர் நினைவகத்தை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிற ஒரு நினைவகம் அது. அதைக் கட்டுகிற வாய்ப்பை எனக்கு முதல்வர் தந்தது எனது வாழ்க்கையில் என்றைக்கும் மறக்க முடியாத ஒன்று. மறக்க முடியாதது என்றால், எனது நினைவு போனால்தானே நான் மறக்க முடியும். அதனால், நினைவில் இருக்கக்கூடியது. அது நினைவில் இருந்து கொண்டே இருக்கும்.
இன்னொன்று, இப்போது இருக்கும் பெரியார் நினைவகம். அதில் என்ன சிறப்பு? இன்னொரு மாநிலத்திற்கு என்னை அனுப்பி, பெரியாரின் நினைவகத்தை கட்டுங்கள் என்று அவர் பணிக்கிறார். அந்த 13 வயதிலிருந்து ஒரு கொள்கையோடு ஒட்டி இருக்கிற ஒரு உணர்வு. அந்த வாய்ப்பை நமக்கு கொடுத்திருக்கிறார். இதைவிட என்ன வேண்டும் வாழ்க்கையில். இந்த இரண்டு கட்டடம் கட்டியதிலேயே என்னுடைய வாழ்க்கை நிறைவடைந்துவிட்டது என்று சொல்லலாம்.

எப்போது பார்த்தாலும், தலைவர் கலைஞர் தனிமையில் இருக்கி றார். டிஸ்கஷன் செய்கிறார். அதை தாண்டி செய்கிறார் என்றால், அவருடைய கருத்தாக இருக்கட்டும்; அவருடைய சிந்தனையாக இருக்கட்டும்; அவர் பேசுவதை பார்த்தீர்கள் என்றால். பெரியாரையும் – அண்ணாவையும் சொல்லாத நாளே இல்லை. தினமும் எப்படியாவது சொல்லிக் கொண்டிருப்பார் – பெரியாரைப் பற்றி சொல்வார் அல்லது அண்ணாவைப் பற்றி சொல்வார். இரண்டும் இல்லாமல் அவர் பேசியது போன்று எனக்கு ஒரு நினைவே இல்லை. அவரோடு நாங்கள் இருப்பதனால், எங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பொதுவாக சொல்வார்கள், ‘கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும்’ என்று ஒரு முதுமொழி உண்டு. நாங்கள் எல்லாம் கலைஞர் வீட்டு கட்டுத்தறி. அதனால், பெரியார் மீது அளப்பரிய ஈடுபாடு இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதற்கும் காரணம், அண்ணன் கலைஞர்தான். அந்த உணர்வு எனக்கு அதிகமாக இருந்ததால், அதன் மீதுஈடுபாடும் அதிகமாகவே இருந்தது. பார்த்து… பார்த்து… அப்படி செய்யவேண்டும்! இப்படி செய்ய வேண்டும்!
என்று இருந்தது. ஏன் என்றால், இப்போது இருக்கும் முதலமைச்சர் எதிர்பார்ப்பார். நான் இரண்டு பேரிடமும் பணியாற்றி இருக்கிறேன்.

இந்த சிறப்புக்கெல்லாம் சொந்தக்காரர் முதல்வர்தான்!
இரண்டு பேரிடம் பணியாற்றி இருக்கிறேன் என்பதைவிட, ஒரு தொண்டுணர்வோடு பணியாற்றி இருக்கிறேன். தொடர் நடவடிக்கை என்று சொல்வார்கள் பாருங்கள். அது கலைஞரைவிட, இவரிடம் வேலை பார்ப்பது மிகவும் கடினம். அந்த தொடர் நடவடிக்கையில் அவர் உறுதியாக இருப்பார். ஒரு பணியை சொல்லிவிட்டார் என்றால், அந்த பணி முடியும் வரை ஃபாலோ செய்து கொண்டே இருப்பார். அதை ஒரு இலக்காக வைத்திருக்கிறார் என்றுகூட சொல்லலாம். அதனால், அந்த உணர்வு எனக்கு இருப்பதனால் அது சிறப்பாக அமைந்தது என்று சொல்லலாம். இந்த சிறப்புக்கெல்லாம்அவர்தான் அதிகமான சொந்தக்காரர்.

அவர் இன்று சென்னையில் இருக்கலாமேயொழிய, அங்கு எல்லாமே அவர்தான். சாதாரணமாக நடந்து செல்லும் டைல்சிலிருந்து அனைத்தும் அவருடைய செலக்சனாகத்தான் இருக்கும். நான் எப்போதுமே அப்படி வைத்துக் கொள்வேன். எப்போதுமே ஒரு ஒப்புதல் வாங்கிக் கொள்வேன். சாதாரண விஷயமாக நான் விடமாட்டேன். சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் அவரிடம் ஒப்புதல் பெறுவேன். அவருடைய ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன். அது தேவை இல்லை என்று நினைப்பேன்.
கிராமத்தில் சாதாரணமாகச் சொல்வார்கள். மரம் நன்றாக இருந்தால், அந்த நிழலில் நாம் நின்று கொள்ளலாம் என்று சொல்வார்கள். அதுபோன்று, அவர் புகழுடன் நன்றாக இருக்கிறார் என்றால், அந்த நிழலில் நாம் நின்று கொள்ளலாம். அப்படித்தான் என்னுடைய சிந்த னைகள் எப்போதும் இருக்கும். அந்த சிந்தனைதான் எனது வெற்றியாக அமைகிறது என்றுகூட சொல்லலாம்.

முதலமைச்சரின்யோசனையோடு செய்யப்பட்டதுதான்!
நெறியாளர்:மிகவும் அழகாக சொன்னீர்கள். பொறுப்புணர்வோடு இருந்துதான் அது அமைக்கப்பட்டது. சின்ன வயதிலிருந்தே பெரியாரின் பேச்சைக் கேட்டு இருக்கிறேன். அதன் பிறகு, கலைஞரோடு இருந்தேன். கலைஞர் பேசிக்கொண்டே இருந்தார். இதனுடைய அனைத்து தாக்கமும்தான் பெரியாரை அங்கு அவ்வாறு நிலைநிறுத்தியது என்று. அந்த நினைவகத்தை நாங்கள் தொடர்ந்து பார்க்கும்போது நிறைய இடங்களில் கல்வெட்டுகள் பதித்து வைத்திருந்தீர்கள். அவருடைய பொன்மொழிகள் அதிகம் இருந்தது. ஒரு திறந்தவெளி அரங்கம் இருந்தது. அதையெல்லாம் ஏன் செய்திருக்கிறீர்கள்?

அமைச்சர் எ.வ.வேலு :முதலமைச்சர் பழமையும் விரும்புவார். சமகாலத்து விரும்பியாகவும் இருப்பார். இந்த இளைஞர்களின் எண்ணங்கள் என்ன என்பதையும் பார்ப்பார். வருங்காலம் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பார். அவரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம்.
அவருடன் ஒரு கலந்துரையாடல் வரும்போது என்ன சொன்னார் என்றால், 70 சென்ட் வைத்திருக்கிறீர்கள். இரண்டு பக்கமும் வைத்தி ருக்கிறீர்கள். இடைப்பட்ட இடம் எல்லாம் இருக்கிறது. அது நகரின் மையப் பகுதியாக இருக்கிறது. அதனால் சிறுவர்கள் எல்லாம் வர வேண்டும் என்றால், சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா ஒன்று அமைக்கலாம் என்று சொன்னார். இரண்டாவது, ஒரு திறந்தவெளி அரங்கம் அமையுங்கள். அங்கு நகராட்சியாக இருப்பதனால், மாலை நேரங்களில் அங்கிருப்பவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்குகூட ஏதுவாக இருக்கும் என்று ஒரு திறந்தவெளி அரங்கம் அமையுங்கள் என்று சொன்னார். அதனால்தான், ஒரு பக்கம் விளையாட்டுப் பூங்கா இருக்கும். இன்னொரு பகுதியில், இன்றைக்கு இருக்கும் நீர் டெக்னாலஜியை பயன்படுத்தி ரவுண்டு ஷேப்பில் சென்டரில் ஒரு குடைபோன்று போடப்பட்டிருக்கும். அந்த குடை போன்ற பகுதியில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்று சொன்னால், சுற்றிலும் உட்கார்ந்து பார்ப்பதற்காகத்தான் அந்த அரங்கம் அமைத்திருக்கி றோம். இதுவும் முதலமைச்சரின் யோசனைதான்.

கேரள முதல்வரின் எளிமை!
நெறியாளர்:நிறையப் பணிகள் நிமித்தமாக நீங்கள் கேரள முதலமைச்சரை அடிக்கடி சந்திக்கிறீர்கள். வயநாடு துயரம் என்றாலும் அங்குதான் செல்கிறீர்கள். வைக்கத்திற்காகவும் நீங்கள் அங்கு சென்றீர்கள். அவருடைய மன உணர்வுகள் தலைவர் மீது எப்படி இருக்கிறது? அவருடைய தனிப்பட்ட உணர்வுகள் எல்லாம் எப்படி இருக்கிறது?

அமைச்சர் எ.வ.வேலு :கேரளா முதலமைச்சர் பொதுவுடமைச் சித்தாந்த அடிப்படையில் அரசியல் வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருப்பவர். எளிமையை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பொதுவுடமைச் சித்தாந்தம் உள்ளவர்கள் எப்போதுமே எளிமையாக இருப்பார்கள். அந்த எளிமையை நான் அவரிடம் எப்போதும் பார்ப்பேன். எப்போதும் எளிமையாகதான் பேசுவார். அவரை நான் இதுவரை மூன்று முறை சந்தித்திருக்கிறேன். அவ்வாறு செல்லும்போதேல்லாம், முதலில் முதலமைச்சர் எவ்வாறு இருக்கிறார் என்றுதான் கேட்பார். உடன் பிறந்த சகோதரர் என்ற வாஞ்சையோடு எப்போதும் பேசுவார். அதன் பிறகு, தமிழ்நாடு அரசாங்கத்தில் ஏதாவது புதிய திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம் என்றால், அது பற்றி சொல்வார். எப்படி இந்தத் திட்டம் வெற்றியடைகிறது என்று கேட்பார். அவ்வாறுதான், நான் ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும்போது பார்க்கிறேன்.
அழைப்பிதழ் வழங்கும்போதுகூட அந்த அழைப்பிதழை திருப்பித் திருப்பி பார்த்தார். ‘ஓ’ அப்படி என்றார். அந்த அழைப்பிதழை தேர்வு செய்ததுகூட நம்முடைய முதலமைச்சர் தான்.

நெறியாளர்:இவ்வளவு பணிகள் இருக்கும்போதும், அதில் அவர் தனிக் கவனம் செலுத்தி தேர்வு செய்கிறார் அல்லவா?
அமைச்சர் எ.வ.வேலு :அவர் யாருங்க… அவர் கலைஞர் வீட்டு பிள்ளைங்க… கலை என்றால் என்ன? உணர்வால் இருப்பதுதான் கலை. கலை என்பதே உணர்வால் வருவதுதானே. அவர் உணர்வால் இருப்பார்.

நெறியாளர்:நிறைவாக ஒரு கேள்வி. இந்த நினைவகத்தின் செய்திகளிலேயே நாங்கள் இருக்கிறோம். அடுத்த நாள் ஒரு செய்தி, கன்னியாகுமரியில் இருக்கிறீர்கள். கண்ணாடிப் பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று. எப்போது நாங்கள்முழு மையான கண்ணாடிப் பாலத்தைபார்க்கலாம். எப்படி இருக்கிறது ?
அமைச்சர் எ.வ.வேலு :இப்போது முதலமைச்சரின் திட்டமிடல் என்ன என்றால், அய்யன் வள்ளுவர் பொதுமறையை நமக்கு தந்தவர்.மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர். அண்ணன் கலைஞருக்கு அவர் மீது மிகுந்த ஈடுபாடு. ஒருமுறை திருவண்ணாமலைக்கு வந்திருந்தார் கலைஞர். நிகழ்ச்சி முடிக்கப் போவதற்கு முன்னால் நான் கேட்கிறேன். என் கேம்பசில் பள்ளி ஒன்று கட்டியிருக்கிறேன். செல்லும்போது காரில் இருந்தே ஒரு ரிமோட்டில் ஒரு பட்டனை அழுத்தினீர்கள் என்றால், அந்த கல்லில் உங்கள் பெயரைப் போட்டு திறந்து கொள்வேன் என்று சொன்னேன். உடனே அவசரமாக என்ன செய்தேன் என்றால், மறுநாள் காலையில் ஒரு அரை பக்க விளம்பரம். நான் ஒரு வரி சேர்த்தேன். 21-ஆம் நூற்றாண்டில் எங்கள் அய்யன் கலைஞர் அவர்கள் திறந்து வைப்பார் என்று விளம்பரம் போட்டேன்.
இந்த விளம்பரத்தைப் பார்த்தார். “என்ன இது?” என்று கேட்டார். இல்லை அண்ணா… அழைப்பிதழ் அடிக்க முடியவில்லை. நீங்கள் இரவில்தான் ஒப்புதல் கொடுத்தீர்கள். அதனால் வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் பத்திரிகையில் விளம்பரம் போட்டேன். “அது போட்டது இருக்கட்டும். ஏதோ 21-ஆம் நூற்றாண்டில் எங்கள் அய்யன் என்று போட்டிருக்கிறீரே… உனக்கு அது மிகையாக தெரியவில்லையா” என்று கேட்டார். நான் சொன்னேன், எனக்கு எதுவும்மிகையாக தெரியவில்லை “அண்ணா. நான் என்ன வள்ளுவரையா பார்த்தேன்.?” இப்படித்தான் சொன்னேன். அவர் ஒரு தந்தைக்குரிய ஸ்தானத்தில் இருப்பவர். எப்போதுமே அவரை நான் அப்படிதான் பார்ப்பேன். கூடுமானவரை நாங்கள் அவரோடு சுற்றிஇருக்கிறோமே தவிர, எங்களுடைய உணர்வெல்லாம் அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் எப்போதுமே அவருடைய பாசத்தைக் கொட்டுவார். எங்களுக்கு வள்ளுவரைத் தெரியாது. எங்களுக்கு தெரிந்த 21 ஆம் நூற்றாண்டு அய்யன் நீங்கள்தான். இன்றைக்கு வள்ளுவர் என்று ஒருவர் இருக்கிறார் என்று நாட்டுக்கு தெரிகிறார் என்றால், பெரும் பங்கு உங்களுடைய பங்குதான். நீங்கள் வள்ளுவருக்காக என்ன குறை வைத்திருக்கிறீர்கள்?

சட்டசபையில் வள்ளுவர் படம் இருக்கிறது என்றால், அதற்கு காரணமாகவும் நீங்கள்தான் இருந்திருக்கிறீர்கள். போக்குவரத்துத் துறை அமைச்சராகஇருக்கும்போது, பேருந்தில் வள்ளுவர் படம் வைக்க வேண்டும். குறளை எழுத வேண்டும் என்று சொன்னவரும் நீங்கள்தான். அதற்குப் பிறகு, குறளுக்கு குறளோவியம் தீட்டியவரும் நீங்கள்தான். அதையும் விட்டு வைக்கவில்லை. எனக்குத் தெரிந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்கள். நீங்களும் எழுதினீர்கள். நான் பலவற்றை ஒப்பிட்டுப் பார்த்தேன். உங்களுடைய உரை என்பது பாமரர்களுக்கு புரியும்படி எளிமையான ஒரு உரை. எதையும் இழுத்து வைத்து திணிக்கும் பழக்கம் இல்லை. இதை எல்லாம் இல்லாமல் அடையாளப் படுத்த வேண்டும் என்பதற்காக, சென்னையில் நீங்கள் பெரிய கோட்டத்தை கண்டிருக்கிறீர்கள்.

குறள் மீது பெரிய ஈடுபாடு உண்டு!
அதோடு விட்டீர்களா, உலகமே வியக்கும் அளவிற்கு, இந்தியா விற்கே அடையாளம் என்று சொல்லலாம். அய்யன் வள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை எழுப்பி இருக்கிறீர்கள் என்று நான் அவரிடமே நேரடியாக பேசினேன். அந்த அய்யன் கண்ட 133 அடி கொண்ட வள்ளுவர் சிலை 25 வருடம் ஆகிவிட்டது. அந்த 25 வருடம் ஆகிவிட்டது என்றால், வள்ளுவர் மேல் எனக்கே ஒரு பாசம் உண்டு. எப்போது சட்டமன்றத்தை எடுத்து பார்த்தீர்கள் என்றாலும், நான் சட்டமன்றத்தில் பேசுகிறேன் என்றால், குறள் சொல்லாமல் நான் சட்டமன்றத்தில் பேசியிருக்க மாட்டேன். எதிர்க் கட்சியாக இருக்கும்போதும் குறள் சொல்லுவேன். ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் குறள் சொல்வேன். அமைச்சராக இருந்தாலும், குறள் சொல்வேன். எனக்கு குறள் மேல் ஒரு பெரிய ஈடுபாடு உண்டு.
நான் என்ன செய்தேன்? வள்ளுவரின் குறள். அந்தக் குறளின் கலைஞரின் உரை. அந்த உரை போன்று தான் வாழ்ந்தார். அந்த மூன்றையும் ஒப்பிட்டு, அதற்குரிய தரவுகளை கண்டுபிடித்து, கிட்டத்தட்ட 11 வருடமாக ஒருபுத்தகம் எழுதினேன். அந்தப் புத்த கத்திற்கு ‘கலைஞர் எனும் தாய்’ என்றுபுத்தகம் வெளியிட்டேன்.

ஆனால், நான் பொதுப் பணித் துறை அமைச்சராக இருக்கிறேன். எனக்கு அந்த நினைவில்லை. ஒருநாள் முதலமைச்சர் திடீரென்று அழைத்து,அய்யன் திருவள்ளுவர் சிலையை தலைவர் வைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வெள்ளிவிழா ஆண்டு. இந்த விழாவை சிறப்பாக நாம் செய்ய வேண்டும். இதற்குப் பின்னால், விவேகானந்தர் பாறையும் – வள்ளுவர் சிலை இருக்கும் இரண்டு பாறைகளும்இணைப்பதற்கு ஒரு பாலம் அமைக்கலாம் என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்று. ஆனால், திட்டமிட்டார்களேயொழிய அந்தப் பாலம் அறிவிப்போடு நின்றுவிட்டது. பிறகு, ஆட்சி வந்தவுடன் இப்படி ஒன்று இருக்கிறதே என்று, அந்த கோப்பு எடுத்து வர சொல்லி பார்த்தால், அறிவித்ததோடு அதை எப்படி கட்டுவது என்று ஒரு யோசனை இல்லாமலேயே அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அதற்குப் பிறகு, ஏன் நாம் அதை கட்டினால் என்ன? என்று ஒரு முடிவு செய்து, அதற்குரிய ஆர்கிடெக்சர் எல்லாம் வர வைத்து, ஒரு முறைக்கு பலமுறை டிஸ்கசன் சென்று, அதற்குப் பிறகு, அய்.அய்.டி. ஃப்ரொஃபசர் எல்லாம் வரச் சொல்லி, பிறகு அந்தத் திட்டமிடலை முதலமைச்சர் இடம் கொண்டு காண்பித்தோம்.

வள்ளுவர் சிலை – வெள்ளி விழாவில் கண்ணாடி பாலம்!
அப்போது முதலமைச்சர் என்ன சொன்னார் என்றால், நன்றாகத்தான் இருக்கிறது. நீங்கள் கடல் மேல் நடந்து செல்லப் போகிறீர்கள். ஏன், கடல் மேல் நடந்து செல்லும் போது, மையப் பகுதியில் நல்ல கடினமான உடையாத கண்ணாடிகளை போட்டீர்கள் என்றால், கீழே நடந்து போகும்போது அந்தப் பாலத்தில் அலை நன்றாகத் தெரியுமே என்று ஒரு யோசனை சொன்னார். அதைத்தான் இப்போது நீங்கள் கண்ணாடி பாலம்… கண்ணாடி பாலம் என்று சொல்கிறீர்கள். அதையும் அவர்தான் சொன்னார். அந்த பாலத்தையும் இப்போது கட்டும் பணிகளில் நாங்கள் இருக்கிறோம்.
இப்போது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, அந்தப் பாலம் திறந்தால் அந்தப் பாலத்திற்கு ஒரு சிறப்பு சேருமே. இடையில் இடையில் மழை. மழை மட்டும் என்று சொல்ல முடியாது. காற்றின் வேகமும் கடலில்தான் அதிகமாக இருக்கும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்போது அங்கு பணிகளை செய்யவே முடியாது. அவ்வப்போது தொய்வு ஏற்படும்.
இவ்வாறு வெள்ளி விழா ஆண்டில் நினைவகத்திற்கு வரும்போது, அந்தப் பாலத்தையும் திறந்து விட்டால் என்ன… அந்த எண்ணத்தில்தான் மறுநாளே அங்கு சென்று, எந்த அளவிற்குப் பாலம் இருக்கிறது என்று பார்த்து, அங்கிருப்பவர்களை கொஞ்சம் முடுக்கி விட்டு வந்திருக்கிறேன். இன்னும்இடைப்பட்ட நாட்களில் அந்தப் பணிகளை முடித்துவிட்டு, முதலமைச்சர் கரத்தால் திறந்து விடலாம் என்று ஒரு நம்பிக்கைதான்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.

நன்றி: ‘முரசொலி’, 31.12.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *