தந்தை பெரியார் தலைமை தாங்கி தீண்டாமையை எதிர்த்து இந்தியாவில் முதலாவதாக வெற்றி பெற்றது வைக்கம் போராட்டம்!
நாள்தோறும் வைக்கத்திற்குத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் கழகம் சார்பில் அல்ட்ரா டீலக்ஸ் சிறப்புப் பேருந்துகள் இரு முனைகளிலிருந்தும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்!
இந்தியாவில் தீண்டாமையை எதிர்த்து கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மையாரும் போராட்டத்தில் குதித்தனர். வைக்கத்தில் 141 நாட்கள் இருந்த பெரியார் 74 நாட்கள் சிறையில் இருந்தார். இறுதியாக தந்தை பெரியார் வெற்றி பெற்றார்.
கடந்த 12ஆம் தேதி வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழா வைக்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இணைந்து விழா எடுத்தது தனிச்சிறப்பு.
கடந்த சனி, ஞாயிறு (டிச.28, 29) இரு நாட்களிலும் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அகில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆம் தேசிய மாநாடு நடைபெற்றது.
நேற்று (29.12.2024) நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்றார்.
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமைச்சரிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
“வைக்கம் போராட்டம் சமூகப் புரட்சி வரலாற்றில் மிக மிக முக்கியமானது. வைக்கத்தைச் சுற்றுலாத் தலமாக அறிவித்திட வேண்டும்.
அதன் முதற்கட்டமாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் வைக்கத்திற்குப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டுகோள்” விடுத்தார். அமைச்சர் அதனை ஏற்றுக் கொண்டு மாநாட்டில் அறிவிப்புச் செய்தார். அதன் விவரம் மேலே: