ஏழுமலையானுக்கே நாமமா? உண்டியல் பணம் ஏப்பம்

viduthalai
2 Min Read

திருப்பதி, டிச.30- “2023-ஆம் ஆண்டு, திருப்பதி உண்டியலில் பணத்தை எண்ணும் போது வெளிநாட்டு பணத்தை திருடிய ரவிக்குமாரின் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது இந்திய மதிப்பில் 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

ஆனால், ரவிக்குமார் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அடுக்கு மாடி குடியிருப்பில் பல வீடுகளை வழங்கினார். சென்னையிலும் உள்ள அவரது சொத்துக்களும் கைமாறின.

தேவஸ்தானத்தில் சிறிய தொழிலாளியாக உள்ள ரவிக்குமார் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்?
“உயர்நிலை விசாரணை நடந்தால், இந்த ஊழல் வெளிக்கொண்டுவரப்பட்டு, அதில் தொடர்புடைய அதிகாரிகளை அம்பலப்படுத்தலாம். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தனியாரின் கைக்கு மாறியுள்ளன. முழு விசாரணை நடத்தி, இதற்கு மறைமுகமாக ஒத்துழைத்தவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்”, என பானுபிரகாஷ் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு
பிஜேபி எம்எல்ஏ மீது 2,481 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல்

பெங்களூரு, டிச.30- கருநாடக பாஜ சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா கரோனா காலத்தில் தன்னிடம் உதவி கேட்டு வந்த 40 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து காட்சிப் பதிவாக எடுத்துள்ளார். அந்த காட்சிப் பதிவைக் காட்டி அப்பெண்ணை மிரட்டி இரண்டு ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் முனிரத்னா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குற்றப் பத்திரிக்கை

பின்னர் வெளியே வந்த அவர் மீது காவல் துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் 2,481 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

வழக்குப் பதிவு

இந்த வழக்கில் தொடர்பாக பாஜ சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா, அவரது மூன்று கூட்டாளிகள் ஆர்.சுதாகர், பி.சிறீநிவாஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பி.அய்யன்னா ரெட்டி ஆகியோர் மீதும் கருநாடக சிஅய்டி மற்றும் எஸ்அய்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ‘பாஜ சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 40 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரது மூன்று கூட்டாளிகளான ஆர்.சுதாகர், பி.சிறீநிவாஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பி.அய்யன்னா ரெட்டி ஆகியோர் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை அழித்துள்ளனர். மேற்கண்ட குற்றப்பத்திரிகையில் 146 சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் 850 ஆவண ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்அய்.வி. தொற்று

சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா, பாலியல் தொற்று நோயான எயிட்சால் பாதிக்கப்பட்ட பெண்களை பயன்படுத்தி, தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்கி உள்ளார். இதற்காக பல பெண்களை பயன்படுத்தி உள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *