தமிழர் பண்பாட்டுத் திருநாளான பொங்கலை நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடி பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!

viduthalai
4 Min Read
*தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை 
வைக்கத்தில் சிறப்பாக நடத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு!
* அண்ணல் அம்பேத்கரை அவமதித்த  ஒன்றிய உள்துறை அமைச்சருக்குக் கண்டனம்!
தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள்
சென்னை, டிச.22 வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற நூற்றாண்டை வைக்கத்தில் சிறப்பாகக் கொண்டாடியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு உள்பட தி.மு.க. செயற்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” இன்று (22.12.2024) காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அதுபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் : 1
அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்து – அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சருக்கு
திமுக செயற்குழு கண்டனம்
அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் – அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய சபையில் எதிரொலித்து- இரவு பகலாக பாடுபட்டு – உலக அரங்கில் இந்திய ஜனநாயகம் ஒளிரும் வகையில் – வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி- மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்- அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகளின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஜனநாயகத்தின் திருக்கோவிலான நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றியிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு. எவரும் ஏற்கமுடியாத – எந்தக் காலத்திலும் நடைபெற்றிடாத ஒரு உள்துறை அமைச்சரின் பேச்சை திசை திருப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்கள் அதை விட கேலிக்கூத்தானது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 7
“வைக்கம் நூற்றாண்டு விழா”
“குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் ஜாதி பாகுபாடற்ற “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ள திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு
சமூக நீதிக்கும், தமிழ் மொழிக்கும் திராவிட மாடல் அரசு தொய்வின்றி தொண்டாற்றி வருகிறது. குலத் தொழிலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாது என்று கடுமையாக எதிர்த்து பிரதமருக்கும், அந்த துறை சார்ந்த ஒன்றிய அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ள திராவிட மாடல் அரசு, “விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் ஜாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டாத அனைத்து கைவினைஞர்களையும் உள்ளடக்கிய ‘கலைஞர் கைவினைத் திட்டத்தை’ தொடங்கி வைத்துள்ளதற்கும், “வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவை” தந்தை பெரியார் முன்னின்று போராடிய வைக்கத்தில் கேரள மாநில முதலமைச்சர் அவர்களுடன் கொண்டாடி – தந்தை பெரியாருக்கு அங்கே “புதுப்பிக்கப்பட்ட நினைவகம், நூலகம், கம்பீரமான சிலை” என முப்பெரும் சாதனைச் சின்னங்களை வைக்கத்தில் நிறுவி – தமிழ்நாட்டின் சமூக நீதிச் சுடரை வைக்கத்திற்குக் கொண்டு சென்று – அங்கே மாபெரும் விழா எடுத்து தந்தை பெரியாரின் புகழ்பாடி – இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட நதி நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பியிருப்பதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித் துக் கொள்கிறது.
தீர்மானம் : 9
தமிழர் பண்பாட்டுத் திருநாளாக பொங்கல் நன்னாளை
தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் கொண்டாடுவோம்.
இயற்கையைப் போற்றி, உழைப்பின் பெருமையை சிறப்பிக்கும் தமிழர் திருநாளான பொங்கல் நன்னாள் தமிழர்களின் பெருமைமிக்க திருவிழாவாகும். தமிழர்கள் மீது படையெடுப்பு நடத்திய கலாச்சாரங்களைத் தகர்த்தெறிந்து, தமிழர்களின் தனி அடையாளமாகவும், ஜாதி – மதம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்தும், தை முதல்நாள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் என்பது தமிழர்களின் மரபார்ந்த ஆண்டுக்கணக்கின் தொடக்கமாகவும் இருப்பதை தமிழ்ச் சான்றோர்கள் நிறுவியுள்ளனர். திராவிடப் பேரியக்கத் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பொங்கல் திருநாளைத் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக முன்னெடுத்து தமிழ்ச் சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கினர். அந்த உணர்வை மீண்டும் நிலைநாட்டிடும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத பிற ஆதிக்க கலாச்சாரங்களை முறியடிக்கும் முறையிலும் தை முதல் நாளன்று தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளைத் தமிழர் பண்பாட்டுத் திருநாளாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்குரிய கலை-இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.
என்பது உட்பட தி.மு.க. செயற்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *