‘திராவிட மாடல்’ ஆட்சி நீடிப்பதற்காக – யார் உங்களை எதிர்த்தாலும், அவர்களை எதிர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்!
எங்களை நாங்கள் தியாகம் செய்து கொள்கிறோம் – அது எங்களுக்காக அல்ல – பதவிக்காக அல்ல; திராவிட சமுதாயத்திற்காக!
ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஈரோடு, டிச.22 முதலமைச்சர் அவர்களே, உங்கள் ஆட்சி நீடிப்பதற்காக இந்தப் பட்டாளம் எப்போதும் தயாராக இருக்கும். யார் உங்களை எதிர்த்தாலும், அவர்களை எதிர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். எங்களை நாங்கள் தியாகம் செய்து கொள்கிறோம். அது எங்களுக்காக அல்ல – அவருக்காக அல்ல – பதவிக்காக அல்ல; திராவிட சமுதாயத்திற்காக – மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்குவதற்காக, அதனைச் செய்வோம், செய்வோம், செய்வோம் என்று சொல்லி சூளுரைப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா!
கடந்த 26.11.2024 அன்று மாலை ஈரோட்டில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
மகளிர் கேட்காமலேயே, நம்முடைய இன்றைய முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தியதன் காரணமாகத்தான், இன்றைக்கு மேயராக அம்மையார் இருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில்தான்
அதிக எண்ணிக்கையில் பெண் நீதிபதிகள்!
சட்டமன்றத்தில் பெண்கள் இருக்கிறார்கள்; அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிகமான பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். வடநாட்டில் பல இடங்களில் பெண் நீதிபதிகளே இல்லை.
பீகார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுப் போகின்றவர், ‘‘தமிழ்நாட்டில் சிறப்பாக உள்ளது போன்று நீதித்துறை, வேறு எந்த மாநிலத்திலும் இல்லை” என்று கூறுகிறார்.
திராவிட இயக்கம் சாதித்தது என்ன?
இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் எண்ணிக்கையை எடுத்துப் பாருங்கள். அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக நிறையப் பெண்கள் இருக்கி றார்கள். அதேபோன்று, காவல் துறை அதிகாரிகளாக பெண்கள் இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் யார் காரணம்?
இந்த இயக்கம் என்ன சாதித்தது?
நோக்கம், பெண்ணடிமையை ஒழிப்பது.
தாக்கம், பெரியாருடைய கொள்கைகள் – மாநாடுகள்.
ஆக்கம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சட்டங்கள்.
1929 இல் போடப்பட்ட தீர்மானம்!
1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், தந்தை பெரியார் அவர்கள் தீர்மானம் போடுகிறார்.
‘‘பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பது என்பது மட்டும் முக்கியமல்ல; காவல்துறையிலும், இராணுவத் துறையிலும் பெண்கள் வரவேண்டும்; பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும்” என்பதுதான் அந்தத் தீர்மானம்.
அந்தத் தீர்மானத்தைக் கண்டு, எல்லோரும் கேலி செய்து சிரித்தனர். ‘‘எங்கேயாவது இதுபோன்று நடக்குமா? பெண்கள், போலீஸ் வேலையை செய்ய முடியுமா?” என்று கேட்டார்கள்.
அப்படி கேட்டவர்கள், இன்றைக்கு எங்கே இருக்கி றார்கள் என்று நினைத்துப் பார்க்கவேண்டும்.
வாய்ப்புக் கொடுத்தால்
பெண்களால் எதையும் சாதிக்க முடியும்!
இன்றைக்கு, பெண்கள் காவல்துறையில் பல சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால், அவர்களால் எதையும் சாதிக்க முடியும்.
நகராட்சியில் தகராறு என்றவுடன், மேயர் அவர்கள் கீழே இறங்கிவிட்டாரே! இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அவரைப் பாராட்டி னேன்.
அடக்கம், ஒடுக்கம் என்பது மிகவும் முக்கியம் என்று சொல்லி பெண்கள் அடிமையாக இருக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் நினைத்தது.
பெரியார்தான் கேட்டார், ‘‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? என்று கேட்டார்.
அச்சம் என்றால் பயம்; எதற்குப் பயப்படவேண்டுமோ அதற்குப் பயப்படவேண்டும். அந்தப் பயம் இரண்டு பேருக்கும் இருக்கவேண்டாமா?
மடம் என்றால், அறிவில்லாமல் இருக்கவேண்டுமாம்.
நாணம், பெண்களுக்கு மட்டும்தான் வெட்கம் இருக்கவேண்டுமாம்.
பெண்கள் தலைநிமிர்ந்து பார்க்கக் கூடாது என்று சொன்னார்கள்!
நான் அடிக்கடி சொல்வது என்னவென்றால், இந்த நாட்டில் பெண்களுக்குத் திருமணம் என்றால், மணமேடைக்கு வரும் பெண்கள் – நூறாண்டுகளுக்கு முன்பு, சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பாக – பெண்கள் பக்குவமடைவதற்கு முன்பே, அவர்களுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்துவிடுவார்கள். மணமகன் யாரென்றுகூட அவர்களுக்குத் தெரியாது. தலையை குனிந்துகொண்டே இருப்பார்கள்.
திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அந்தப் பெண்ணுக்குப் பாடம் எடுப்பார்கள். ‘‘தலையை நிமிர்ந்து பார்த்தால், நீ திமிரான பெண் என்று சொல்வார்கள்; ஆகவே, நீ தலையை குனிந்துகொண்டே இருக்கவேண்டும்” என்று சொல்வார்கள்.
பெண்ணின் குனிந்த தலையை
நிமிர்த்தியவர்கள் இரண்டு பேர்!
குனிந்து கொண்டே இருந்த தலையை, அதை நிமிரும்படிச் செய்தவர்கள் இரண்டு பேர்தான், நம்முடைய நாட்டில்.
ஒருவர் பெரியார் – இன்னொருவர் போட்டோ கிராஃபர்.
ஒளிப்படம் எடுக்கும்பொழுது, ‘‘தலையை கொஞ்சம் உயர்த்திப் பாருங்கள், உயர்த்திப் பாருங்கள்’’ என்று சொல்வார்.
தலைகுனிந்து இருந்த பெண் சமுதாயத்திற்கு – நாட்டில் 50 சதவிகிதம் இருக்கின்ற பெண்க ளுக்காகத்தான் தந்தை பெரியார் பாடுபட்டர்.
மனித வளம் என்று சொல்கின்றீர்களே, அந்த மனித வளத்தில், இரண்டு கைகளுக்கும் சம பலம் இருக்கவேண்டாமா? இரண்டு கால்களுக்கும் சம பலம் இருக்கவேண்டாமா? ஒருபக்கம் இயங்கி, மறுபக்கம் இயங்கவில்லை என்றால், அது பக்கவாதம் அல்லவா?
கேட்டார் பெரியார், சிந்திக்க வைத்தார். இன்னுங் கேட்டால், தன்னை எதிர்த்தவர்கள்மீது கோபப்படாமல், பொறுமையாக பதில் சொன்னார் தந்தை பெரியார்.
‘‘இதோ பெரியாரில் பெரியார்!’’
‘‘இதோ பெரியாரில் பெரியார்” என்ற புத்தகத்தில், பட்டுக்கோட்டை தளபதி அழகிரி அவர்கள் ஒரு நிகழ்வை பதிவு செய்திருக்கிறார்.
விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த தந்தை பெரியாரை நோக்கி, கத்தியால் குத்த வேகமாக ஒருவர் ஓடி வந்தார். தொண்டர்கள் எல்லாம் அவரைத் தடுத்து நிறுத்தி, ஆவேசமாக அவரைத் தாக்க முற்பட்டனர். உடனே பெரியார் அவர்கள்,
‘‘அவரைத் தாக்கவேண்டாம்; அவரைப் பாதுகாப்பாக அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
‘‘திருந்து அல்லது திருத்து!’’
சுயமரியாதை இயக்கம் இரண்டு வார்த்தைகளைக் கொடுத்தது. அறிவு விடுதலை இயக்கம் என்று சொல்வ தற்கு என்ன அடையாளம் தெரியுமா நண்பர்களே, ‘‘திருந்து அல்லது திருத்து” என்பதுதான்.
நாங்கள் தவறு செய்தால், எங்களைத் திருத்துங்கள்; நாங்கள் திருத்திக் கொள்கிறோம். ஏனென்றால், எங்களுடைய முடிவுதான், கடைசி முடிவு என்று நாங்கள் சொல்லவில்லை.
நம்பு, நம்பு, நம்பு; நம்பாவிட்டால், நரகம் என்று நாங்கள் சொல்லவில்லை.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் பழமொழி ஒன்றைச் சொல்வார்கள், ‘‘நம்பினவனுக்கு நடராஜர்; நம்பாதவர்களுக்கு எமராஜர்” என்று. இப்படிச் சொன்னால், எப்படி பயப்படாமல் இருப்பார்கள்!
நம்பிக்கை என்பது அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டும்!
ஆகவே நண்பர்களே, நம்பிக்கை என்பதுகூட அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டுமே தவிர, அது வெறும் மூடநம்பிக்கையாக இருக்கக்கூடாது என்று சொன்ன இயக்கம் இந்த இயக்கம்.
அனைவருக்கும் அனைத்தும் என்று சொன்ன இயக்கம் இந்த இயக்கம்!
எனவே, அறிவுக்கு விடுதலை கொடுத்து – மனிதர்களுக்கு சம வாய்ப்பைக் கொடுத்து – அனைவருக்கும் அனைத்தும் என்று சொன்ன இயக்கம் இந்த இயக்கம்.
சமூகநீதி என்றால் என்ன?
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான். இது பார்ப்பனர்களுக்கும் சேர்த்துதான். அவர்க ளைத் தூக்கி கடலில் போடவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்களுடைய உரிமையை மறுக்கவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.
மூன்று சதவிகிதம் இருக்கிறீர்களா, அதன்படி மூன்று சதவிகித உரிமையை வாங்கிக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் நூறு சதவிகிதமும் உங்களுக்கு வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பசியேப்பக்காரனை பந்தியில் முன்னால் உட்கார வை; புளியேப்பக்காரனுக்குப் பிறகு இடம் கொடு என்று சொல்வதுதான் சமூகநீதி. இதைச் சொல்வதுதான் சுயமரியாதை இயக்கம்- இதைத்தான் பெரியார் அவர்கள் சொன்னார். இதற்காகத்தான் போராடுகிறோம். ஆனால், இன்னமும் போராடவேண்டி இருக்கிறது.
ஏனென்றால் ஜாதீய சிந்தனையை வைத்திருக்கி றார்கள். இன்றைய காலகட்டத்தில்கூட இறந்து போனவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டு போவதற்குப் பாதை இல்லை.
நம்முடைய அரசாங்கத்திற்கு இதை வேண்டு கோளாக வைக்கலாம். தீண்டாமை, சுடுகாட்டில் பேதம். இதைவிடக் கொடுமை இறந்து போனவரை தூக்கிக்கொண்டு போய் அடக்கம் செய்வதற்குப் பாதை கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்.
மாநில உரிமைப் பட்டியலில்
சுடுகாடு!
அரசமைப்புச் சட்டத்தில், சுடுகாடுகளையும் மாநில உரிமைப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.
மாநில அரசுக்கு நம்முடைய வேண்டுகோள் என்ன வென்றால், சுயமரியாதை இயக்க நூற்றாண்டில், ஒரு பெரிய சாதனையைச் செய்யவேண்டும். ‘திராவிட மாடல்’ அரசுக்கு எங்களுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், குறைந்தபட்சம் ஜாதி அடிப்படையில், கீழ்ஜாதி மக்கள் என்று கருதப்படுகிற அல்லது அழைக்கப்படுகின்ற மக்கள், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்குக்கூட இன்னமும் தடைகள் இருப்பதை நீக்கி, எல்லா இடங்களிலும் பொது சுடுகாடுகள் வரவேண்டும் – பொது இடங்கள் வரவேண்டும் என்பதுதான்.
ஆகவேதான் தோழர்களே, ஜாதி எந்த ரூபத்தில் இருந்தாலும், அதை நாம் எதிர்க்கவேண்டும்.
நம்மாட்களில் கொஞ்சம் பலகீனமாக இருக்கின்றவர்களை எதிரிகள் பயன்படுத்திக் கொள்வார்கள்!
இன்றைய எதிரிகள் மிகவும் சாமர்த்தியமான எதிரிகள் என்பதால், நம்மாட்களில் கொஞ்சம் பலகீனமாக இருக்கின்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ‘‘ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று ஒரு பக்கத்தில் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதிவாரியாக இட ஒதுக்கீடு கேட்கலாமா?” என்று கேட்க வைப்பார்கள்.
இவன் என்னமோ ஜாதி ஒழிப்புக்காரன் போன்று – இவன்தான் பூணூல் போட்டுக் கொண்டிருப்பவன்.
சுப.வீ. அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னாரே, ‘‘இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொன்னார், பூணூலை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, உதய சூரியனுக்குக் குத்து” என்று.
அப்பொழுதே அவருக்குத் தெரிந்திருக்கிறது; இவர்கள் காலத்திலும் பூணூலுக்கு ஆபத்து வரும் என்று.
ஆகவே, இன்னமும் ஜாதி இருக்கிறது. ஜாதித் தலைவர்கள், ஜாதிப் பெருமையைச் சொல்லச் சொல்கிறார்களே தவிர, அந்த மக்கள் உரிய பங்கைப் பெற்றார்களா? அய்.ஏ.எஸ். துறையில் இடம் பெற்றார்களா? என்பதையெல்லாம் கவனிப்பதில்லை.
நடைமுறைச் சட்டத்திற்காக நாம் போராடிக் கொண்டு வந்திருக்கின்றோம். நடுவில் கொண்டு வந்து அய்.ஏ.எஸ். அதிகாரிகளைப் போடுகிறார்கள், ஒப்பந்தக்காரர்களைக் போடுகிறார்கள் – இவையெல்லாம் இட ஒதுக்கீட்டை சட்டத்தில் கொடுத்தாலும், அது இல்லாமல் செய்வதற்காகத்தான் இதுபோன்று செய்கிறார்கள்.
ஜாதி அடிப்படை என்று கேட்கிறீர்களே, மறுபடியும் ஜாதியைக் கொண்டு வருவதற்கா? என்று கேள்வி கேட்டார்கள்.
தந்தை பெரியாரின் விளக்கம்!
பெரியார் அவர்கள் இதற்கு அழகாக விளக்கம் சொன்னார். ‘‘ஏனென்றால், எந்த வழியாக சிறைச்சாலைக்கு மனிதன் போனானோ, அந்த வழியாகத்தான் வெளியே வரவேண்டும்” என்றார்.
சிறைச்சாலையிலிருந்து கதவு வழியாகத்தான் வெளியே வரவேண்டும்; ஜன்னல் வழியாக ஏறி குதித்து வந்தால், சிறைச்சாலையிலிருந்து அவன் தப்பித்துச் சென்றவன்; மறுபடியும் அவன் தேடப்படுவான். ஆகவேதான், முறையாக வெளியே வரவேண்டும் என்றால், கதவு வழியாகத்தான் வரவேண்டும்.
வருணாசிரம தர்மம்தான் எங்களைப் படிக்கவிடாமல் தடுத்தது!
எனவே, ஜாதியால்தான் நாங்கள் படிக்காமல் ஆனோம்; அந்த வருணாசிரம தர்மம்தான் எங்களைத் தடுத்தது. அதனால் நாங்கள் ஒடுக்கப்பட்டோம். ஆகவே, ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு பெறவேண்டும் என்று சொல்கிறோம்.
எப்படி அம்மை நோயை ஒழிக்க, ஊசியின் மூலமாக அம்மைக் கிருமியை உடலில் செலுத்துகின்றோமோ, அதுபோல, ஜாதி ஒழியும்வரை, ஜாதியின் அடிப்படை யில்தான் இட ஒதுக்கீடு கொடுக்கப்படும்.
நோயை ஒழிக்கும் மருந்திலும்,
குறைந்த அளவு விஷம்!
பெரியார் சொன்ன உதாரணத்தைச் சொல்கிறேன் – ஆன்டிபயாடிக் மருந்தில், ஒரு மூலையில் ‘விஷம்‘ என்று அச்சடித்திருப்பார்கள். அது யாருக்கு என்றால், மருந்து சாப்பிடுபவருக்கு அல்ல; நோய்க் கிருமிக்கு. குறைந்த அளவு விஷம் இருந்தால்தான், அந்த விஷக் கிருமிகள் சாகும்.
அதுபோன்று, ஜாதி என்கிற விஷக்கிருமிக்கான ஆன்டிபயாடிக் தான், ஜாதி அடிப்படையில் கொண்டு வரக்கூடிய இட ஒதுக்கீடு என்பதை கொஞ்ச நாள்க ளுக்குப் பயன்படவேண்டும் என்று சொன்னார்.
பாலம் கட்டுவது – ஜாதி ஒழிப்பு!
இன்னொரு உதாரணம் சொல்லவேண்டுமானால், பாலம் கட்டுவது ஜாதி ஒழிப்பு என்பது. அந்தப் பாலம் கட்டும்வரை, அதற்குப் பக்கத்திலேயே ஒரு பாதை அமைத்துப் பயணம் செய்யவேண்டும்.