தமிழ்நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 20- தமிழ்நாட்டில் 1,071 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ. 27.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 18.12.2024 அன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த ஆரோக்கிய அமலி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டு தனது மகனை எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர். இதுதொடர்பான விசாரணைக்கு காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகள் அழிந்து விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உரிய வகையில் செயல்படுவதை உறுதி செய்யவும், கேமரா பதிவுகளைப் பாதுகாக்கவும் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு உள்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் முன் 18.12.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு உள்துறை இணைச் செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில், தமிழ்நாட்டில் 1,071 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், சில கேமராக்களை புதுப்பிக்கவும், பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கவும் ரூ. 27.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் 2 கட்டங்களாக, 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *