திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று (21.7.2023) பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் கணித ஆசிரியரும், மாணவர் மன்றத் தேர்தல் பொறுப்பாளருமான இ.அருண் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், அரசமைப்புச் சட்டக்குழு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கும், மாணவர் மன்றத் தலைவர், துணைத் தலைவர் விளையாட்டு அணிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் மன்றச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களுக்கும், அவர்களுக்கான ‘பேட்ஜ்’ அணிவித்து சிறப்பு செய்தார். பள்ளியின் மாணவர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவர் விஷால் தலைமையில் அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.