கடந்த 14ஆம் தேதி நடந்த அரசு உதவி வழக்குரைஞர் பணிக்கான தேர்வு ரத்து! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, டிச.18- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மறுதேர்வு 22.02.2025 அன்று ஓ.எம்.ஆர். முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குற்ற வழக்கு தொடர்புத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துனர் நிலை-2 பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையை 13.9.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான கணினிவழித் தேர்வு கடந்த 14ஆம் தேதி பிற்பகல் 15 மாவட்ட மய்யங்களில் 4,186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது.

சில தேர்வு மய்யங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வை முழுமையாக முடிக்க இயலவில்லை.
அதைத் தொடர்ந்து, தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்த வேண்டி தேர்வாணையத்திற்கு கோரிக்கைகள் வந்தன. தேர்வர்களின் கோரிக்கையை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து, அதை ஏற்று, அந்த பதவிக்காக கடந்த14ஆம் தேதியன்று நடைபெற்ற கணினிவழித் தேர்வை தேர்வாணையம் ரத்து செய்கிறது.

மேலும், ஏற்கெனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மறுதேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஒளிக்குறி உணரி (ஓ.எம்.ஆர்.) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும்.

மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர் தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *