திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 91ஆம் அகவையை நிறைவு செய்து. 2.12.2024 அன்று 92ஆம் அகவையில் அடி எடுத்து வைத்துள்ளார். (அவர்களின் பிறந்தநாள் 2.12.1933) ஆசிரியர் அவர்கட்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2.12.2024 அன்று ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளைக் கவனக்குறைவால் கவனிக்காமல் விட்டு விட்டேன். “தினத்தந்தி” நாளிதழில், 8.12.2024 அன்று ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வாழ்க்கை குறித்த சிறப்புக் கட்டுரை வந்தது. அதில் ஆசிரியர் அவர்களின் நேர்காணலும் வந்துள்ளது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்கும் சில நடைமுறைகளும், அரசியலில் அவரின் சுறுசுறுப்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடியவை.
இந்த அகவையிலும் காலையில் நடைப்பயிற்சி செய்கிறார். உணவுக் கட்டுப்பாட்டைச் கடைப்பிடிக்கிறார். ‘மீன், முட்டை உண்பேன்: முதுமை காரணமாக செரி மானச் சிக்கல் வரும் என்று இறைச்சியைக் குறைத்துக் கொண்டேன்” என்கிறார்.
சென்னையில் இருக்கும்போது அவருக்கான நேர நிர்வாகம் எப்படியெல்லாம் பிரிக்கப்பட்டுள்ளது என்றும், மாதத்தில் 15 நாளாவது வெளியூர் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன் என்றும், ‘‘தினத்தந்தி” நேர்காணலில் ஆசிரியர் வீரமணி அவர்கள் கூறியுள்ளார். மக்களுக்காக, சமூகத் துறையிலும். அரசியல் துறையிலும் உழைக்க முன்வரும் இளையோர் ஆசிரியர் வீரமணி அவர்களிட மிருந்து கற்றுக் கொள்ளவதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் இருக்கின்றன!
இன வரையறுப்பில் திராவிடர் கழகத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் இடையே இணைக்க முடியாத முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆரிய வர்ணாசிரம முறியடிப்பு, பார்ப்பனீய ஆதிக்க எதிர்ப்பு: ஜாதி ஆதிக்கமும் ஜாதி வேறுபாடும் அற்ற சமநிலைத் தமிழ்ச் சமூகம் அமைத்தல் போன்றவற்றில் திராவிடர் கழகத்திற்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கும் ஒத்தக் கருத்துகள் உள்ளன.
நம்முடைய மூத்த தலைவர் அய்யா இரா. நல்லக் கண்ணு அவர்கள் போல், நூறாண்டைக் கடந்து நல்ல உடல் நலத்தோடும். இளமைச் சிந்தனை ஆற்றலோடும் ஆசிரியர் வீரமணி அவர்கள் வாழத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.
– பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசிய பேரியக்கம்