சென்னை, டிச.16 இந்தியா வந்துள்ள இலங்கை அதிபரை தமிழ்நாடு அதிகாரிகள் சந்தித்து, தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்:
இலங்கை அதிபர் திசநாயகா 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமரையும், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேச இருக்கிறார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அல்லது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் டில்லிக்கு சென்று இலங்கை அதிபரை சந்திக்க வேண்டும்.
அப்போது, 1964ஆம் ஆண்டு வரை இந்தியோவோடு இருந்துவந்த கச்சத்தீவை இலங்கையோடு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு கொடுக்கப்பட்டதை, மீண்டும் இந்தியாவோடு இணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இந்திய நாடு விடுதலை அடைவதற்கு முன்பாகவே ராமநாதபுரம் விஜயரகுநாத சேதுபதி மன்னரும் பாஸ்கர சேதுபதி மன்னரும் கச்சத்தீவை தொடர்ந்து ஆண்டு வந்தார்கள். கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால், இன்று வரை கச்சத்தீவில் தங்கவும், கடற்கரை ஓரங்களில் படகுகளை நிறுத்திவிட்டு மீன்பிடிக்கும் வலைகளை சூரியஒளியில் உலரவைப்பதுட்ன், கடற்கரையில் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நிலைப்பாடுதான் இருந்து வந்தன.
தற்போது இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையாலும், கடற்படையாலும் தமிழ்நாடு மீனவர்கள் தினந்தோறும் தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தமிழர்களது மீன்பிடி வலைகளைக் கிழித்தும், படகுகளை சேதப்படுத்தியும் இருக்கிறார்கள். தமிழ்நாடு மீனவர்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு விடுதலை கிடைக்க, தமிழ்நாடு அரசு டில்லி சென்று இலங்கை அதிபரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.