முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் பெரியகருப்பன் வாழ்த்து!

viduthalai
2 Min Read

தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5 தேசிய விருதுகள்

சென்னை,டிச.14- மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட அய்ந்து தேசிய விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

விருது

மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் (NAFSCOB), மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும், குறிப்பாக கூட்டுறவு கடன்களை மேம்படுத்துவதற்கும் 19.5.1964 அன்று நிறுவப்பட்டது. இந்த இணையத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளும் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த தேசிய இணையம் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் சிறப்பாக செயல்படும், தலைமை வங்கி, மாவட்ட மத்திய வங்கி, கூட்டுறவு கடன் சங்கங்கள் என செயல்படும் மூன்றடுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தலைமை வங்கியின் கீழ் செயல்படும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் என இரண்டடுக்கு முறையில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த அமைப்பு 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளைக் கடந்து வைரவிழா கொண்டாடும் தருணத்தில் விருது வழங்கும் விழாவினை 26.11.2023 அன்று புதுடில்லியில் நடத்தியது. 2022-2023 மற்றும் 2023-2024 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், விருதினை ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிட, தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட அய்ந்து விருதுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பெற்றுக்கொண்டார்.

வாழ்த்து

இவ்விழாவில் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட அய்ந்து விருதுகளின் விவரங்கள்:
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் விவசாயக் கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையத்திற்கு 2023-2024ஆம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த பயிற்சி நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது.

மூன்றடுக்கு கூட்டுறவு கடன் கட்டமைப்பில் 2022-2023ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த சிறந்த செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசு தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.

குறுகிய கால கூட்டுறவு கடன் கட்டமைப்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த வங்கிச் சேவையினை வழங்கி வருவதற்காக தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. குறுகிய கால கூட்டுறவு கடன் கட்டமைப்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த வங்கிச் சேவையினை வழங்கி வருவதற்காக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள பூண்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 2022-2023ஆம் ஆண்டில் சிறந்த செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர். ந.சுப்பையன், மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *