சுடும் நெருப்பு – பெறும் பாடம்!

Viduthalai
3 Min Read

வாழ்வியல் சிந்தனைகள்

இதோ ஒரு ‘‘நெருப்புச் சிலிர்ப்புகள்’’ நூல்!
சென்னையில் நேற்று மழலை பேசி, தாய்ப்பாலோடு பகுத்தறிவு – சுயமரியாதைப் பாலும் ஊட்டி வளர்ந்த – இன்று வட அமெரிக்க மண்ணில் ஒரு சிறந்த கொள்கைக் ‘‘கவிதாயினியாக’’ மலர்ந்து வளர்ந் துள்ளார் கவிஞர் ம.வீ.கனிமொழி – அவர்களது சிறந்த நெருப்புக் கவிதைகளின் மலர்க்காடு இந்நூல்!
படித்தேன்; சுவைத்தேன்; வியந்தேன். நமது பிள்ளைகளிடம் பொதிந்துள்ள பல்வகைத் திறன்களின் வெளிச்சம், காலைக் கதிரவனின் ஒளியாகவும், இந்நூலில் பளிச்சிடுகிறது!

சமூகத்தின் விடியலுக்கு இவை நல்ல கருத்தியல் ஆயுதங்கள் ஆகும்!
நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பின்பற்றி சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே,
‘பாரதிதாசன் பரம்பரை’ என்று இளம் கவிஞர்கள் பலர் புரட்சிக் கவிஞர் போல் கவிதைகளை – கழகக் கொள்கை – விதைகளாக்கி திராவிட சமூக மறுமலர்ச்சிக்கு அடிகோலினார்கள். புரட்சிக் கவிஞர் மனந்திறந்து பாராட்டுவார்.
ஈரோடு ‘குடிஅரசு’ அலுவலகத்தில் பணியாற்றிய கலைஞர், அதை ‘‘ஈரோட்டுக் குரு குலவாசம்’’ என்பார்.
அப்போது அவர் – நெருப்புத் துகள்கள் போல சில கவிதைகளை எழுதி, தன்னுள் புதைந்திருந்த ‘கவிஞரை’ அடை யாளம் காட்டி, கவி உலகத்தின் நுழைவு வாயிலுக்குச் சென்றார்!

ஈரோட்டில் அந்நாளில் தந்தை பெரியாரின் அருந்தொண்டர்களில் இருவர் – ஒருவர்
ப. சண்முகவேலாயுதம், மற்றொருவர் லூர்துசாமி – (திராவிட மாணவர் கழக அந்நாள் அமைப் பாளர்களில் முதன்மையரான தவமணிராசன் அவர்களின் நண்பர்களும்கூட) ஆகியோர் இணைந்து ‘செலக்ட் புக்ஸ் ஸ்டால்’ என்ற ஒரு புதிய நூல் வெளியீட்டுக் கழகத்தினைத் துவக்கினர். அவர்களின் முதல் வெளியீடு ‘தந்தை பெரியார் தத்துவ விளக்கம்.’
அதன் மற்றொரு வெளியீடாக கலைஞரின் கவிதைத் தொகுப்பு களைக் கொண்ட அஞ்சல் அட்டை அளவு (Pocket Size) புத்தகமாக வெளியிட்டார்கள். திராவிடர் கழகக் கொடிச் சின்னமான கறுப்பு மத்தியில் சிவப்பு உள்ள அட்டை.
அந்த புத்தகத் தலைப்பு – கலைஞர் கொடுத்தது என்ன தெரியுமா?
‘கவிதையல்ல…!

வாழ்வியல் சிந்தனைகள்

இது மிகவும் தனித் தன்மை நிறைந்த விசித்திர தலைப்பு அல்லவா?
யாப்பு, அணி, இலக்கணம் பற்றி கவிதையை வைத்து யாரும் விமர்சனம் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பதில் கூறுவதுபோலவே, இவை ‘கவிதையல்ல…!’ என்று அதன் ஆசிரியரே தலைப்பிட்டு விட்டபிறகு எப்படி யார் எந்த குற்றப் பத்திரிகையையும் வாசிக்க முடியாதல்லவா?
அப்படி ஓர் அருமையான உத்தி – ஈரோட்டு குருகுல மாணவரின் அருமைத் தொடக்கம் – இன்றோ புதுக்கவிதைகள் எங்கும் பூத்து பூத்துக் குலுங்குகின்றன! காய்த்து காய்த்துக் கனிகளாகச் சுவை தருகின்றன
‘‘எம்மொழி செம்மொழி – எவ்வளவு வளமார் மொழி’’ என்பதை வெறும் வாய்ப்பறை கொட்டாமல் செயல், சாதனை, ஆற்றல், ஆளுமை மூலம் அகிலத்திற்கே பிரகடனப்படுத்தும் அருஞ்சாதனையாக ஓங்கி உயர்ந்துள்ளனர் நம் இளைய தலைமுறையினர்.
பொறியாளர்கள் எப்படியெல்லாம் பொங்கி எழுகிறார்கள் – பாருங்கள்.
இது ஒரு பானை – பசித்தவர்க்கு பசும்பால் கட்டி தயிர்ச் சோறு நிறைந்த பசி தீர்க்கும் ருசிமிகுந்த பானை!
அதிலிருந்து ஒரு சோறு – பதம் பார்க்கலாமா?

‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற தலைப்பில் ஓர் கவிதை
சாலையோரம் தூங்குகின்ற வயிறுகளின்
சத்தம் அம்பானி வீட்டுத் திருமண வரவேற்பில்
இசைக்கப்படும்
வாத்தியங்களால் கேட்காமல் போயிருக்கலாம்,
குளிரூட்டப்பட்ட
உணவுக் கூடங்களிலிருந்து
தூக்கி எறியப்படும்
மீந்தவற்றைத் தேடி உண்ணும்
நாய்கள் கொஞ்சம்
மிச்சம் வைக்கின்றன
காலி வயிறுகளுக்காக
செல்வத்துப் பயனே ஈதல்
என்ற புறநானூற்று வரியை
எவ்வீட்டின் முன்
குரைத்துக்
கொண்டிருக்கும்போது
கேட்டுக் கற்றுக் கொண்டனவோ?
இப்படி எத்தனை எத்தனை தேன் மலர்த் தெவிட்டாத் தீனிகள். அறிவுப் பசி இலக்கிய ஏக்கத்திற்கு – படித்து, பயன் பெற்று வாழ்த்துங்கள்.
நெருப்புப்பட்ட பின்பும் யாரே உறங்குவர்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *