கம்பீரமான நடை, நடுக்கமில்லாத தேகம், தெளிந்த நீரோடை போல தெளிவான பேச்சு, ‘மறதி’ என்ற வார்த்தையே தன்னுடைய அகராதியில் இல்லாத அளவிற்கு அபார நினைவாற்றல்… இப்படி 29 வயது இளைஞனுக்கான அத்தனை குணாதிசயங்களை, 92 வயதிலும் பெற்றிருக்கும் ஆரோக்கியமான மனிதர்தான், கி.வீரமணி.
திராவிடர் கழகத்தின் தலைவராக, துணிச்சல் நிறைந்த போராளியாக, விடுதலை பத்திரிகையின் ஆசிரியராக… என பல்வேறு பொறுப்புகளை தன் தோள் மீது சுமந்துக்கொண்டிருக்கும் கி.வீரமணி, 92 வயதிலும் சுறுசுறுப்பாக பணி செய்கிறார்.
இளைஞர்களுக்கு இணையான ஆற்றலோடு பணி செய்வதோடு, தன்னுடைய 80 ஆண்டு கால, அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங் களை, மிக துல்லியமாக எடுத்துக்கூறி அசர வைக்கிறார். அவரது ஆரோக்கியமும், அபார நினைவாற்றலும்தான், இந்த நேர்காணலின் அடித்தளமாக அமைந்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, நினைவாற்றல் ரகசியம் குறித்து, அவர் மனம் திறக்கிறார்.
*92 வயதிலும், பல்வேறு தரவுகளை, தக வல்களை துல்லிய மாகக் குறிப்பிட்டு பேசுவது எப்படி?
எதை பேசினாலும், ஆதாரத்தோடு பேச வேண்டும், தரவுகளை குறிப்பிட்டு பேச வேண்டும் என்பதை, தந்தை பெரியாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். பொது வாழ்க்கைக்குள் வந்தவுடன், கற்றுக்கொண்ட பாடம் அது. அன்று தொடங்கி இன்று வரை, அதே பழக்கம் தொடர்கிறது.
கரோனா கால நெருக்கடிகளை
எப்படி எதிர்கொண்டீர்கள்?
கரோனா காலகட்டத்தில்தான், என் குடும்பத் தினருடன் அதிக நேரத்தை செலவிட்டேன். அவர் களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டேன். அவர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்ந்தேன்.
இது ஒருபுறம் இருக்க, கரோனா கால கட்டத்தில் நிறைய தோழர்களை இழந்தோம். அதைவிட, இறந்த வர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் போனது, மிகப் பெரிய இழப்பு.
* 92 வயதிலும், இளமையாக செயல்படுவது எப்படி?
வயதை, 3 விதங்களில் கணக்கிடலாம். ஒன்று, பயலாஜிக்கல் எனப்படும் ‘ஹிஸ்டாரிக்கல் ஏஜ்’. பிறந்த வருடத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும், வயது கணக்கீட்டு முறை. இது தான், பலரும் அறிந்த வயது கணக்கீட்டு முறை.
இரண்டாவது, உடல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் ‘பிசியாலஜி’ முறை. உதாரணத் திற்கு, 20 வயது இளைஞன், நரைமுடி,உடல் பருமனான தோற்றத்துடன் வயதான மனிதரை போல மெதுவாக இயங்குவதையும் பார்த் திருப்போம். அதேசமயம், 60 வயது நபர் மெல்லிய தேகத்துடன், இளைஞனை போல சுறுசுறுப்பாக இயங்குவதை யும் பார்த்திருப்போம்.
அவர்களின் உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, உடல் கூறுகள் இவையே, ‘பிசியாலஜி’ வயதை தீர் மானிக்கும். ஜீன்களும் ஒரு காரணமாக இருக்க லாம். இவ்விரண்டை தாண்டி, மூன்றாவதாக ‘சைகாலஜிக்கல் ஏஜ்’ ஒன்று உள்ளது. இது மன வலிமையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். உதாரணத்திற்கு, அதிகாரத்தில் இருக்கும் வரை உதவியாளர், டிரைவர் போன்றவர்களின் உதவியுடன் மிக வலிமையானவர்களாக உணருபவர்கள், பணி ஓய்விற்கு பிறகு படை பலம் இழந்ததை போல மனதளவில் சுணங்கிவிடுவார்கள். இந்த சுணக்கம், நம் முடைய உடல் மொழியிலும் வெளிப்படும்.
ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே, மிகவும் எளிமை யானவன். உதவியாளர் கூட வைத்துக் கொண்டது இல்லை. எனக்கு தேவையானவற்றை நானே சுமக்கிறேன். எனக்கான வேலைகளை நானே செய்கிறேன். அதனால்,மனதளவிலும் (சைகாலஜி) வலிமையாக இருக்கிறேன். 10 வயது முதலே, பெரியாருடன் இணைந்து பல போராட்ட களங்களை சந்தித்த தால் உடல் ரீதியாகவும் (பிசியாலஜி) உறுதியாக இருக்கிறேன். இதன் காரணமாகவே பயலாஜிக்கல் வயது கூடினாலும், சுறுசுறுப்பாக இயங்குகிறேன்.
பிரதமர், முதல்-அமைச்சர்கள் போன்றவர்களுடன்
நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்
அவர்களின் ஆளுமை பற்றி…
காமராஜர்: அரசியல் தலைவர்கள் போன்று தந்திரமாக பேச தெரியாது. எதுவாக இருந்தாலும், மனதில் தோன்றியதை ‘பளிச்’ என பேசி விடுவார். சுருக்கமாக, அழுத்தமாக பதில் கொடுப்பார்.
அண்ணா: நிதானமானவர். ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பவர். ஆனால் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பவர். எதிரிகளை நண்பர்களாக மாற்றுபவர்.
கருணாநிதி: நகைச்சுவை உணர்வாளர். கேள்விகளுக்கு ‘பட்டென’ பதில் கொடுக்கக்கூடியவர். கடுமையான உழைப்பாளி. ‘குயிக் டெசிஷன்’ எனப்படும் விரைந்து முடிவெடுப்பவர். .
எம்.ஜி.ஆர்: தன்னுடைய முடிவில் தவறு இருந்தால் அதை திருத்திக்கொள்ளும் நல்ல மனிதர்
ஜெயலலிதா: தன்னுடைய முடிவில், இறுதிவரை பிடிவாதமாக இருப்பவர். விளைவுகளை யோசிக்காமல் தைரியமாக முடிவெடுப்பவர். அசாத்திய தைரியசாலி.
ஸ்டாலின்: கனிவானவர். அவரது முகத்தை பார்த்து, என்ன நினைக்கிறார் என்பதை கணித்து விட முடியாது. எல்லா தரப்பு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்.
வி.பி.சிங்: நிதானமாக, தெளிவாக, ஆழமாக பேசக்கூடியவர். அவரை போன்று நாணயமான, ஆழமான அரசியல்வாதியை பார்ப்பது அரிது.
இவை அனைத்துமே பொது வாழ்க்கையின் பயனாக கிடைத்த அனுபவங்கள். இதை அனுபவம் என் பதை விட, கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்றே சொல்லவேண்டும்.
*உங்களுடைய ஒருநாள் வாழ்க்கை முறை?
பொது வாழ்க்கையில் இருப்பதால், ஒரு மாதத்தில் குறைந்தது 15 நாட்களாவது சுற்றுப்பய ணம் சென்றுவிடுவேன். வெவ்வேறு ஊர்களுக்கு சுற்றுப்பயணம்,மேற்கொள்வதால் காலை உணவு ஒரு ஊரிலும், மதியம் உணவு வேறு ஊரிலும் சாப்பிட வேண்டிய சூழல் இருக்கும். சுற்றுப் பய ணத்திற்கு இடையே, காலை அல்லது மாலை நேரங்களில் விழாக்கள், திருமண நிகழ்ச்சி களி லும் பங்கேற்க வேண்டும்.
சென்னையில் இருக்கும் நாட்களில், காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வேன். மாறுபட்ட கருத் துடைய செய்தித் தாள்கள், வார புத்தகங் களை படித்து விடுவேன். விடுதலை எனும் கருத்தியல் பத்திரிகையின் ஆசிரியராக இருப்பதால், அதற்கான தலையங்க கட்டு ரைகளை வீட்டிலேயே தயாரித்து விடுவேன். என்னுடைய வீடு அடையாறு பகுதியில் இருப்பதால், அங்கிருந்து பெரியார் திடலுக்கு கார் பயணமாக வரும் போதே, சில அறிக்கைகள், தலை யங்க கட்டுரை, கேள்வி- பதில் போன்றவற்றை எழுதிவிடுவேன். அய்-பாடில் செய்திகள் படிப்பது, இ-மெயில் அனுப்புவது போன்ற பணி களையும் முடித்துவிடுவேன்.
அலுவலகத்தில் நட்பு ரீதியாக, கொள்கை ரீதியாக சந்திக்க வருப வர்களை சந்திப்பது உண்டு. பெரும்பாலும், என் அறையின் கதவுகள் திறந்தே இருக்கும். மதிய சாப்பாட்டிற்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுப்பேன். ஏனெனில் 1991-ம் ஆண்டில் இதய அறுவை சிகிச்சையும், அடுத்த சில வருடங் களில் ‘அப்ராசிவ்’ எனப்படும் இதய துடிப்பு சீராக்கும் சிகிச்சையும் மேற்கொண்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய் வெடுப்பேன்.
மாலை நேரங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடைப்பயிற்சி செய்வேன். இரவு 11 மணி வரை விழித்திருந்து மற்ற பணிகளை செய்வேன். உறங்க செல்வதற்கு முன்பு, குறைந்தது 10 பக் கங்களையாவது வாசித்துவிடுவேன். சில நேரங்கள், 10 பக்கம் என்பது, புத்தக சுவையின் காரணமாக முழு புத்தக வாசிப்பாகக்கூட மாறிவிடும்.
*உணவு கட்டுப்பாடுகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்….
எந்தவிதமான உணவு கட்டுப்பாடும் கிடையாது. பயணங்களின்போது கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவேன். காய்கறி உணவுகள் ரொம்ப பிடிக்கும். முட்டை சாப்பிடுவேன். நான் கடலூரில் பிறந்தவன் என்பதால், மீன் உட்பட கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். ஆரம்பத்தில் இறைச்சியும் பிடித்தமான உணவுதான்.
ஆனால் முதுமையின் காரணமாக செரிமான பிரச்சி னைகள் ஏற்படாமல் இருக்க, இறைச்சியை குறைத்து விட்டேன்.
*உங்களுடைய பொழுதுபோக்கு?
நான் பெரியாரை ரோல் மாடலாக கொண்டு வளர்ந்தவன். அதனால் பொது வாழ்க்கையை தாண்டி, வேறு ஆசைகளில் எனக்கு நாட்டம் இல்லை. பொழுதுபோக்கு என் றால், புத்தகம் வாசிக்க பிடிக்கும். இதுவும் பெரியா ரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான். வெளிநாடுக ளுக்கு செல்லும்போதெல்லாம், அந்தந்த நாடு களில் மிகப்பெரிய நூலகங்கள் எங்கு இருக் கின்றன என்பதை அறிந்து கொண்டு, சென்று வருவேன். நூலகங்கள், புத்தக கடைகளில் இருக்கும் புதுமையான புத்தகங்களை வாங்கி புரட்டி விடுவேன். வாழ்வியல் கருத்துகளை அதிகம் வாசிப்பேன். வாசிப்பு விதைகளை மற்ற வர்கள் மனதிலும் விதைப்பதற்காக, ‘வாழ்வியல் சிந்தனை’ என்ற தலைப்பில், என்னை கவர்ந்த புத்தகங்கள் பற்றிய விமர்சனங்களையும் எழுதி வருகிறேன்.
* மறக்க முடியாத தருணம்?
இந்த கேள்விக்கு பலரும் மகிழ்ச்சியான தருணங்களை குறிப்பிடுவார்கள். ஆனால் நான் ‘மிசா’ காலகட்டத்தில் சிறையில் அனுபவித்த கொடுமைகளைதான் மறக்கமுடியாத தருணங்களாக குறிப்பிட விரும்புகிறேன்.
மிசா காலகட்டத்தில் அனுபவித்த கொடுமைகள் சொல்லிமாளாது. பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளா னோம். அதைவிட மோசமான அனுபவம் வேறு எந்த சிறைச் சாலைகளிலும் அரங்கேறாது என்பதால், மிசா அனுபவம் என்னை பக்குவப்படுத்தியது, என்னுள் இருந்த போராட்ட குணத்தை அதிகமாக்கியது.
* ரொம்ப பிடித்த புத்தகம்?
‘இனி வரும் உலகம்’, ‘பெண் ஏன் அடிமையானாள்’… இப்படி பெரியார் சிந்தனை, பெரியார் கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும்.
*உங்களுடைய நட்பு பற்றி கூறுங்கள்…
கட்சிக்குள் மிகப் பெரிய நட்பு வட்டம் உண்டு. ஆனால் கட்சிக்கு அப்பாற்பட்ட நட்பு வட்டம், வெகு குறைவுதான். என்னுடன் படித்த நண்பர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கி றேன். ஆனால் அவர்கள் அனைவரும் உயர் பதவி களில் இருப்பதால், அவர்களின் நலன் கருதி நான் நெருங்கிப் பழகுவதில்லை. ஆனால் அவர்களுட னான நட்புறவை என்றுமே மறந்ததில்லை.
* மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் விஷயம் எது?
நண்பர்களை பெருக்கிக்கொண்டு, அடிக்கடி நண்பர் களை சந்தித்துக்கொண்டு, பழைய அனு பவங்களை பகிரும்போதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வயதை கடந்த உற்சாகம் பெருக்கெடுக்கும்.
தனி வாழ்க்கை பற்றி கூறுங்கள்…
தனி வாழ்க்கை என்பது, வெகு குறைவு. திரைப்படங்கள், சீரியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்… இவைகளை விரும்புவதில்லை.
10 வயதில் பொது வாழ்க்கையில் நுழைந்த போது, அதை என்னுடைய பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு என்னுடைய மனைவி, குழந்தைகளும் ஏற்றுக் கொண்டனர்.
என்னுடைய குடும்பத்தை, என் மனைவி வழி நடத்துகிறார். அவரே குழந்தைகளை படிக்க வைத்து, கவனித்து கொண்டார். பெரி யார் முன்னின்று நடத்திய திருமணம் என்ப தாலும், என்னுடைய மனைவிக்கும் திராவிட கொள்கையில் ஈடுபாடு இருப்பதாலும், எங்க ளுக்கு இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அதனால் எனக்கு குருதி உறவுகளை விட, கொள்கை உறவுகள்தான் அதிகம்.
நன்றி: ‘தினத்தந்தி’ ஞாயிறுமலர் (8.12.2024)