பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் நாள் – சிறப்புக் கருத்தரங்கம்

viduthalai
3 Min Read

திருச்சி, டிச.5- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு 30.11.2024 அன்று நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா, குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பெரியார் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் 80 மாணவர்களுக்கு ரூ.8,37,250/- ரூபாய் கல்வி உதவித்தொகையும், தமிழச் தலைவரின் 92ஆவது பிறந்தநாளினை மய்யப்படுத்தும் விதமாக கலைஞர் கருணாநிதி நூலகத்திற்கு ரூ.20,160/-மதிப்புள்ள 92 புத்தகங்களும் திராளி மாணவர்கழகத்தில் 92 புதிய உறுப்பினர்கள் இணைந்துறுதி மொழி ஏற்றல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 1.12.2024 அன்று பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் திருவெறும்பூரில் பொது மருத்துவ முகாம் மற்றும் மார்பகம், கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மருத்துவப் பரிசோதனை

தமிழர் தலைவரின் பிறந்தநாளான 2.12.2024 அன்று காலை 8 மணியளவில் பெரியார் மருந்தியல் கல்லூரி பணித்தோழர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 3.30 மணியவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வழிகாட்டுதலில் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி சி. ஆ. பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியர் மருத்துவர் சரோ தங்க சங்கீதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்து உரையாற்றினார். அவர் தமது உரையில் மிகப்பெரிய தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேடையில் நிற்பதற்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கும் நிர்வாகத்திற்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பெரியாரியக் கொள்கைகளால்…

1975லேயே பெரியாரியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தமது தந்தையார் தங்கராஜ் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று தமது இணையரின் பெயரான சரோஜா என்ற பெயரை தலைப்பெழுத்தின் முதலிலும் தம்முனை பெயரை இரண்டாவதாகவும் வைத்து புரட்சி செய்தவர் தமது தந்தையார் என்றும் இப்பெயரை பெற்றதற்கு தாம் பெருமையடைவதாகவும் தெரிவித்துக் கொண்டார்.

அன்புடனும் அரவணைப்புடனும்

சமுதாயத்தில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களை புறக்கணிக்காமால் அவர்களை அன்புடனும் அரவணைப்புடனும் நடத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும், தகாத பாலியல் உறவு, முறையில்லா இரத்த பரிமாற்றம். போதை ஊசிகள், எய்ட்ஸ் பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்கு இப்படி பல முறைகளில் எய்ட்ஸ் நோய் பரவுகிறது. முற்றிலும் குணப்படுத்த முடியாத நோயாக இருந்தாலும் அவர்களின் ஆயுளை நீட்டிக்கக்கூடிய மருத்துவ வளர்ச்சிகள் பெருகியிருக்கின்றது.

மருத்துவப் பாதுகாப்புடன்…

இந்நோயினை முற்றிலும் ஒழிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிப்புக்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் மருத்துவ பரிசோதனைக் கூட மாணவர்கள் இரத்த மாதிரிகளை சேகரிக்கும் போது மிகுந்த பாதுகாப்புடன் சேகரிக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.
2030க்குள் எய்ட்ஸ் இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நமது நாட்டின் கனவை நனவாக்க மருந்தாளுநர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்த பல தகவல்களை சிறப்பாக விளக்கினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறைத் தலைவர் பேரா. க.உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்த இக்கருத்தரங்கிற்கு முனைவர் டெபி ஆன் ஆப்ரஹாம் வரவேற்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமா பேகம் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *