நெகிழிக் குப்பைகள் நம் சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கின்றன. மொத்த நெகிழிக் குப்பையில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மற்றவை நிலத்தில் புதைக்கப்படுவதாலும், கடலில் கொட்டப்படுவதாலும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
மண்ணில் புதைக்கப்படும் நெகிழிகளில் 33 சதவீதம் பாலிஸ்டிரீன் (Polystyrene) வகையைச் சார்ந்தவை. கட்டுமானத்திலும், பேக்கிங்கிலும் பயன்படுபவை இவையே. இவற்றை மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம் என்பதால் இவற்றில் 1 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதனால் இவற்றைப் பயனுள்ள பொருட்களாக மாற்ற ஆய்வுகள் நடந்து வருகின்றன.
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி இதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளார். மின் வேதியியல் முறையில் பாலிஸ்டிரீனைப் பயனுள்ள பொருட்களாக மாற்றியுள்ளார். இதற்கு வினையூக்கியாக இரும்பைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
இரும்பு மிகவும் சுலபமாகக் கிடைக்கக்கூடியது, விலை குறைவானது என்பதால் இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் மிகக் குறைவான பொருட்செலவில் செய்துவிடலாம்.
இந்த வேதிவினை வாயிலாகக் கிடைக்கும் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இந்தச் செயல்முறையில் கிடைக்கும் மற்றோர் உப பொருளான பென்சாயிக் அமிலத்தை வாசனைத் திரவியங்களில் உபயோகிக்கலாம்.
இவ்வாறு மண்ணைக் கெடுக்கும் நெகிழியைக் குறைவான செலவில் பயனுள்ள பொருளாக மாற்றும் இந்தப் புதிய முறை நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.