நமது பூமியில் இருந்து 520 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு புது கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிக இளமையான கோள்களில் இதுவும் ஒன்று. அமெரிக்காவில் உள்ள வட கரோலினா பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நாசாவின் தொலைநோக்கி கொண்டு இதை முதலில் கண்டுள்ளார்கள்.
இந்தக் கோள் நமது பூமியை விடப் பெரியது. இதனுடைய விட்டம் நம்முடைய பூமியின் விட்டத்தைப் போன்று பத்து மடங்கு உள்ளது. வியாழன் கோளின் நிறையில் மூன்றில் ஒரு பங்கு நிறையைக் கொண்டுள்ளது.
இந்தக் கோள் ஒரு குள்ள நட்சத்திரத்தை வெறும் ஒன்பதே நாட்களில் சுற்றி வருகிறது. ஒரு நட்சத்திரத்திற்கு இவ்வளவு அருகில் கூட ஒரு கோள் உருவாகுமா என்று விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தக் கோள் உருவாகி வெறும் 30 லட்சம் ஆண்டுகள் தான் ஆகின்றன. இதனால் தான் இதனை மிகவும் இளமையான கோள்களில் ஒன்றாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நமது பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கோளையும் அதனுடைய நட்சத்திரத்தையும் சுற்றி வாயுக்களும் துகள்களும் வட்டமிடுகின்றன.
இதை வைத்தே இவற்றை இன்னும் முழுமையாக உருவாகாதவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோளை ஆராய்வதன் வாயிலாக நம்முடைய பூமி எவ்வாறு உருவாகியிருக்கும் என்பது குறித்த சில புரிதல்களை நாம் பெறலாம்.