உணவெது? மருந்தெது?
உடற் சோதனைகள் எதுவெது?
உண்மை எது? பொய்யெது?
உறவை வளர்ப்பதெது?
முறைப்படுத்தி வாழ்வியலில்
முப்போதும் தொகுத்தளிப்பார்
எப்போதும் சாலப்பரிந்த,
எம் தலைவர் ஆசிரியர்!
மாத்திரை தரும் பக்கக்கேடாய்
தற்போது வந்த செய்தியும்
தப்பாமல் தந்தார் உடனறிய…
பயன்படுத்தக்கூடும் யாருமென
பரிதவிக்கும் அக்கறையில்…
ஒரு காது மருத்துவருக்கும்
இருகாது உடலுக்கும்
மறு(ற)க்காது கொடுங்களென
கருத்தோடு செய்தி சொல்லி
நலத்தோடு வாழவைக்கும்
நல் மனத்தார் ஆசிரியர்,
வளத்தோடு நாடு வாழத்தான்
வருந்துன்பம் போக்கத்தான்
களத்தில் கவனமாய் நிற்கிறார்!
சிகிச்சைக்காய்ப் பலமுறை
கூராயுதங்கள் உடலைக்
கிழித்துத் தைத்தாலும்,
கயவர் சிலர் தாக்கி
கண் நரம்பு சிதைந்து
குருதி வழிந்தாலும்,
முடியாதென மூலையில்
முடங்கியது கிடையாது!
எந்நிலையிலும் வருவார் திடலுக்கு!
விஸ்வகர்மா போஜனா போன்ற
கண்ணிவெடிகள் கண்டெடுப்பார்,
பெரியார் கண்ணாடியாலே!
ஒரே நாடு ஒரே தேர்தலெனில்
ஒரே ஜாதி ஏனில்லை?
ஒரே கேள்வி கேட்டார்
ஒருவரிடமும் பதிலில்லை!
அறிவூட்டும் அறிக்கைகளால்
அரசியலைச் சுழல வைப்பார் !
தலைவர் முதல் தொண்டர் வரை
அணைத்திணைத்து அன்பு புரிவார்!
திராவிடத்தை அடைகாக்கும்
தமிழ் நிலத்தின் தாயாம்
தலைவருக்கு அகவை
தொடங்கும்
தொண்ணூற்று இரண்டு!
இன எதிரிகள் பார்க்கின்றார்கள்
இன்னமும் மிரண்டு!
தொண்டறத்துக்கு அவர்தானே
அழுத்தமான சான்று!
– இசையின்பன், சென்னை
தொண்ணூற்று இரண்டு – தொண்டறத்தின் சான்று!

Leave a Comment