சென்னை, டிச.4 ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். குடும்ப ஊதியம் பெறுபவர்களுக்கான பட்டியலில் இதுவரை குடும்பத்தில் இருக்கும் மகள் சேர்க்கப்பட முடியாது. குடும்பத்தில் உள்ள மனைவி மட்டுமே சேர்க்கப்பட வாய்ப்பு இருந்தது. அப்படி இருக்க மகள் பெயரை இனிமேல் இந்த பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஒன்றிய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021இன் கீழ், ஓய்வூதியம் பெறக்கூடிய அரசுப் பணியில் ஒருவர் சேரும்போதும் ஓய்வுபெறுவதற்கு முன்பும் தங்கள் மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாற்றுத் திறன் உடன்பிறந்தவர்களின் பெயர்கள் உள்ளிட்ட குடும்ப விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விவரங்கள் படிவம் 4இல் அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்.
இதில் இத்தனை காலம் மகள் பெயரை சேர்க்க முடியாது. புதிய விதி திருத்தங்கள் படி, மகள் பெயரை இனிமேல் இந்த பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகள் நேரடியாக ஓய்வூதியம் பெற அனுமதிக்கப்பட மாட்டார் என்ற விதி எப்போதும் போல தொடரும். ஓய்வூதியம் பெறுபவரின் மரணத்திற்கு பின்பே.. அதை பெற தகுதியாக தேர்வு செய்யப்படுவார்.
ஓய்வூதியம்: இதற்கு இடையில்தான் ஒன்றிய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக வைக்கும் கோரிக்கைகள், விண்ணப்பங்களை உடனே விசாரித்து தீர்வு அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, சிசிஎஸ் (CCS) (ஓய்வூதியம்) விதிகள், 2021 இல் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு நிதி அமைச்சகத்தின் மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை மத்திய வாரியம் (செலவு ஒருங்கிணைப்புப் பிரிவு) உத்தரவிட்டு உள்ளது. 2.12.2024 அன்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதாவது அரசு விதிகளில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஓய்வூதியம் வழங்க காலக்கெடு:
அரசு விதிகளின்படி,
1.ஒன்றிய அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே, சேவைப் பதிவேடுகளைச் சரிபார்த்தல் மற்றும் இதர ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
2. ஒன்றிய அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் தேவையான படிவங்களை அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. அலுவலகத்தின் தலைவர் ஓய்வூதிய விவரங்களை ஓய்வூதிய கணக்கியல் அலுவலகங்களுக்கு (PAOs) ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அனுப்ப வேண்டும்.
4. அதன்பின் ஓய்வூதிய கணக்கியல் அலுவலகங்கள் ஓய்வூதிய கொடுப்பு ஆணையை (பிபிஓ) வழங்க வேண்டும்.
5. ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத் திற்கு முன்பு மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகத்திற்கு (சிபிஏஓ) எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்படும், எப்படி வழங்கப்படும், எந்த தேதியில் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும்.
ஒன்றிய அரசு ஊழியர்கள் முறையாக ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்யும் வகையில்.. மேற்கண்ட டைம்லைனை எல்லோரும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது. நாடு முழுக்க உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
2024-2025 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் ஒன்றிய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற பின்வரும் விவரங்களை அளிக்க வேண்டி இருக்கும்.
1. ஓய்வூதியம் பெறுபவரின் பெயர்
2. ஓய்வு பெறும் தேதி
3. ஓய்வூதியதாரர் அலுவலகத் தலைவரிடம் ஆவணங்களைச் அனுப்பிய தேதி (ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு)
4. ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகங்களுக்கு அலுவலகத் தலைவர் ஓய்வூதிய வழக்கை சமர்ப்பித்த தேதி (4 மாதங்களுக்கு முன்பு)
5. ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகம் மூலம் ஓய்வூதியத்தை ஆய்வு செய்து, அதை மத்திய ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகத்திற்கு அனுப்புதல் (ஓய்வு தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட வேண்டும்)
ஓய்வூதிய மாற்றம்: இது போக பென்ஷன் ஆன் ஹையர் வேஜஸ் எனப்படும் அதிக ஊதிய (PoWH) ஓய்வூதிய திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள 97,640 பி.எச். (PF) (Provident Fund) உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கான ஓய்வூதியத் தொகை வழங்கப்பட உள்ளது.