பெரியார் சிலையை உடைப்பேன் என்ற எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை

2 Min Read

சென்னை, டிச. 2- பெரியார் சிலையை உடைப்பேன் எனவும், தி.மு.க. மக்களவை உறுபபினர் கனிமொழியை விமர்சனம் செய்த தாகவும் தமிழ்நாடு பா.ஜ.க. ஒருங் கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில், அவரை குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகாரில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச். ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்குகளின் விசாரணையையும் முடிக்க சென்னை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெய வேல் முன் நடைபெற்றது. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், மக்களவை உறுப்பினர் கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் எச். ராஜா வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14-ஆம் தேதி தள்ளி வைத்த நீதிபதி ஜெயவேல், இந்த இரண்டு வழக்குகளிலும் இன்று (2.12.2024) தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், எச். ராஜா மீதான புகார் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட இரு பதிவுகளும் எச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டது. எனவே எச். ராஜா இரண்டு வழக்கிலும் குற்றவாளி என கருதப்படுகிறார் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பு அளித்துள்ளார்.
மேலும், எச்.ராஜாவுக்கு, இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம் சிறைத் தண்டனையும், இரு வழக்கிலும் தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பின்னர் எச்.ராஜா மேல் முறையீடு செய்ய வாய்ப்பளித்து சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *