டிச.2 சுயமரியாதை நாள் – ஆசிரியர் பிறந்தநாள் பதிவு

Viduthalai
12 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியரின் 92ஆவது பிறந்தநாளை முன்னிட்டு
உலகெங்கும் பரந்து வாழும் தோழர்களின் வாழ்த்துப் பகிர்வுகளைப் பார்க்கலாம்
தொகுப்பு: வி.சி.வில்வம்

சமூக மேம்பாட்டு அறப்பணிக்கு முன்னத்தியேர்

சிறப்புக் கட்டுரை
எனது ஆய்வு மற்றும் ஆசிரியர் பணியில் தொடர்ச்சி யாகப் பணிச்சுமை ஏற்படும் போது மனம் சோர்வுறும். அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்ளும் இருவரில் ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் கலைஞர். குறிப்பாக ஆசிரியரின் கம்பீரம் நிறைந்த குரலைக் கேட்டால் போதும் நமக்கு உற்சாகத் தேன் அருந்தியது போல் இருக்கும்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தப் புத்தக வெளியீட்டு விழாவில், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஆசிரியரை அழைத்த போது சிறப்பாகச் செய்து விடலாம் என உறுதி அளித்தார். அதுதான் ஆசிரியர் உடனான எனது முதல் சந்திப்பு!
சென்னை அன்பகத்தில் நடந்த அவ்விழாவில் ஆசிரியர் அவர்கள் ஏறத்தாழ மூன்று மணி நேரம் கலந்து கொண்டு விழாவில் தலைமை உரை ஆற்றினார். எனது புத்தகத்தினை வரிக்கு வரி வாசித்து, குறிப்பெடுத்து வைத்து அவர் மேடையில் விளக்கிப் பேசிய போது, நாம் எடுத்துக் கொள்ளும் பணிக்கு எத்தகைய சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்!
அம்மேடையில் அவர் எனக்குப் பொன்னாடை அணிந்த போது மரியாதை நிமித்தம் தலை குனிந்தேன். எனது தோளைத் தட்டி ஒருபோதும் பிறரிடம் தலை குனியக் கூடாது, “சுயமரியாதையுடன் நிமிர்ந்தே நிற்க வேண்டும்” என்று கூறி மரியாதை செய்தார். அவர் அக்கணத்தில் சொல்லியது மனதில் பளிச்சென்று பதிந்து விட்டது!
தமிழ் இனத்திற்கு ஒரு கேடு என்றால் அதனை தட்டிக் கேட்டு ஒலிக்கும் முதல் குரல் ஆசிரியருடையது. அவை உறங்கிக் கிடக்கும் இளம் தலைமுறையினரை எழுச்சி கொள்ளச் செய்பவை. விடுதலை இதழ் வாயிலாக ஆசிரியர் மேற்கொள்ளும் சமூக மேம்பாட்டிற்கான அறப்பணி நமக்கு ஒரு முன்னத்தி ஏர்!
அண்மையில் ஸ்காட்லாந்தில் உள்ள அருங்காட்சியகத் திற்குச் சென்ற போது அங்கு எழுதி இருந்த வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன். இந்த வாசகம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1320 ஆம் ஆண்டு எழுதப் பட்டது (Declaration of Arbroath).
“நம்மில் நூறு பேர் உயிருடன் இருக்கும் வரை, எந்த நிபந்தனையிலும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மாட்டோம். உண்மையில் நாம் போராடுவது புகழுக்கோ, செல்வத்திற்கோ, கவுரவத்திற்கோ அல்ல, சுதந்திரத்திற்காக மட்டுமே! எந்த நேர்மையான மனிதனும் அதை விட்டுக் கொடுக்கமாட்டான்!”
இந்த எழுச்சிமிகு வரிகளுக்கு மிகப் பொருத்தமானவர் நம் இனமான ஆசிரியர் பெருந்தகை அவர்கள். தமிழ் இனத்திற்கு எந்த எதிரி வந்தாலும் அவரது பேச்சும், எழுத்தும் சமரசமின்றி கேடயம் போல் நம்மைக் காத்து நிற்கும்!
நூற்றாண்டு கடந்து, அவர் நலமோடு வாழ்ந்து எம் இனத்தை வழி நடத்திட, அவரது பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்!

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
கெரியட்- வாட் பல்கலைக் கழகம், ஸ்காட்லாந்து

நூற்றாண்டுகளைக் கடந்து இன்புற வேண்டும்!

சிறப்புக் கட்டுரை
சமத்துவம், அறிவு மற்றும் சமூகநீதிக்காக உங்களின் தொடர் முயற்சிகள், மக்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்!
ஜப்பான் பயணத்திற்குப் பிறகு ஆரோக்கியமும், ஆனந்தமும் இன்னும் நிறைய பெற்று, நூற்றாண்டுகளைக் கடந்து இன்புற வேண்டும்!
தங்களின் சாதனைகள் மேலும் பல பரிமாணங்களை அடையவும், இந்தப் பிறந்தநாளில் எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்!
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

அ.கோவிந்தபாசம்,
துணைத் தலைவர் – NRTIA, ஜப்பான்

சொற்பொழிவாளர்களுக்கு வழிகாட்டி

சிறப்புக் கட்டுரை
பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா உரையாற்றுகையில், தான் பேசுவதற்குத் தொடர்பான தகவலை, அதற்குரிய நூலின் பக்கங்களைப் புரட்டி, குறிப்பிடப்படும் பகுதியைச் சுட்டிக் காட்டி வரிக்கு வரி வாசித்து சான்று காட்டும் பாங்கு மிகவும் வியப்பைத் தருவதாக இருக்கும். உண்மையை நிலைநாட்ட சான்றாதாரமும் கையுமாக உரைகளைத் தொடங்குவதும், அவரது வியத்தகு நினைவாற்றலும் அவர் ஆற்றும் உரைகளின் மதிப்பை மேலும் உயர்த்தும்.
எந்த ஒரு செய்தி குறித்துப் பேசும் பொழுதும் சான்றாதாரத்துடன் பேசுகிறோம் என்பதை உணர்த்த, அந்நூலின் அப்பகுதியைப் பக்க எண்ணுடன் குறிப்பிட்டு வாசித்துக் காட்டும் பழக்கம், திராவிட இயக்கப் பேச்சாளர்களுக்குப் பெரியார் ஏற்படுத்தி வைத்த பழக்கம் என்பதை அறிவோம். அத்துடன் நூல்களைப் படித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளும் ஆர்வத்தை இயக்க வழி வந்தவர்களுக்கு வளர்த்து விட்டவரும் அவரே.
பெரியார் வழி வந்த சொற்பொழிவாளர்களுக்குத் தாமே ஒரு முன்மாதிரியாக இருந்து, இந்த முறையை ஆசிரியர் அய்யா கடத்தியுள்ளார் என்பதைத் திராவிட இயக்க மேடைகளின் நடவடிக்கைகளிலும், தோழர்களின் நூல் வெளியீட்டு விழாக்களிலும் காண்கிறோம். இதன் மூலம் ஆசிரியர் அவர்கள் மீது பெருமதிப்பு உண்டாகிறது.
ஆசிரியர் அவர்களும் தொடர்ந்து பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பும் நோக்கில் நூல்கள் எழுதிய வண்ணமே உள்ளார். பிறந்தநாள் காணும் ஆசிரியர் அவர்கள் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து அவரது எழுத்துகளின் மூலமும் உரைகளின் மூலமும் உண்மைகளை உலகறியச் செய்து தொண்டாற்ற என் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

முனைவர் தேமொழி செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை, (பன்னாட்டு அமைப்பு). அமெரிக்கா.

ஆசிரியரின் Presence of Mind

சிறப்புக் கட்டுரை
ஆசிரியர் அவர்களின் ஜப்பான் வருகையின் போது அவருடன் சில மணி நேரம் உரையாடக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
ஜப்பானியர் போன்ற சுறுசுறுப்பை அவரிடம் கண்டு வியப்படைந்தேன். ஆராய்ச்சியாளர்களுக்கு எதனையும் கூர்ந்து கவனித்து, பகுப்பாயும் திறன் இருக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும் அது வெளிப்படும் என்று சொல்ல முடியாது.
ஆனால் ஆசிரியர் அவர்களிடம் இந்தக் குணத்தை கண்டேன். எதனையும், எல்லா கோணங்களிலும் அணுகி விவரித்துப் பேசுவது தலைமைப் பண்பாளர்களுக்கே இருக்கக் கூடிய உயரிய குணம். ஓர் இயக்கத்தின் தலைவராக, பகுத்தறிவுவாதியாக ஆசியரிடம் இந்தக் குணங்கள் இருப்பது வியப்பில்லை என்றாலும், நாம் எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும், எல்லா கோணங்களிலும் ஒரு செயலை அணுக வேண்டும் என்பதை அந்தச் சில மணி நேரங்களில் உணர முடிந்தது.
ஆசிரியருடன் நடைபெற்ற உரையாடல், நகைச்சுவை உணர்வுடன் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சு. எவ்வளவு வரலாற்றுத் தகவல்களையும் கூர்ந்த நினைவாற்றலுடன் எடுத்துரைக்கும் Presence of Mind போன்றவை வியக்கத்தக்கவை!
வயதில், அனுபவத்தில், சிறியவர்களின் பேச்சினையும் முழுவதும் உள்வாங்கி, தன் கருத்துகளை எடுத்துரைக்கும் பண்பு இளைஞர்கள் ஆசிரியரிமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியக் குணம். “A good listener is a good speaker” என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் ஆசிரியர்! அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைப் பகிர்வதில் மகிழ்வடைகிறேன்!

முனைவர் கணேஷ் ஏழுமலை, ஜப்பான்

பெரியார் பாதையில் நிலையான பயணம்!
தலைவர் தந்தை பெரியார் அவர்களின் அறிவு ஆயுதத்தைத் தமது 10ஆம் வயதிலேயே உள்ளத்தில் தாங்கிய இன்றும் உலகத்தின் முன்னே ஒரு சமூகப் போராளியாக வாழ்ந்து வருபவர் நமது தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திக் கூறியது போல்: “ஒருவர் நோயினால் இறந்தார் என்பதில் பெருமையில்லை அல்லது விபத்தினால் மறைந்தார் என்பதிலும் சிறப்பில்லை. இவை ஒருபோதும் ஒரு பெரிய விடயமாகாது. அதேவேளையில், எவன் ஒருவன் தான் ஏற்ற கொள்கைக்காக வாழ்ந்து, சமுதாய நலனுக்காக வீரப்போராட்டங்களை நடத்தி உயிர் நீக்கின்றானோ அவனை இந்த உலகம் பொற்றிப் பாராட்டும். குறிப்பாக: அறிஞர் சாக்ரட்டீஸாகவும், பகத்சிங் போன்றும் மக்கள் மனதில் நிலையான இடம் பெற்றிருப்பர்..!
நமக்கு உயிர் பெரிதல்ல…! நல்லுணர்வுதான் பெரியது. மனிதர்க்கு மானம் பெரிது. அதைவிட சுயமரியாதையே பெரிது என்பது போல: தந்தை பெரியாரைத் தமது தலைவராக ஏற்றார்; அவரோடிணைந்து நாடு முழுமையும் கொள்கைப் பிரச்சாரத்தில் திடமாக ஈடுபட்டார். திராவிடர் கழகத்தின் களப்போராளியாகத் திகழ்ந்து அனைத்துப் போராட்டங்களையும் கடந்து இன்று உலகளாவிய நிலையில் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவத்தையும், அறிவியக்கச் சிந்தனையையும், கொண்டு சேர்த்த பெருமை ஆசிரியர் அய்யாவையே சாரும்.
அறிஞர் அண்ணா அவர்கள் கூறியது போன்று “நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்களே…!”
அதுபோல், அய்யா பெரியாரே எம் தலைவர்..! அவரின் அறிவியக்கச்சிந்தனையே தாம் ஏற்றிக்கொண்ட ஒரே பாதை என்று வாழ்ந்து வருபவர்

ஆசிரியர் அய்யா அவர்கள்:
தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதிப் பெரும் போராட்டப் பயணத்தில், நிலையாகப் பயணத்தை மேற்கொண்டவர் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யா அவர்களுக்கு அகவை 92. அவரின் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பது மகிழ்ச்சியாகும்.
அய்யா அவர்கள் நலத்துடன் இன்னும் பல ஆண்டுகள் பணியைத் தொடரவேண்டு மென மனமுவந்து வாழ்த்துகின்றோம்.

இனிதே வாழ்த்தும்…!
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்

‘இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்’. (சா சயஎ -447)
இமயம் போல வாழ்க
“எனது தொண்டு மற்றவர்கள் செய்வது போல் வெள்ளத்தோடு சேர்த்து செல்லும் நீரோட்டத் திசை வேலை அல்ல; அதை எதிர்த்துப் போராடிச் செல்லும் எதிர் நீச்சல் தொண்டாகும்” என்று தந்தை பெரியார் முன்னுரைத்ததைப் பின் வரும் இளையோர் எங்களுக்கு தொடர்ந்து அமிழ்தொன்னா அறமிட்டு நாளும் அன்பொடு நலம்பாராட்டி வார்த்தெடுக்கும் பணியினை மேற்போட்டுக் கொண்டவர் நமது ஆசிரியர் அய்யா அவர்கள்.
திணை கடந்து, புலம் பெயர்ந்த போதினிலும் கொள்கையுணர்வு தீச்சுடர் பெறவும். அறம் தாழ்ந்து, தரம் வீழ்ந்த ஜாதித் தீங்கினை, தமிழர் வழக்கமும் பழக்கமும் அன்றே என்று நாளோடும் பொழுதோடும் போரிட்டு இம்மண்ணில் இருக்கும் எம்போன்ற இளையோர் நெஞ்சில் விதைத்திடவும், எங்ஙனமும், எவ்விடத்தும் எச்சிற்கல்லாய்; தாழ்த்தப்பட்டு பிற்படுத்தப்பட்டு – ஒடுக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்களின் அதிகாரத்தை பெண்களிடத்தில் மீண்டும் கையளிக்க வந்த நம் திராவிடச் சிந்தனையையும், சுயமரியாதை இயக்கத்தையும் கட்டியிழுத்து, எங்கள் கையளிக்க நல்ல சால்பினையுமுடைய அய்யா ஆசிரியர் அவர்கள் ஒன்னாரை அறவென்று களமாட அகவை 200 தேவை.
நமதிந்த பகுத்தறிவுக் களஞ்சியத்தின் தோற்றுருவே, உண்மைத் தமிழர் சால்பினை மக்கட் மத்தியில் ஊக்குவிக்கவும், கல்வியினூடேயான சமத்துவ சமூக நீதிக்காக துணை நிற்றலும், கல்வி மற்றும் அதிகார பகிர்வில் பங்கு கொள்ளுதலும், ஆண்களின் சமூகத்தில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வர்க்கத்தின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், தத்துவப் பள்ளிகளின் பெயரால். வருண, ஆசிரம தர்மங்களின் பெயரால் நிலவும் அறமற்ற தன்மை களையப் பாடுபடுதலும். உயிர்நேயம் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமாகிய ஆசிரியர் அய்யா அவர்வழி களப்பணியாற்றுவதேயாகும்.
‘நீடிய நெடுவரைக் கழைவளர் இமயம் போல
எங்கள் ஆசிரியர் வாழிய வாழியவென்று’

வாழ்த்துவது…
பகுத்தறிவு களஞ்சியம் (மலேசியா)

மனத்திடம் மிக்கவர் ஆசிரியர்

சிறப்புக் கட்டுரை
பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, இடஒதுக்கிடு, ஜாதி ஆதிக்கம் போன்ற சொற் களோ, உரையாடல்களோ, திரா விடக் கொள்கைக் குடும்பத்தில் வந்த என் போன்றோருக்கு மிகவும் வழக்கப்பட்டதே!
நான் வளரும் காலத்தில் என் வயது ஒத்தவர்கள் இந்த கொள்கைச் சிந்தாந்தத்தை அதிகமாகப் பேச நான் கேட்டது இல்லை. இப்போது தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் நமது கொள்கை எங்கு பார்த்தாலும் ஒலிப்பது பெரியாரின் வெற்றி!
எங்கும் கருப்புச் சட்டைகள் வெளிவருவது திராவிடர் கழகத்தின் வெற்றி! கொள்கை வீரராக எப்போதும் தளராமல் செய்ல்பட்டுக் கொண்டு இருக்கும் ஆசிரியர் அவர்களின் வெற்றி!
இதற்குக் காரணம் அவர்களின் பொறுமையும், செயல்பாட்டு வீரியமும், அழுத்தமான கொள்கைப் பற்றும், மன திடமும் மட்டுமின்றி கொள்கைக் குடும்ப நண்பர்களை அன்போடு அரவணைத்து சரியான நேரத்தில் சரியான அறிவுரையும், ஊக்கமும, உண்மையான அன்பும் காட்டுவதால் கூட என நம்புகிறேன்.

அன்புடன்,
தமிழ்மணி வேலாயுதம், அமெரிக்கா

ஆசிரியர் பேச்சால் பெரியாரியம் கற்றிருப்போம்

சிறப்புக் கட்டுரை
அய்யாவின் அண்மைக்கால ஜப்பான் பயணத்தில், அய்யாவைச் சந்திக்கும் வாய்ப்பும், இரு நாட்கள் உடன் இருக்கும் பெரு வாய்ப்பும் பெற்றேன். பொதுவாக நாம் அனைவரும் அய்யாவின் எழுத்து மற்றும் பேச்சின் ஊடாகப் பெரியாரியம் கற்றிருப்போம்.
இந்தப் பயணத்தின் வாயிலாக அய்யாவின் சுறுசுறுப்பு, நேரம் தவறாமை, பணிகளை ஒத்தி வைக்காமல் செய்த பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. அந்த வாழ்க்கை நெறிமுறைகளை அன்று முதலே நானும் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டேன்!
பகுத்தறிவு, சுயமரியாதை மட்டுமல்ல; வாழ்க்கை நெறிகளையும் பயிற்றுவிக்கும் ஆசான், ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்!

கு.பிரதிக், ஜப்பான்

திசைகாட்டி ஆசிரியர்!

சிறப்புக் கட்டுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும், முதன்மை மாநிலமாக இருக்கிறது நம் தமிழ்நாடு! அதேபோல மாநிலத்தின் முதலமைச்சர்களில் முதல் இடத்தில் இருக்கும் நம் முதலமைச்சரின் “திசைகாட்டி” என்று போற்றப்படுவது, ஆசிரியர் அய்யா அவர்களின் ஆற்றலுக்கான ஆளுயர மாலை!
தம் 12 வயதில் இருந்தே சமூக நீதிக்காகவும், சுய மரியாதைக்காகவும், தன் வாழ்வையே அர்ப்பணித்து உழைத்ததன் விளைவாக, நம் சமூகம் எத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அதற்கு எங்கள் வீட்டிலேயே உதாரணம் இருக்கிறது. எங்களின் 12 வயது மகள், ஆங்கிலத்தில் எழுதிய கவிதைப் புத்தகத்தை, ஆசிரியர் அய்யா அவர்களே வெளியிட்டார்கள்.
“பெரியாரை உலகமயமாக்க வேண்டும்; உலகம் பெரியார் மயமாக வேண்டும்”, என்கிற ஆசிரியரின் தணியாத வேட்கைக்காக, அவரின் அயராத உழைப்பிற்கு, நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வதே அவருக்கு நாம் அளிக்கும் பிறந்தநாள் பரிசு. வாழ்த்துகள் அய்யா!

வெங்கடேஷ் முத்துக்கிருஷ்ணன், இங்கிலாந்து

யாரையும் தாழ விடா உயரிய உள்ளம்!

சிறப்புக் கட்டுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பர்மா நாட்டிற்கு வந்திருந்த போது, தமிழர் அறநெறிக் கழகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கோ.கலைச்செல்வன் ஏற்பாடு செய்தாரகள். ஆனால் சில மணி நேரத்தில் செய்ய எண்ணியதால் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
வேறு வழியின்றி யாங்கோன், 24 ஆவது வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தினோம். இந்த நிகழ்ச்சியில் ஆன்மிகவாதிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பெரியாரின் சிந்தனைகளை, ஏற்றத் தாழ்வற்ற சமத்துவப் படைப்புகளை, மானமும் அறிவும் கொண்ட மக்களாக ஆக்க மேற்கொண்ட முயற்சிகளை அழகாக, ஆழமாக எடுத்துரைத்த பண்பாளர் ஆசிரியர் அய்யா அவர்கள்!
அதே நிகழ்ச்சியில் கோவிலுக்குள் நுழையும் முன் ஆசிரியர் காலணியைக் கழட்டியதும், பக்கத்தில் இருந்த நான் அதைக் கையில் எடுக்கப் போனேன். ஆசிரியர் அதற்கு அனுமதிக்கவில்லை. கொஞ்சம் கடுமையாகவும் ஆசிரியர் மறுத்தார். அப்போது எனக்குப் புரியவில்லை.
பிறகு புரிந்து ஆசிரியரின் உயரிய பண்பை! யாரையும் தாழவிடக் கூடாது என்கிற ஆசிரியரின் உள்ளத்தை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தேன்.
அய்யா அவர்களுக்குப் பர்மாவில் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

கலைச்செல்வன் கருணாநிதி
(பொறுப்பாளர்), தமிழர் அறநெறிக் கழகம்,
பர்மா (மியான்மா)

கொள்கைக்காகவே வாழ்பவர்!

சிறப்புக் கட்டுரை
திராவிடர் கழகத்தை வழிநடத்தும் தலைவர் மட்டுமன்றி, தலைவராகவே வாழ்கிறவர்! பெரியார் தொட நினைத்த இலக்குகளை நோக்கி தமிழர் அனைவரையும் அழைத்துச் செல்லும் தளபதி! பெரியாரின் கொள்கைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் நமது ஆசிரியர்!
சமூகத்தில் தோற்றவன் வீசும் அவதூறுகளை, கொள்கைச் செயல்கள் மூலம் தகர்த்தெறியும் போராளி! ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

– கோ.க.சந்திரசேகர்,
(பொதுச்செயலாளர்), தமிழர் அறநெறிக் கழகம்.

பிறந்தநாள் வாழ்த்துகள்

சிறப்புக் கட்டுரை
நேர்மை, நாணயம், தன்னடக்கம், ஒழுக்கம் போன்ற அத்தனை உயரிய குணத்தின் அடையாளச் சின்னமாக இருக்கும் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்!

– கா.கனகா,
(பொதுச் செயலாளர்), மகளிரணி,
தமிழர் அறநெறிக் கழகம்.

‘பெரியார் தீ’ பரப்பும் காரணி!
பெரியாரின் சீடராய், தொண்டராய் இருந்து இன்று பெரியார்தம் கருத்துகளைப் பரப்புவதோடு, திராவிடர் கழகத்தையும் வழிநடத்தும் தலைவராக ஆசிரியர் இருக்கின்றார்!அதுமட்டும் இல்லாமல் தமிழ்நாடு ஆட்சிக்கு இக்கட்டு வரும் சூழலில், அதைக் காக்கும், வழிநடத்தும் காவலனாகவும் இருந்து வருகிறார்.
இக் காலத்திற்கு மட்டுமல்லாமல் எக் காலத்திற்கும் பொருந்தும் பெரியாரின் தத்துவத்தை, இக் கால அரசியல் சூழலுக்கு ஏற்ப மக்களிடம் கொண்டு செல்ல தினம் தினம் தமிழ்நாடு முழுக்கச் சுழன்று வருகிறார்.
மட்டுமின்றி பிற மாநிலத் தலைவர்களையும் சில விடயங்களில் வழிநடத்த பம்பரமாக இயங்கும் இளைஞரான ஆசிரியருக்கு எங்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தமிழ்நாட்டில் தோன்றிய ‘பெரியார் தீ’ நாடு முழுவதும் பரவுவதற்கு நீங்களும் ஒரு முதன்மையான காரணி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அய்யா!
வாழ்த்தி வணங்கும்…

அகிலன் மற்றும் ஜெயராமன்
அமெரிக்கா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *