சென்னை, நவ.29- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.tn.gov.in/ பொதுமக்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது. அதில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துறைரீதியான அதிகாரிகள் யார், யார் என விவரங்கள் இருக்கும். இது தவிர அரசின் செய்திகள், அரசாணைகள் போன்றவற்றையும் பொதுமக்கள் அதில் பார்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒவ்வொரு துறையின் அலுவலகங்கள் மற்றும் தொடர்பு எண்களும் அதில்இடம்பெற்று இருக்கும். இந்த நிலையில், இந்த இணையதளத்தை தமிழ்நாடு அரசு முழுவதுமாக புத்தம் புது வடிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைத்துள்ளது.
முன்னோடித் திட்டங்கள்
இந்த இணையதளத்தின் முகப்பு பக்க மெனுவில் அரசாங்கம், துறைகள், மாவட்டங்கள், ஆவணங்கள், சேவைகள், திட் டங்கள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள், அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுதல் ஆகிய விவரங்கள் உள்ளன. முகப்பில் அரசின் முன்னோடித் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் முதலாவதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளது. அதன்பின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணத்திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. நாம் அதில் எந்த திட்டத்தை தேர்வு செய்தாலும், அந்த திட்டம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதன்கீழ் பகுதியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பான விவரங்கள், தொடர்பு விவரங்கள், முதலமைச்சரின் எக்ஸ் வலையதள பதிவு விவரங்கள், சட்டங்கள், விண்ணப்பங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
வண்ணமயம்
முன்பு இருந்த வடிவமைப்பைவிட,இப் போது அதில் பல்வேறு கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அரசின் திட்டங்களை அந்தந்த துறையின் இணையதளத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் முக்கிய திட்டங்களையும் அதில் நேரடியாக காணலாம். மிகவும் வண்ணமயமாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் பல்வேறு தகவல்களுடன் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு இது மிகுந்த பயன் அளிக்கும்.
கடல் மட்ட உயர்வால்
2100ஆம் ஆண்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் காணாமல் போகும்
ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னை, நவ.29- கடல் மட்ட உயர்வால் 2100ஆம் ஆண்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் காணாமல் போகும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த வனம் இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரமான வடக்கில் வெள்ளாறு சரணாலயத்திற்கும், தெற்கில் கொள்ளிடக் கரை ஓரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சதுப்பு நிலத்தில் இழு படகு, படகு சவாரி போன்ற ஏராளமான நீர் விளையாட்டுகள் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது.
பிச்சாவரம் அலையாத்தி காடுகள் 413 எக்டர் அளவில் உள்ளது. அதேபோல் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் 2382 எக்டேர் அளவில் உள்ளது. இந்நிலையில் அதிகப்படியான உமிழ்வால் கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காடு மற்றும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் காணாமல்போக வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் அலையாத்தி காடுகள் மூழ்குவதால் அந்த காட்டுப்பகுதிகளில் இருக்கும் அதிகப்படியான கார்பன்கள் சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும். 2.24 டிராகிராம் கார்பன் வெளியாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அங்குள்ள மீன்கள் கடல்சார் உயிரினங்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.