ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியேற்பு விழா துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்பு

Viduthalai
2 Min Read

ராஞ்சி, நவ.28 ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் முதலமைச்சராக ஹேமந்த்சோரன் இன்று (28.11.2024) மாலை பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சி யில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேர வைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் ஆட்சி யமைக்க உள்ளது.

மொத்தமுள்ள 81 தொகுதிகளில்,ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 21, அனைத்து ஜார்க்கண்ட் மாணவா் சங்கம், அய்க்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) ஆகியவை தலா ஒரு தொகுதியைக் கைப்பற்றின.
ஜார்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கூட் டணிக் கட்சிகளின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 24.11.2024 அன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டார்.

தொடா்ந்து ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் சந்தோஷ் கங்வாரிடம் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். அப்போது, தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சிகளின் கடிதங்களையும் அளித்தார்.
ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவா் ஹேமந்த் சோரனுக்கு மாநில ஆளுநா் சந்தோஷ் கங்வார் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு பதவியேற்கும் விழா வரும் இன்று (28.11.2024) நடைபெறும் என்று ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் மூன்றாவது முறையாக இன்று மாலை பொறுப்பேற்கிறார். அவருக்கு ஆளுநர்சந்தோஷ் கங்வார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவில், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, மேகலயா முதலமைச்சர் கொன்ராட் சர்மா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த 2000-ஆம் ஆண்டு நவ. 15-இல் பீகாரை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க இருக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *