விளக்குமாறு அதாவது துடைப்பக்கட்டைக்கு ஒரு ஸ்தல புராணம் வெளி வந்துள்ளது – அது வருமாறு:
‘‘லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்பட்டாலும் அதை ஒருபோதும் ஆபரணங்கள் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் இருக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. மீறி வைத்தால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நீங்கள் உங்கள் வீட்டில் உடைந்த துடைப்பத்தை பயன்படுத்தி வந்தால் உடனே அதைத் தூக்கி எறியுங்கள்! ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த துடைப்பத்தைப் பயன்படுத்துவது நல்லதல்ல; இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் கூட வரலாம்.
‘‘மாலை வேளையில் வீட்டைப் பெருக்காதே’’ என்று அடிக்கடி சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அது ஏன் என்று தெரியுமா? மாலை வேளையில் வீட்டைப் பெருக்கினால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆகவே, ஒருபோதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டை பெருக்குவதைத் தவிர்க்கவும். ஒருவேளை அப்படிப் பெருக்கினால் குப்பையை வீட்டிற்கு வெளியே கொட்ட வேண்டாம்.
துடைப்பத்தை தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. ஆனால் அதை வடக்கு திசையில் ஒருபோதும் வைக்கக்கூடாது, அப்படி அந்த திசையில் வைத்தால் வீட்டில் சந்தோஷம் மகிழ்ச்சி அழிந்துவிடும். இது தவிர, வீட்டில் உள்ளவர்களுக்கு முன்னேற்றத்தில் தடை ஏற்படும்.
வீட்டை சுத்தம் செய்யும்போது முதலில் மேற்கு அல்லது வடக்கு திசையில் இருந்து தான் பெருக்கத் தொடங்குங்கள். இப்படி செய்தால் தான் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் தங்குவாள். அதுபோல வீட்டை துடைத்த பின் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுங்கள். வீட்டில் குப்பைகள் குவிந்து இருந்தால், வீட்டில் வறுமையும் துன்பமும் பெருகும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, துடைப்பத்தை ஒருபோதும் காலால் உதைக்காதீர்கள்.
அதுபோல துடைப்பத்தை சமையலறையில் வைக்கக்கூடாது – மேலும் இரண்டு துடைப்பங்களை ஒருபோதும் ஒன்றாக வைக்கவும் கூடாது.
மேலே சொன்ன விடயங்களை நீங்கள் பின்பற்றினால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இதனால் உங்களது வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்காது.’’
இணைய தளங்களில் இப்படி எல்லாம்கூட செய்திகளைப் பரப்புகிறார்கள். ஊடகங்கள் பல ‘அவதாரங்களை’ எடுத்து பல வகைகளிலும் இப்படி எல்லாம் பரப்புவதை என்னவென்று சொல்லுவது! இணையதளங்கள் இந்த மூட சக்திகளால் கண்டுபிடிக்கப்பட்டனவா?
வாஸ்து என்பதும், மத மவுடீகம் என்பதும் எவ்வளவுக் கீழிறக்கத்திற்குச் சென்றுள்ளன என்பதற்கு இந்த மூடத்தனம் ஒன்று போதாதா?
விளக்குமாறு – அதாவது துடைப்பம் என்பது வீட்டைச் சுத்தம் செய்ய மட்டும்தானா? கழிப்பறையையும் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு கருவிதானே!
துடைப்பம் என்பது லட்சுமி வாசம் செய்யும் ஒன்று என்று ஒரு பக்கத்தில் சிலாகித்துக் கூறிவிட்டு, இந்தத் திசையில் வைக்காதே – அந்தத் திசையில் வைக்காதே – நிறுத்தி வைக்காதே, இந்தெந்த கிழமைகளில் துடைப்பத்தை அதாவது விளக்கு மாறை வாங்காதே – இவற்றிற்கு மாறாக செய்தால், வறுமை பிடித்துத் தின்னும், பொருளாதார பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் இந்த 2024லும் கதைக்கிறார்கள் – பக்தி நோயால் பீடிக்கப்பட்ட மதவாதிகள் என்றால் – இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்ல!
ஒரு விளக்குமாறு செல்வத்தைக் கொடுக்கும் என்றால் அரசாங்கம் என்ற அமைப்பு ஏன்? சட்ட திட்டங்கள் ஏன்? மருத்துவத்துறை ஏன்? தொழிற்சாலைகள் ஏன்? ஏன்?
கடவுளைப் பற்றியும், மத விடயங்கள்பற்றியும், மூடநம்பிக்கைகள் குறித்தும் தந்தை பெரியார் எடுத்துக் கூறினால் காட்டுக் கூச்சலிடுவோர் இவற்றைப்பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டாமா? பகுத்தறிவின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
‘‘விளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சமா?’’ என்ற ஒரு பழமொழி வழக்கில் இருக்கிறது.
அதுதான் இப்பொழுது நினைவுக்கு வருகிறது.