‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது – பாராட்டத்தக்கது!

Viduthalai
4 Min Read

ஹிந்தித் திணிப்பைவிட மோசமானது ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் குலக்கல்வித் திட்டம்!
‘‘ இத்திட்டத்தை ஏற்கமாட்டோம் – மாற்றாக கைவினைத் தொழிலை ஊக்குவிக்கும் புதிய திட்டம் உருவாக்கப்படும்!’’
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

ஒன்றிய பி.ஜே.பி. அரசு திணிக்கும் குலக்கல்வித் திட்டமான ‘விஸ்வகர்மா யோஜனா‘வை ஏற்கமாட்டோம் என்றும், மாற்றாக கைவினைத் தொழிலை ஊக்குவிக்கும் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ள ‘திராவிட மாடல்‘ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது – பாராட்டத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

குலதர்மக் கல்வித் திட்டத்தின் புதிய வடிவமே
ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம்!
‘பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்’ என்பது, முழுக்க முழுக்க 1952 இல் முதலமைச்சராக இருந்த சி.இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த – ‘‘காலை அரை நேரம் மட்டும் படிப்பு, மீதி அரை நேரம் அம்மாணவர்களின் குலத்தொழிலான செருப்புத் தைத்தல், மண்பாண்டம் செய்தல் போன்ற பல கிராமியத் தொழில்களைக் கற்க – படிக்கவேண்டுமென்ற’’ குலதர்மக் கல்வித் திட்டத்தின் மாற்றப்பட்ட புதிய வடிவமேயாகும்!
இத்திட்டம் வந்தவுடனேயே, இந்த சூழ்ச்சித் திட்டமானது வருணாசிரமத்தின் புது அவதாரம் இது; ஆர்.எஸ்.எஸ். தத்துவமான ஜாதி காப்பாற்றப்பட சர்க்கரைப் பூச்சுப் பூசப்பட்ட ஒரு விஷ உருண்டை என்பதை விளக்கினோம்; அப்போதே தமிழ்நாடு, ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு, அதனை செயல்படுத்த இயலாது என்பதை முன்பே, 4.1.2024 அன்றே டில்லி ஒன்றிய அரசு அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதி, விஸ்வகர்மா திட்டம் ஜாதியைக் காப்பதற்காகத்தான் அதன் தற்போதைய வடிவம் உள்ளது. அதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் நாம் (திராவிடர் கழகம்) பட்டி தொட்டியெல்லாம் சென்று தொடர் பிரச்சாரம் செய்து ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினோம்.
கேரளத்தில் கூட திராவிடர் கழக ஆங்கில இதழ் (தி மாடர்ன் ரேசனலிஸ்ட்) மூலம்தான் இத்திட்டத்தில் உள்ள உள்நோக்கத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறினார்கள்!

திராவிடர் கழகம் மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம்!
ஒன்றிய அரசு அனுப்பிய விஸ்வகர்மா திட்டத்தின் விளக்கத்தில் தலைப்பு – படம் எல்லாம் குலத்தொழில் படத்துடன் இருந்ததை திராவிடர் கழகம் மக்களிடத்தில் சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்தது.
தி.மு.க., தி.க. மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. மற்றும் பார்ப்பனர் அமைப்புகள் தவிர மற்ற அத்துணைக் கட்சிகள், இயக்கங்களும் இதனை எதிர்த்தன.
இதில், இந்தக் குலக்கல்வி பயில (விஸ்வகர்மா திட்டத்தில்) தொழில் செய்ய வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி என்று ‘தேனை’யும் இந்த விஷ உருண்டைமீது தடவினர்.
அதன் வயதுபற்றிய விளக்கம் நமது பிள்ளைகள் கல்லூரிக்கும், பல்கலைக் கழகத்திற்கும் சென்று தொழிற்படிப்புப் படித்து, பல வெளிநாடுகளுக்குச் சென்று பெருமிதமாக வாழும், ஊதியம், பெரும் பொருளீட்டி உயரும் நிலைக்கு எதிராக வேரில் வெந்நீர் ஊற்றும் ஒரு வஞ்சகத் திட்டம் – ஹிந்து ஆர்.எஸ்.எஸ்.சின் குழந்தையான இந்த ‘விஸ்வர்கமா திட்டம்’ என்ற பிரதமரின் திட்டம்.

மனுதர்மத்தின் மறுபதிப்பே இந்த மறைமுக குலதர்மக் கல்வித் திட்டம்!
குலக்கல்வியை கொண்டு வந்த ஆச்சாரியார், அதன் காரணமாக மாளாத எதிர்ப்பினைத் தாங்க முடியாது, பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஓடினார். வெளிப்படையாகச் சொன்னால், முதலமைச்சர் பதவியிலிருந்து விரட்டப்படும் நிலைக்கு ஆளானார் என்பது பழைய வரலாறு.
மனுதர்மத்தின் மறுபதிப்பே இந்த மறைமுக குலதர்மக் கல்வித் திட்டம். நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘விஸ்வகர்மா’ திட்டத்தினை ஏற்க இயலாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்து, கைவினைஞர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தர, தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசே ஒரு தனித்த தொழில் ஊக்குவிப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம்; அதனை நாங்கள் செயல்படுத்துவோம் என்று தெளிவாக, துணிவாகத் தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்! (ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடித விவரம் அருகே காண்க).

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி!
வடபுலத்தில் உள்ள பல மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த திராவிடர் இயக்கங்கள் இல்லாததால்தான் அவர்களுக்கு இதுபோன்ற பல ‘‘சர்க்கரை பூசப்பட்ட விஷ உருண்டை’’களில் உள்ள உயிர்க் கொல்லி ஆபத்தினைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு பரிதாப நிலையாகும்!
தமிழ்நாடு பெரியார் மண் ஆனதால், இங்குள்ள திராவிட ‘‘ராடார்’’ எந்த ஆபத்தையும் வருமுன்னே முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடித்துத் தெரிவித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தனித்துவமாக சிறப்புடன் ‘திராவிட மாடல்’ எதிலும் முற்போக்கு முத்திரையுடன் செயல்பட்டு, இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சியாக உள்ளது!
விஸ்வகர்மா திட்டம் என்ற குலதர்மக் கல்விக்கு இங்கே இடம் ஒருபோதும் கிடையாது! கிடையவே கிடையாது!!
இது ஹிந்தித் திணிப்பைவிட மிகப்பெரும் ஆபத்து; நம் இளம் சந்ததிகள் மேற்படிப்பு, விஞ்ஞானப் படிப்புகளைப் படிக்காமல் தடுக்கும் சூழ்ச்சித் திட்டம் என்பதைப் புரிந்துகொள்வீர்!’’

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
28.11.2024 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *