திருச்சி, நவ. 26- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்து நூறு நாள்கள் நிறைவடைந்த பிறகு, அவர்கள் இந்த நூறு நாள்களில் தாங்கள் கற்றதைப் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தும் “நூறாவது நாள் கொண்டாட்டம்” நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கான நூறாவது நாள் கொண்டாட்டம் 22.11.2024 அன்று பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் டாக்டர் ஏ.சோனல் ஸ்டெஃபினா அவர்கள் தலைமை ஏற்றார். மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வி.ஏ.சோனல் ஸ்டெஃபினா வரவேற்புரையாற்றி வந்தோரை வரவேற்றார்.
மழலையர் பிரிவு மாணவர்கள் இதுவரை தாங்கள் கற்ற தமிழ், ஆங்கில மழலைப் பாடல்கள் மற்றும் கதைகள், ஆத்திசூடி, திருக்குறள், தன் அறிமுகம், கணிதம் மற்றும் சூழ்நிலையியலில் தாங்கள் கற்றவை, ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி 100 முதல் 0 வரை எண் களைப் பின்னோக்கிக் கூறுதல், 1 முதல்100 வரையிலான எண்களை வரிசையாகக் கூறுதல், தமிழ், ஆங்கில மாதங்களின் பெயர்கள், கிழமைப் பெயர்கள், உடலுறுப்புகளின் பெயர்கள், புலன்களின் பெயர்கள் மற்றும் பயன்கள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், ஏறத்தாழ 108 மாணவ, மாணவிகள் தங்களின் கற்றல் திறனை மேடையேறி, எவ்வித தடுமாற்றமுமின்றி, தங்கள் மழலை மொழியில் கூறியது பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. நிகழ்வின் முடிவில் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி கு.பவித்ரா நன்றியுரை கூற விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் எஸ்.ஷஃபா மர்ஜூகா மற்றும் சிறீகுழலி ஆகியோர் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.
9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள்
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் 140 மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவிற்கு, 23.11.2024 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி மற்றும் மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகிய இடங்களுக்குச் சென்றனர்.
கீழடியில் உலகத்தரத்தில் அமைக் கப்பட்டுள்ள அருங் காட்சியகத்தைப் பார்வையிட்ட மாணவர்கள், தமிழர்களின் பண்டைய நாகரி கத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுதங்கள், பழங்கால இசைக் கருவிகள், ஆபரணங்கள் எனத் தமிழர்களின் வரலாற்றை அறிய கூடிய ஆயிரக்கணக்கானப் பொருட்களை மிகுந்த ஆர்வத் துடன் கண்டு இரசித்தனர்.
அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுகிற வகையில் அமைக்கப் பட்டுள்ள சிறார் அறிவியல் அரங்கத்தில், கோளுக்கு கோள் மாறும் மனிதனின் எடை என்ற அறிவியல் சிந்தனையை நேரில் கண்டறியும் விதமாக, தங்கள் உடல் எடையை, அறிவியல் அரங்கில் உள்ள அய்டெக் எடை கருவியில் நின்று, ஒவ்வொரு கோள்களிலும் தங்களது எடை எவ்வளவு என்பதை அறிந்து கொண்டனர்.
அங்கிருந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்ற மாணவர்கள் குழந்தைகள் நூல், சிறுவர் திரையரங்கம், கலையரங்கம், மாதிரி வானூர்தி, எண்ணிம திரைகள் பல்வேறு தளங்களில் அமைந்துள்ள, தமிழ் நூல்கள்,ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்கள்,போட்டித் தேர்வுகளுக்கான நூலகப்பகுதி, பார்வையற்றவர்களுக்கான நூல்கள் மின்னூல், ஒலி நூல், மேற்கோள் நூல்கள் ஆகியவற்றை பார்வையிட்டு வியந்தனர்.