மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மய்யம்
சென்னையில் முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, நவ. 26- சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழுதுகள்- ஒருங்கிணைந்த
சேவை மய்யம்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் தொடங்கப்படும்’ என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ‘விழுதுகள்’ என்ற பெயரில் 273 ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் அமைக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை திட்டமிட்டு பணிகளை தொடங்கியது. அதன்படி சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் அமைக்கப்பட்ட முதல் ‘விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை’ மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.11.2024) திறந்து வைத்தார்.
இந்த மய்யத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு மறு வாழ்வு சேவை பெற வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
அப்போது அவருக்கு மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர்தான் வரைந்திருந்த அவரது உருவப்படத்தை பரிசாக வழங்கினார். இந்த மய்யத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஆவின் பாலகம் நடத்துவதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவருக்கு அந்த மாற்றுத்திறனாளி சூடாக காபி போட்டு கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற திமுக உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், பிரபாகரராஜா, கணபதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் சி.ஜி.தாமஸ் வைத்யன், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் லட்சுமி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் சுதன், மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
6 மறுவாழ்வு சேவைகள்
ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சேவை மய்யத்தின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன்முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய 6 மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும். இந்த சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மய்யம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
2023-2024இல் கள அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியின்போது, கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, இம்மய்யத்தில் சேவைகள் வழங்கப்படும். இந்த மய்யமானது பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அணுகல் வசதி களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம்
மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இம்மய்யத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இம்மய்யத்தில் அமைந்துள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படுமாயின், அங்கு வைக்கப்பட்டுள்ள பஸ்ஸரை பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி ஒரு ‘ஸ்டார்ட்’ அப் நிறுவனத்தால் முழு மையாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘லாட்’ தொழில் நுட்பம் முதல்முறையாக இந்தியாவி லேயே இம்மய்யத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவசர சூழ்நிலைகளை, தொலைவில் இருந்தாலும் உடனே கண்டறிந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட முடியும்.
தரமான கட்டட வடிவமைப்பினை ஏற்படுத்தி ஒன்றிய அரசால் வரையறுக்கப்பட்ட ஒத்திசைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் 2021இன்கீழ் ஒரு புதிய பரிமாணத்தை அடைவதற்கு இந்த மய்யம் ரூ.3.08 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.