கலைஞர் நூலகத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார்!

viduthalai
1 Min Read

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நாமக்கல் மேற்கு மாவட்டம் சூரியம்பாளையம் பகுதியில் தி.மு.க. இளைஞரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒரு நூலகத்தை நேற்று (24.11.2024) காலை 11.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். கழகத் தலைவர் ஆசிரியர், ‘ஒரு நூலகம் திறந்தால் பல சிறைச்சாலைகள் மூடப்படும்’ என்று கூறுவது வழமை. அந்தப்படியே இந்நூலகம் திறந்து வைக்கப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது. நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

ஆசிரியர் வருகையை சூரியம்பாளையம் பகுதி மக்கள் மிகுந்த வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். நூலகத்தை ஆவலுடன் பார்வையிட்ட ஆசிரியர் தோழர்களுடன் வெளியில் வந்தபோது, அங்கு வருகை தந்திருந்த பள்ளி மாணவர்களிடம் பள்ளியில் உணவு சாப்பிடுகிறீர்களா? என்ன உணவு? எப்படி இருக்கிறது? என்பன போன்ற கலகலப்பான பல்வேறு கேள்விகளை கேட்டு, சுவையான பதில்களைப் பெற்றார். இந்நிகழ்வில் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமைக்கழக அமைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், ஈரோடு சண்முகம், ஆத்தூர் சுரேஷ், நாமக்கல் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். அங்கிருந்து அய்ம்பெரும் விழாவுக்குப் புறப்பட்டார். சாலையின் இருமருங்கிலுமாக தி.க., தி.மு.க., ஆதித்தமிழர் பேரவை கொடிகள் கட்டப்பட்டு பட்டொளி வீசிப் பறந்து, ஆசிரியர் மற்றும் அவருடைய படையை வரவேற்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *