தமிழர் தலைவரின் 92ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு சத்தியமங்கலம் ஆசனூரில் பழங்குடி மக்களுக்கான பொது மருத்துவ முகாம்

Viduthalai
3 Min Read

கோபிச்செட்டிப்பாளையம் மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் (26.27.10.2024) பெரியாரியல் பயிற்சிமுகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன் அங்குள்ள மலைவாழ் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மக்கள் தமிழர் தலைவரிடம் வாழ்வாதாரங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் வழிகாட்டுதலின் படி பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் தலைமையில் திருச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை, பெரியார் மணியம்மை மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியைச் சார்ந்த 35 பேர் அடங்கிய மருத்துவக் குழு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரையின் ஒருங்கிணைப்போடு சத்தியமங்கலம் ஆசனூர் கிராமத்தினை 20.11.2024 அன்று சென்றடைந்தது.

முன்னதாக 15.11.2024 அன்று பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவர் குழுக்கள் அப்பகுதியில் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். சத்தியமங்கலம் அருகில் உள்ள ஆசனூர் கிராமத்தில் 21.11.2024 அன்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இம்மாபெரும் பொது மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன், திருச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் க. கோவிந்தராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என். நல்லசிவம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் எஸ்.வி. சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற மேனாள் உறுப்பினர் பி. எல். சுந்தரம், ஒன்றிய தி.மு.க. செயலாளர் எச்.எம். நாகராஜ் மற்றும் தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் டி. சிவண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் அறிக்கை
இம்மருத்துவ முகாமில் கிராம மக்களுக்கு காய்ச்சல், சளி, நீரிழிவு, இரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட நோய்களுக்கான பொது மருத்துவ முகாம், பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் மானசிறீ ஆகியோர் தலைமையிலும், மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் பெண்கள் நல மய்ய மருத்துவர் திலகவதி தலைமையிலும் நடைபெற்றது. எடிசன் இரத்தப்பரிசோதனை மய்யத்தின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் மலர்மன்னன் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் மாணவர்கள் நான்கு பேர் கிராம மக்களுக்கு இரத்தப்பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் ச.இராஜேஷ், பிரியதர்ஷினி, கோகிலவாணி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 6 பேர் கிராம மக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினர். திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர்கள் வி. ஹெலன், ரா. காமாட்சி, ஆர். ஹேமமாலினி, 5 உதவி செவிலியப் பயிற்சி மாணவிகள், ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ.அருணாச்சலம் மற்றும் மருத்துவக்குழுவினர் பொது மருத்துவமுகாம் மற்றும் புற்றுநோய்முகாமிற்கான மருத்துவ உதவிகளை மேற்கொண்டனர். இம்மாபெரும் பொதுமருத்துவமுகாமில் 198 பேரும் மார்பகம் மற்றும் கருப்பைவாய்புற்றுநோய் பரிசோதனையில் 40 பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முன்னதாக கோபி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன் வரவேற்றார். செயலாளர் வெ. குணசேகரன் நன்றி கூறினார். ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை பெரியார் மருத்துவக்குழுமத்துடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் புற்றுநோய் பரிசோதனைகளை தொடர்ந்து செய்துவருகின்றது. பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கிடையே மருத்துவர் க.கோவிந்தராஜ் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்படக் கலைஞர் பாண்டியன் மருத்துவ முகாமிற்கான அனைத்து ஒளிப்படங்களையும் சிறப்பாக எடுத்திருந்தார். இரண்டு நாட்களுக்கான அறுசுவை உணவுகளையும், மருத்துவக் குழுவினர் தங்கும் இடவசதிகளையும் கோபி மற்றும் கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆசிரியர் அறிக்கை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *