சென்னன, நவ.24 வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது சென்னை விமான நிலைய காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா, கடந்த 7-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக சென்னை விமான நிலையத்தில் எச்.ராஜா பேட்டி அளித்ததாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை விமான நிலைய காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், எச்.ராஜா மீது கலவரத்தை தூண்டுதல், வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவல் பரப்புதல், இரு தரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் சென்னை விமான நிலைய காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.