தொண்டறச் செம்மல் பூண்டி கோபால்சாமிக்குக் கழகம் எடுத்த நூற்றாண்டு விழா!
கழகத் தோழர்களும், பல்வேறு கட்சியினரும், பெருமக்களும் கூடி ஆற்றிய புகழுரைகள்!
தஞ்சாவூர், நவ.24 சுயமரியாதைச் சுடரொளி பூண்டி கோபால்சாமி (செங்குட்டுவன்) அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (23.11.2024) மாலை தஞ்சையில் சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.
பூண்டி இரா.கோபால்சாமி படத்திறப்பு
திராவிடர் கழகத் தலைவர் பங்கேற்று, கோபால்சாமி அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து தொண்டற உரையாற்றினார்.
பூண்டி கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டை யொட்டி மலரும் வெளியிடப்பட்டது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில் திராவிடர் இயக்கத்திற்கு அரும்பணியாற்றியவர்களை போற்றக்கூடிய வகையில் திராவிடர் கழகம் தொடர்ச்சியாக சுயமரியாதை இயக்க மூத்த முன்னோடிகளுக்கு நூற்றாண்டு பெரு விழாக்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் பழைய கோட்டை அர்ச்சுனன்,சி.டி.நாயகம், ஏ.பி.வி.ஆசைத்தம்பி, திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து, பெரும் புலவர் ந.இராமநாதன், சாமி கைவல்யம், சிவகங்கை இரா.சண்முகநாதன், நீதிபதி சத்தியேந்திரன், ராசகிரி கோ.தங்கராசு, பொத்தனூர் க.சண்முகம், தமிழ்ச் சமுதாயத்திற்குத் தன்னிகரற்ற தொண்டாற்றிய தொண்டறச் செம்மல் – சமயத் துறையில் ஒரு புரட்சித் துறவியாகவே வாழ்ந்து, வழிகாட்டிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் நூற்றாண்டு விழாவையும் திராவிடர் கழகம் நடத்தியுள்ளது.
மறைந்த பெரியார் பெருந்தொண் டர்கள் உடையார்பாளையம் வேலாயுதம், தமிழ் மறவர் பொன்னம்பலனார், நம்மிடையே வாழும் பத்தமடை பரமசிவம் உள்ளிட்ட மூத்த முன்னோடிகளுக்கு பாராட்டு விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது திராவிடர் கழகம்.
அந்த வரிசையில் திராவிட மாணவர் கழகத்தின் முன்னோடி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (23.11.2024) மாலை 5.45 மணிக்கு தஞ்சை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பகுத்தறிவு கலைநிகழ்ச்சியில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், கோபு.பழனிவேல், பாவலர் பொன்ராசு, மோகன்தாஸ், கலைச்செல்வி அமர்சிங், பெரியார் செல்வன் அமர்சிங் உள்ளிட்ட தோழர்கள் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடி நிகழ்வினை சிறப்பாகத் தொடங்கி வைத்தனர்.
மாலை 6.30 மணிக்கு தொடங்கிய விழா நாயகர்இரா.கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டு விழா விற்கு வருகை தந்தவர்களை தஞ்சை மாவட்டத் தலைவரும், பூண்டி கோபால்சாமி அவர்களின் மரு மகனுமான வழக்குரைஞர் சி.அமர்சிங் வரவேற்று மகிழ்ந்தார்.
இது வெறும் நூற்றாண்டு விழா அல்ல – நன்றி விழா!
‘‘எங்கள் குடும்ப நிகழ்ச்சி என்றால் அதில் கட்டாயம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்றுப் பெருமை சேர்ப்பார். அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்து இருந்தாலும், பெருமை வாய்ந்த இந்த நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்பித்திருப்பது எங்களுக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.
‘‘என்னை மருமகனாக அல்ல, மகனாகப் பாவித்து, தன் செலவில் சட்டக் கல்லூரியில் படிக்க வைத்ததன் காரணமாக 40 ஆண்டுகாலமாக வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறேன். என் பிள்ளைகளை நல்ல முறையில் உயர்த்த முடிந்தது – இது வெறும் நூற்றாண்டு விழா அல்ல – நன்றி விழா’’ என்று உருக்க மாக வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னிலை ஏற்று வாழ்த்துரை வழங்கிய தஞ்சை மாவட்டக் கழக செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், குடந்தை மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ், திருவாரூர் மாவட்டத் தலைவர் சு. கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா. செந்தூர பாண்டியன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் குப்பு.வீரமணி, தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், திராவிட தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் மு.சேகர், கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் முனைவர் வி. தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தஞ்சை மாவட்டத் தலைவர் பி.ஜி.இராஜேந்திரன், வணக்கத்துக்குரிய தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் நூற்றாண்டு விழா நாயகர் பூண்டி கோபால்சாமி அவர்களின் தொண்டறத்தைப் பாராட்டி உரையாற்றினார்கள்.
விழா நாயகர் பூண்டி கோபால்சாமியின் குடும்பத்தினர் சூழ, அவரது படத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்.
கழகத் தலைவர் ஆசிரியர் தொகுத்த நூல் வெளியீடு
திராவிட மாணவர் கழக முன்னோடி பூண்டி இரா.கோபால்சாமி அவர்களைப் பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தொகுத்த நூலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் வெளியிட பகுத்தறிவு எழுத்தாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மருதவாணன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமது உரையில், ‘‘அனைவரும் நமது தலைவரை குடும்பத் தலைவர் என்று குறிப்பிட்டு சொல்வார்கள். அதற்கு இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டானதாகும். நம்முடைய மேடைகளில் கழகத் தலைவரின் அறிவுறுத்தலின் படி இயக்கப் பாடல்களை பாடிவிட்டு நிகழ்ச்சிகளை தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோள் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரியார் தொண்டர்கள் என்றால் எப்படி நடக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் கோபால்சாமி அவர்கள்.
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பேதம் இருந்ததை எதிர்த்துத் தோன்றியதுதான் திராவிட மாணவர் கழகம்!
குடந்தை அரசினர் கல்லூரி விடுதியில் அவர் படித்த காலத்தில் மாணவர்களுக்கு குடிக்கும் தண்ணீர் பானையில்கூட பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பேதம் இருந்ததை எதிர்த்துத் தோன்றியதுதான் திராவிட மாணவர் கழகம்.
கவிஞர் கருணானந்தம், தவமணிராசன், பூண்டி கோபால்சாமி (செங்குட்டுவன்), சொக்கப்பா, குடந்தை ராமதாஸ் போன்றவர்களும் களமாடினார்கள்.
01.12.1943 இல் குடந்தை அரசினர் கல்லூரியில் அறிஞர் அண்ணாவை அழைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தினர் இத்தோழர்கள்; அன்றைய தினத்திலே திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்டது. அதாவது, தாய்க் கழகமான திராவிடர் கழகம் தொடங்குவதற்கு 8 மாதங்கள் முன்பே திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்டது என்பது ஒரு சிறப்பாகும்.
குடிநீர்ப் பானை வேறுபாட்டையொட்டி, அதற்குமுன்பாகவே தந்தை பெரியாரை அழைத்து கல்லூரி வளாகத்திலேயே பொதுக் கூட்டத்தையும் நடத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்த இராவண லீலா நிகழ்ச்சி!
அய்யா மறைந்து ஓராண்டுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் 1974 இல் இந்தியாவே திரும்பி பார்த்து வியப்படைந்த வகையில் மிக துணிச்சலுடன் இராவண லீலா நிகழ்ச்சி நடத்திய போது, உடன் இருந்தவர் நம்முடைய அய்யா கோபால்சாமி அவர்கள்.
அன்னை மணியம்மையார் எரித்த இராமன், இலட்சு மணன், சீதை உருவங்களை வடிவமைத்தவர் நமது விழா நாயகர் கோபால்சாமி ஆவார்’’ என்று குறிப்பிட்டார்.
ஆசிரியர் கருத்து
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையில்,
‘‘என் வாழ்விலும், கழகப் பொதுவாழ்விலும் தொண்டாற்றிய கோபால்சாமி அவர்களுக்கு நன்றி செலுத்தவே நன்றி பெருக்கோடு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கிறோம்.
சமுதாயத்திற்கு பாடுபட்டவர்கள் என்பதை சாதார ணமாக கடந்து செல்ல முடியாது; நல்ல மனிதராகப் பகுத்தறிவாளராக இருந்தவர் என்றால் தன்னுடைய வாழ்க்கையை எதிர்நீச்சல் பயணமாக அமைத்துக் கொண்டவர் என்று பொருள்.
பெரியார் பெருந்தொண்டர்
எப்படி இருக்க வேண்டும்!
பெரியார் பெருந்தொண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக இதனை சொல்லுகிறேன்.
1. உன்னதமான தலைமை, 2.உண்மையான தொண்டர்கள், 3. உறுதியான கொள்கை, 4.யோக்கிய மான பிரச்சாரகர்கள் இந்த நான்கும் தான் முக்கியம்! சுயமரியாதை இயக்கம் இவற்றை நமக்குத் தந்துள்ளது என்பதை யாரும் மறந்துவிடகூடாது.
பூண்டி கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை நடத்துகிறோம் என்றால் அது அவருக்காக அல்ல; சமுதாயத்திற்காகவே கொண்டாடுகிறோம் என்பது முக்கியமாகும்.
ஏனென்றால் எளிய வாழ்வுதான்; ஆனால், எப்போதும் இனிய வாழ்வு என்பதன் இலக்கணமாக வாழ்ந்து வழிகாட்டிய கொள்கையாளர்.
அவருடைய நூற்றாண்டு விழாவில் நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய முழக்கம் என்னவென்றால், ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புக்கு களப்பணி செய்து, சமத்துவ-சமுதாயத்தை உருவாக்கி, சமூகநீதியை காத்து அனைவருக்கும் அனைத்தும் என்பதற்காக உழைப்பதே நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாகும்’’ என்று குறிப்பிட்டார்.
பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர துணை மேயர், தி.மு.க. மருத்துவரணி மாநில துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநில பகுத்தறிவு ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, திருக்குறள் சோமசுந்தரம், பேராசிரியர்கள் இளமுருகன், பெரியசாமி, நம்.சீனிவாசன், நாடகவேள் மா.வீ.முத்து, தி.மு.க. புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகர கழகத் தலைவர் நரேந்திரன், தஞ்சை மாநகர இணைச்செயலாளர் வீரக்குமார், வீதிநாடகக் கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் ந.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழமைக் கட்சியினர், இரா.கோபால்சாமி குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொண்டு செய்வோர் சாவதில்லை – கொள்கையாய் வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதற்கான விழாவாக இது அமைந்திருந்தது.
நிகழ்ச்சியினை தஞ்சை மாநகரச் செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார். நிறை வாக பூண்டி கோபால்சாமி அவர்களின் மகள் அ.கலைச்செல்வி நன்றி கூறி, நிகழ்ச்சியினை முடித்து வைத்தார். வருகை தந்த அனைவருக்கும் இரவு சிற்றுண்டி ஏற்பாடு செய்து உபசரிக்கப்பட்டது.
தொகுப்பு: கலைமணி