நைரோபி, நவ.22 கவுதம் அதானியுடன் போடப்பட்டிருந்த, பல மில்லியன் டாலர் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.
அதிபர் வில்லியம் ரூட்டோ நாடாளுமன்றக் குழுவிடம் ஆற்றிய உரையில், “எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் கூட்டு நாடுகள் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.
அதானி குழுமம் கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் கூடுதல் ஓடுபாதை மற்றும் நவீனமயமாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதற்குப் பதிலாக, விமான நிலையத்தை அதானி குழுமம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கத் திட்டமிட்டிருந்தது. அதனை கென்யா ரத்து செய்துள்ளது.பொருளாதாரத்தில் தள்ளாடிக்கொண்டு இருக்கும் கென்யாவிற்கு 13.02.2022 அன்று சென்ற மோடி சில ரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அவை அனைத்தும் அதானிக்கான ஒப்பந்தங்கள் என்று ஊடகவியலாளர் ரவீஷ் குமார் எகனாமிக்ஸ் வீக்லீ என்ற ஆங்கில இதழின் செய்தியை மய்யமாக வைத்து குற்றம் சாட்டி இருந்தார்.
அதானிக்கு எதிராக கென்யாவில் போராட்டம்
கென்யாவின் நைரோபி விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் இதனால் பன்னாட்டு விமானங்களின் இயக்கம் கடுமையாக தடைபட்டது. மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவின் வணிக மய்யமான கென்யாவில், மின் கடத்தும் பாதைகளை அமைப்பதற்கான ஒப்பந்தமும் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது.
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ்
‘லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட பிறகு, கென்யா விமான நிலையம் அதானி குழுவுடனான மின் பரிமாற்ற ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. இது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான், இன்று நடந்துள்ளது. அதானி குழுமத்துடனான பிரதமரின் நீண்டகால உறவு உலகளவில் நன்கு அறியப்பட்டதாகும். வெளிநாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு பொருளாதார நலன்களில் இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.