அந்தோ! ‘தலித் வாய்ஸ்’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர் வி.டி. ராஜசேகர் மறைந்தாரே!

2 Min Read

நமது வீரவணக்கம்

பெங்களூருவிலிருந்து வெளி வந்த ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக் குரலாக ஒலித்த ‘தலித் வாய்ஸ்’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர் நம் அருமை சகோதரர் வி.டி. ராஜசேகர் அவர்கள் நேற்று (20.11.2024) மறைந்த செய்தி கேட்டு தாங்கொணா துயரம் கொண் டோம்.
எழுத்து உலகில் – குறிப்பாக ஆங்கில இதழியல் துறையில் தனது கூர்மையான எழுத்து– கொள்கை உறுதியால் ஓர் எழுச்சியை ஏற்படுத்திய நண்பர் வி.டி. ராஜசேகர் தனது 93ஆவது வயதில் முதுமையின் காரணமாக மங்களூரு நகரில் காலமானார்.

ஆதிக்க சக்திகளின் அடக்குமுறையினை எதிர்த்துத் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் அனைவரும் ‘தலித்‘ எனும் உள் ளடக்கத்தில் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என இடைவிடாது எழுதி வந்தவர். இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள்மீதும், ஆப்பிரிக்க, அமெரிக்க கருப்பின மக்கள் மீதும் கடைப்பிடிக்கப்படும் ஒடுக்குமுறையின் ஒற்றுமை குறித்து விரிவாக ஆய்வு செய்து ‘The Black Untouchables of India’ என்ற அரிய படைப்பை உருவாக்கியவர்.
ஒடுக்கப்பட்டோர் விடியலுக்குத் தந்தை பெரியார், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரது கொள்கைகள்தான் கலங்கரை விளக்கு என ஓங்கி உரைத்தவர்.

நம்மிடமும், திராவிடர் கழகத்தின் தோழர்களிடமும் ஆழ்ந்த கொள்கைப் பிணைப்பினை ஏற்படுத்திக் கொண்டவர். சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாநாடுகளிலும் பங்கேற்று எழுச்சிக் குரலாக ஒலித்தவர். சென்னைக்கு வருகை தரும் பொழுதெல்லாம் தவறாது பெரியார் திடலுக்கு வந்து நம்மை சந்தித்து, நடப்பு கால அரசியல், சமூகச் சூழல்களைப் பற்றிய உரையாடலை நிகழ்த்தாமல் அவர் ஊர் திரும்பியதில்லை என்று சொல்லக்கூடிய கொள்கை இணக்கமான சகோதரர்!

வயது முதுமையிலும் முற்போக்குச் சிந்தனையில் நிரந்தர இளைஞராக வாழ்ந்து வந்த வி.டி.ராஜசேகர் தமது எழுத்து மரபில் பல்வேறு எழுத்தாளர்களை உருவாக்கிய உன்னத பணிக்குச் சொந்தக்காரர்.
வி.டி. ராஜசேகர் அவர்்களின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, அவருடன் பழகிய, தொடர்பில் இருந்த, அவர் வலியுறுத்திய ‘தலித்’ அடையாளத் தோழர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் தோழமை கொண்ட நாடு தழுவிய நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறி, வி.டி. ராஜசேகர் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். அவர் விட்டுச் சென்ற பணியினை தொடர்ந்து முன்னெடுப்போம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
21.11.2024 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *