கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில்– அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில்– அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
கோபிச்செட்டிப்பாளையம் மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் ஆசனூரில் (சத்தியமங்கலம்) பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரை, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மலைவாழ் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார். மலைவாழ் மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தமிழர் தலைவரிடம் முன்வைத்தனர்.
அப்பொழுது மருத்துவ தேவை அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டு, அதற்கான உதவியைச் செய்யவேண்டும் என ஒருமித்த குரலாக அம்மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 15.11.2024 அன்று பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவர்கள் குழு பல்வேறு (சுமார் 52) கிராமங்களுக்குச் சென்று, மலைவாழ் மக்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி தொடர்பான ஆய்வறிக்கையை அளித்ததைத் தொடர்ந்து, இன்று (21.11.2024) பெரியார் மருத்துவ அணி, திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மருத்துவர் இரா.கவுதமன், எல்.நல்லசிவம் (தி.மு.க.) ஆகியோரின் முன்னிலையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், முதல்வர் செந்தாமரை, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மாவட்டச் செயலாளர் கோபி குணசேகரன் மற்றும் தோழர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.