சென்னை, நவ. 20- சட்டப் பேரவையின் அடுத்த கூட்டம் டிச.9, 10ஆம் தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
தொடர்ந்து, பிப்.19ஆம் தேதி தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர்.
இரு நிதிநிலை அறிக்கைகள் மீதும் 22ஆம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், துறைகள்தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டன. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப் பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, டிச. 9, 10ஆம் தேதிகளில் கூட்டம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, பேரவைத்தலைவர் மு.அப்பாவு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தமிழ்நாடு திரும்பியுள்ளார். விரைவில் முதலமைச்சருடன் பேசி சட்டப்பேரவை கூடும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.