தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்வு எவ்வளவு – மற்ற மாநிலங்களின் கருத்துக்களை கேட்டு அறிவிப்பார்களாம் : நிதிக் குழு தலைவர் தகவல்

Viduthalai
3 Min Read

சென்னை, நவ.19 தமிழ்நாடு அரசின் நிதிப் பகிர்வு பரிந்துரைகளை, மற்ற மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் என்று 16-ஆவது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் 16-ஆவது நிதிக் குழு அதன் தலைவர் அரவிந்த் பன காரியா தலைமையில் சென்னை வந்துள்ளது. இந்தக் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றது. அதன்பின், நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா செய்தியாளர்களிடம் கூறி யது: “இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 16-ஆவது நிதிக்குழு தனது பணிகளை தொடங்கி, 12-ஆவது மாநிலமாக தமிழ்நாடு வந்துள்ளது. மேலும் 16 மாநிலங்களின் கருத்துக்களை கேட்க இன்னும் 7 மாதங்கள் பயணிக்க உள்ளோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலத் தின் வளர்ச்சிக்கான தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தனது அறிக்கையை சிறப்பாக தயாரித் துள்ளது. முதல் கோரிக்கையாக செங்குத்து மற்றும் கிடைமட்ட பகிர்வு உள்ளது. செங்குத்து வரிப் பகிர்வை பொறுத்தவரை தற்போது நடைமுறையில் மாநிலத்துக்கு 41 சதவீதம், ஒன்றிய அரசுக்கு 59 சதவீதம் என இருப்பதை, மாநிலத்துக்கு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக உள்ளது. மற்ற மாநிலங்களும் இதே கோரிக்கையை வைக்கின்றன.வளம்மிக்க மாநிலங்கள், வளமில்லா மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி, 1990-களில் 3-க்கு ஒன்று என்று இருந்த நிலையில், தற்போது 6-க்கு 1 என மாறியுள்ளது. எனவே, வரிப் பகிர்வு என்பது வளமில்லாத மாநிலங்களுக்கு அதிகளவு செல்கிறது. தமிழ்நாடு போன்ற வேகமாக வளரும் மாநிலங்களுக்கு போதிய நிதியை வழங்காவிட்டால் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது மாநில அரசின் கருத்தாக உள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் பங்களிப்பை தமிழ்நாடு வழங்குவதால், அதே அளவு நிதிப்பகிர்வை தமிழ் நாடு அரசு எதிர்பார்க்கிறது. உள்ளாட்சி களுக்கான நிதி ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்க கோரியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு நிதிக்குழு முடிவெடுக்கும்.தனி நபர் வருவாய் வேறுபாட்டை பெய ரளவுக்கு கருதக்கூடாது. அது அதிகமாக விலைவாசி உயர்வுடன் தொடர்புடையதாக உள்ளது என தமிழ்நாடு தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரிப் பகிர்வுக்காக தனிநபர் வருமான வரம்பை 45-லிருந்து 35 சதவீதமாக குறைக்க பரிந்துரைத்துள்ளது. மற்ற 16 மாநிலங்களுக்கு சென்று வந்த பின் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

ஒன்றிய அரசின் நிதி உதவி திட்டங்களில் ஒன்றிய, மாநில அரசுகளின் பங்கு 60 மற்றும் 40 சதவீதமாக உள்ளது. கூடுதல் நிதிக்கு பரிந்துரைக்க வேண்டும என கோருவது மாநிலங்களின் உரிமை. நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று தனித்துவம் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமுமே சிறப்பு வாய்ந்ததுதான். ஆனால், 25 விதமான அம்சங்களை செயல்படுத்த முடியாது. மேலும், நிதிப் பகிர்வை உயர்த்துவது குறித்து அனைத்து மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பின்னர் முடிவெடுப்போம்.

காலநிலை மாற்றத்தை குறிப்பிட்டு தமிழ்நாடு பேரிடர்களுக்கு முழுமையான நிதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற கோரிக்கைகளை கடலோர மாநிலங்களும் வைத்துள்ளன. இதனை நிதிக்குழு வரவேற்கிறது. அதே நேரம், பேரிடர் மேலாண்மை நிதிகளுக்கு மாற்று வழிகளும் ஆராயப்படும். பேரிடர் குறியீட்டுக்குள் வராதவற்றுக்கும் நிதி அளிப்பதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்படும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *