சென்னை, நவ.19 ஒன்றிய – மாநில அரசுகளின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்துரை செய்ய வேண்டும். ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று 16-ஆவது நிதி ஆணைய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஒன்றிய அரசின் 16-ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், அதன் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் 4 நாள் பயணமாக தமிழ்நாடு வந் துள்ளனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அய்டிசி சோழா ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் நிதிக் குழுவினர் நேற்று (18.11.2024) காலை ஆலோசனை நடத்தினர். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சுகாதாரம், கல்வி, சமூகநலம், வேளாண்மை ஆகிய துறைகளின் முன்னேற்றத்துக்கான முக்கிய திட்டங்களை, பெரும்பாலும் மாநில அரசுகள்தான் வடிவமைத்து செயல்படுத்துகின்றன. ஆனால், அதற்கேற்ற வருவாயை பெருக்கு வதற்கான அதிகாரங்கள் மாநில அரசு களிடம் குறைவாகவே உள்ளன.
அந்த வகையில், கடந்த 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாய் பங்கை 41 சதவீதமாக உயர்த்தியதை வரவேற்கிறோம். அதேநேரம், இந்த பரிந்துரைக்கு மாறாக, கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. மாநில வரிப் பகிர்வில் உள்ள மேல்வரி, கூடுதல் கட்டணம் ஆகியவற்றை ஒன்றிய அரசு பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம். மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதிநிலையை பாதிக்கிறது.
எனவே, ஒன்றிய – மாநில அரசுகளின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்துரை செய்ய வேண்டும். ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டிற்க்கான வரிப் பகிர்வு 9-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த 7.931 சதவீதத்தில் இருந்து 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த 4.079 சதவீதம் என வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தொய்வடைய செய்து, தண்டிப்பதுபோல உள்ளது. எனவே, வரிப் பகிர்வு முறையில் சமச்சீரான வளர்ச்சி, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை சம குறிக்கோள்களாக கருதி பரிந்துரை வழங்க வேண்டும்.இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மறு பகிர்வு முறை மூலம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை.
எனவே, வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்காத வகையில், தேவையான நிதியை வழங்கும் ஒரு புதிய அணுகுமுறையை நிதிக் குழு வடிவமைக்க வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு நிதிக் குழுக்களின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டிற்க்கு இழைக்கப்பட்ட அநீதி களுக்கு உரிய தீர்வை 16-ஆவது நிதிக் குழு வழங்கும் என்று நம்புகிறோம்.
ஒவ்வொரு மாநிலமும் அதன் முழு திறனுக்கு ஏற்ற வளர்ச்சியை எட்டுவதன் மூலமாகவே இந்திய திருநாட்டை உலக அரங்கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலை நிறுத்த முடியும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
முதலமைச்சர் கூறிய 3 பிரச்சினைகள்: நிதிக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டின் 3 முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: இயற்கை பேரிடர்களால் தமிழ் நாடு பேரழிவை சந்தித்து வருகிறது. இந்த பாதிப்புகளை சரிசெய்ய அதிக நிதி செலவிட வேண்டி உள்ளதால், வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியவில்லை.
முதியோர் எண்ணிக்கை அதிகரிப்ப தால், அவர்களது தேவைகளை பூர்த்திசெய்ய அடுத்த 10 ஆண்டுகளில் உரிய பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், பல துறைகளில் அதிக முதலீடுகள் செய்வது அவசியம்.
மேலும், நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவது முக்கிய சவாலாக உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, பேரிடர் துயர் தணிப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள உரிய நிதி வழங்கவும், சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரம் வழங்கவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி, மானியங்கள் வழங்கவும் நிதிக் குழு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.