சுயமரியாதை இயக்கம் என்ற உலகின் ஒப்பற்ற சமூக இயக்கம் மனித நேய, மனித குல சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதைக்காகவே 1925இல் தந்தை பெரியாரால் தொடங்கப் பெற்றது.
உலகில் எங்கும் காணப்படாத, ஜாதி என்ற பெயரால், வர்ணாஸ்ரமத்தின் வன்கொடுமையான பிறவி இழிவு, தீண்டாமை, நெருங்காமை, பாராமை, (untouchability, unapproachability, unseeability) என்ற முப்பெரும் ‘திரிசூல’த்தாக்கும் – அதுவும் உழைக்கும் ஜாதியான ஆதிகுடிமக்கள் மீது நடத்தப் பெற்று மக்களைப் பிரித்ததோடு,
அவர்களது,
கல்வி உரிமை
உத்தியோக உரிமை
சொத்துரிமை
திருமண உரிமை
ஒட்டுமொத்தத்தில் கோடானு கோடி ஒடுக்கப்பட்ட பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள், சூத்திரர், பஞ்சமர், சண்டாளர் உரிமை ஆகியோர் பெயர் வைத்துக் கொள்ளும் என எல்லாம் பறிக்கப்பட்ட சமூக அவலமும் அநீதியும் உலகம் காணாதது!
மீறி படித்தால் – அவன் கீழ்ஜாதிக்காரன் என்றால் அவனுக்கு நினைக்கவே முடியாத கொடுந்தண்டனையாக, நாக்கை அறுக்க ஆணை, கீழ்ஜாதி கல்வி வாசிப்பைக் காதால் கேட்டதால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் கொடுந் தண்டனை என்ற கோரத்தாண்டவம் கொலுவீற்றிருந்த மனுவின் ஆட்சியின் மாக்கொடுமையாகும்.
மக்கள் தொகையில் சரிபகுதியாக உள்ள மகளிர் – அனைவரும் ‘நமோசூத்திரர்கள்’ என்று கீழ்மைப்படுத்தப்பட்டு,
ஜாதிய அடுக்கு முறையில்
பிராமணர்
சத்திரியர்
வைஸ்யர்
சூத்திரர்
என்ற நால்வர்ணமும் – வர்ணத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட (outcastes) அவர்ணஸ்தர்கள் என்ற பிரிவில்,
பஞ்சமர்
அனைத்து ஜாதிப் பெண்களும்
‘நமோசூத்திரர்கள்’ ஆவர்.
இந்த ஏற்பாட்டினை – வர்ண பேதங்களை கடவுளே உருவாக்கினார்கள்; அவர்களையும் கட்டுப்படுத்தும் வேதங்களும், ஸ்மிருதிகளும், சுருதிகளும், தர்மசாஸ்திரங்களும் உருவாக்கப்பட்டதால் மனிதர்களாலே இதனை ஒழிக்கமுடியாது; கூடாது.
இது கடவுள் செய்த ஏற்பாடு என்று இந்தப் பிறவி இழிவு அடிமைத் தனத்திற்கு நிரந்தரப் பாதுகாப்பினை சட்டங்கள் மூலமும், சம்பிரதாயங்கள், சடங்குகள் மூலமாகவும் ஏற்பாடு செய்து ஒரு வெகு சிறு கூட்டம், பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய நிலையை மாற்றவே பிறந்த இயக்கம்தான் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.
அதுபற்றி நாம் அதன் வரலாற்றையும், சிறப்பையும் அது சாதித்தவைகளையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவ்வியக்கம் தொடங்கியபோது, அத்துடன் தம்மை ஒப்படைத்துக் கொண்ட ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரின் போர்ப்படை தளபதி கமாண்டர்களின் ஒருவரான தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களது அரிய கருத்து மழையில் நனைந்துதான் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
அவர் போன்ற அவ்வியக்கத்தின் அடிநாள் கூட்டுப் பணித் தோழர்களின் குன்றாப் பெருமை எப்படி இந்த இயக்கத்தினாலும் அவ்வியக்கத்தின் ஒப்புவமையற்றத் தலைவர் தந்தை பெரியார் அவர்களாலும் வந்தது என்பதை திருவண்ணாமலையில் (3.12.1947இல் – அதாவது 77 ஆண்டுகளுக்கு முன்) நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து அழகிரிசாமி ஆற்றிய அற்புத சுயமரியாதைத் தேன் கூட்டிலிருந்து நாம் அறிய வேண்டும்.
தேனும் பாலும் இனிக்கும் என்பார்கள்; தளபதி அஞ்சாநெஞ்சனின் இந்தப் பிரச்சாரப் பேருரை அவற்றையெல்லாம் மிஞ்சும் ஊக்கத்தெளிவையுடைய ஓர் உலகப் பிரகடனம் – சுயமரியாதை இயக்கம் பற்றி, அதில் ஒரு பகுதி படிப்போமா?
அறிவை அளக்க அறிவுமானி உண்டா?
“நவமணிகள் என்று கூறப்படும் மரகதம், மாணிக்கம், வைடூரியம், பச்சை, நீலம் கெம்பு, புஷ்பராகம் கோமேதகம் முதலியவற்றிற்கும், பவளம், முத்து இவைகளுக்கும், அவற்றின் ஒளி, நிறை இவற்றைக் கொண்டு ஓரளவுக்கு மதிப்புக் கூறிவிடலாம். ஆனால் அறிவின் உச்சியையோ, சிந்தனையின் சிகரத்தையோ. பகுத்தறிவின் எல்லையையோ ஒருவனால் அளவிட்டுக் கூறமுடியுமா? அதற்கு ஒரு அளவுகோலோ துலாக்கோலோ உண்டா? ஏதாவது மீட்டர்தான் உண்டா? தோழர்களே சிந்தித்துப் பாருங்கள்! ஆலோசித்துக் கூறுங்கள்! அறிவை அளக்க எங்காவது அறிவுமானி உண்டா? அப்படி இருக்க அறிவின் ஜ்வாலையாகவும், சிந்தனையின் பெட்டகமாகவும், ஆற்றலின் சிகரமாகவும், எல்லை காணமுடியாத பகுத்தறிவின் இருப்பிடமாகவும் இருந்துவரும் பெரியாரை நாம் எந்தக் கோல் கொண்டு மதிப்பிட்டுப் பார்ப்பது? வயது ஏற. ஏற திறனும் ஏறிக் கொண்டேதான் போகிறது. கோகலே ஹாலில் ஒரு சாண் நீண்டதென்றால் சேலத்தில் ஒரு முழம் நீளுகிறது. சேலத்தில்தான் ஒரு முழம் என்றால், திருவண்ணாமலையில் ஒரு கெஜம் நீளுகிறது. இப்படியாக இவரது பகுத்தறிவும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் வருகிறது.
பகுத்தறிவும் அன்பும் வகுத்த வழி
இத்தகைய ஒரு பகுத்தறிவின் காரணமாகத்தான் என்னைப் போன்ற அடங்காப்பிடாரிகளும்கூட, அவரை நாடி வரவேண்டியிருக்கிறது. அவரது தெளிந்த பகுத்தறிவுத் தேனின் ருசியை ஏற்கெனவே அனுபவித்த காரணமாகத்தான், அந்த ருசியில் மயங்கித்தான். இன்று மதுதேடி அலையும் வண்டுகளைப்போல், நாம் இங்கு கூடியுள்ளோம். ஒளி கண்டு மயங்கிக் கிடக்கும் விட்டில் பூச்சிகளைப்போல், நாமும் அவரது கருத்துக்கள் என்னும் பிரசங்கத்தேனையுண்டு இன்று திளைத்திருக்கிறோம். அவரது பகுத்தறிவு, நுண்ணிய நுண்ணறிவுக்கும் மிக நுண்மையானது. ஆகவேதான் நம்மைப் பிற நாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது. நம்மை விட ‘அதிர்ஷ்டசாலிகள்’ இவ்வுலகில் வேறொரு மக்கள் கூட்டம் இருக்கமுடியாது என்று கூறத்தோன்றுகிறது. உண்மையாகத்தான் கூறுகிறேன். பொல்லாத கொடிய விரியன் பாம்புகள் நம்மை ஆட்சி புரிந்து வரும்போது. ஒரு பக்கம் இவ்வற்பர்களின் அடக்குமுறைத் தொல்லையும், மற்றொரு பக்கம் அன்பர்களின் பட்டினிக் கூப்பாடும் நம்மை வாட்டிவரும் போது, பெரியாரைப் போன்ற உருவங்கள் நம்மிடையே இருந்து சற்று ஆறுதல் ஊட்டி வருவதால்தான் நாம் உயிரோடு இந்நாட்டில் வாழ முடிகிறது. இன்றேல் நாம் என்றோ இறந்திருப்போம் அல்லது இந்நாட்டை விட்டேனும் எங்காவது ஓடிவிட்டிருப்போம். ஆம். பெரியார் ஒருவர்தான் நம்மை இந்நாட்டோடு இணைத்து வைத்திருக்கிறார். அவரது பகுத்தறிவும் அன்பும்தான், நம்மை அவர்பால் இழுத்து அவர்வழிச் செல்லத் தூண்டுகிறது. அன்னாரையோ அல்லது அன்னாரது இயக்கத்தின் வளர்ச்சியையோ சரிவர அறிந்திருக்கமாட்டார்கள் – இந்தப் பதவி வேட்டை உருவாரங்கள். ஆகவேதான் சில சந்தர்ப்பங்களில் அவரை எதிர்த்து விஷமம் செய்து பார்க்கிறார்கள்.
எண்ணினார் பனகல் – இயற்றினார் பெரியார்
இவர் தமது இயக்கத்தை ஆரம்பித்த காலம் 1925 அல்லது 1926 ஆக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் நம் மாகாண அமைச்சராக இருந்தவர். நமது மதிப்பிற்குரிய பனகல் அரசர் ஆவார்கள். அவர் தலைசிறந்த அறிவாளி, கைதேர்ந்த ராஜதந்திரியும் கூட, அவர் “பொதுப்பணம் ஏராளமாகக் கோவில்களில் வீணாக்கப்படுகிறது. அனைத்தும் பார்ப்பனின் வாழ்வுக்கே உபயோகப்பட்டு, வருவதோடு.நம் மக்கள் வேறு ‘மடையர்களாக்கப்பட்டு வருகிறார்கள்; அதைக் கட்டுப்படுத்த கோவில்கள் தம் வரவு செலவுக் கணக்குகளைச் சர்க்காருக்குக் காட்ட வேண்டும் என்று சட்டம் செய்யத் தீர்மானித்தார். அப்படிப்பட்ட ஒரு சட்டம் செய்ய, அவசியம் பொதுமக்கள் ஆதரவு வேண்டும். அவருடைய அன்றைய ஜஸ்டிஸ் கட்சியோ. மிட்டாதார். மிராஸ்தார், ஜமீன்தார் இவர்களின் கூட்டமாக இருந்ததால் தன் கட்சித் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கஷ்டமென்று கண்டு கொண்டார். அத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவை யாராவது திரட்டிக் கொடுத்தால் நலமாக இருக்குமென்று கருதி, அப்பணியை யாரிடம் ஒப்புவிப்பதென்று யோசிக்கலானார். அவருடைய யோசனைக்குப் பெரியார் ஒருவர்தான் பிடிபட்டார்.
பெரியாரிடம் வந்து இரண்டு மூன்று நாள் தொடர்ந்து பெரியார்அவர்களுடன் கலந்து பேசினார். காங்கிரசிலிருந்த போதே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும். சமுதாயச் சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டு, அதன் காரணமாக அதைவிட்டு வெளியேறி விலகியிருந்த பெரியார் அவர்களும் அவரது வேண்டுகோளுக்கு இணங்கித் தமிழ்நாடெங்கனும் இப்பொல்லாத பிராமணியத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்யத் துவங்கினார். “சாமிக்கு அரிசி பருப்பு ஏன் படைக்க வேண்டும்? அந்தச் சாமி சாப்பிடுவதாக எந்த டாக்டராவது சர்டிபிகேட் எழுதிக் கொடுப்பாரா? அப்படியிருக்கச் சாமிக்கென்று கூறிச் சோம்பேறிப் பார்ப்பனர்கள்தானே அதை உண்டு வயிறு வளர்க்கிறார்கள். பாடுபட்டு பட்டினி கிடக்கும் நீங்கள்தானே அதற்கும் படி அளந்து வருகிறீர்கள்” என்கின்ற பல்லவியைத் துவக்கி, “சாப்பிடட்டும்! தொலைந்து போகிறார்கள். அதற்குக் கணக்காவது காட்டி தொலைக்கட்டுமே! கணக்கில்லாவிட்டால் அவர்கள் பொது சொத்துக்களையெல்லாம் நாளா வட்டத்தில் தமது சொந்தச் சொத்தாக்கிக் கொள்வார்களே! நீங்கள் அழ, அழ. அவர்கள் உங்களைக் கொள்ளையடிப்பதா?” என்பதாக இன்னும் இப்படிப் பல விஷயங்களைக் கிளப்பி ஆங்காங்கு கர்ஜித்து வந்தார். அந்தச் சமயம் பார்ப்பனர் “ஜஸ்டிஸ் கட்சி சாமிகள் தலையில் கைவைத்துவிட்டது” என்று விஷமம் செய்து, மக்களை ஜஸ்டிஸ்கட்சி மீது வெறுப்படையச் செய்து இருந்தது என்றாலும் பெரியார். பேச்சைக் கேட்ட பிறகு சட்டம் அவசியம்தான்; கணக்கு வழக்கு கவனிக்க வேண்டியதுதான் என்று கருதிக் கொண்டார்கள். பனகல் அரசருக்கும் இந்து மத பரிபாலனச் சட்டம் இயற்றுவது சுலபமாக முடிந்தது.
எதிர்ப்பின் விளைவு சுயமரியாதை இயக்கம்
அந்த இந்து மத எதிர்ப்புப் பிரசாரத்தில் சேர்ந்தவர்கள் தான். நாங்கள் ஏழெட்டுப் பேர்கள். சட்டமியற்றுவதற்கு ஆதரவு தேடித் தந்ததும். பெரியார் அவர்கள் சிந்திக்கலானார். அவர் பெரிய தூரதிருஷ்டியுடையவர். ஆதலால் யோசித்துப் பார்த்தார். இந்த ‘ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களோ பணக்காரர்கள்; பணத்தைக் காப்பாற்ற தம் பதவியை நீடிக்க எதையும் செய்ய இவர்கள் துணிவார்கள். இவர்களை நம்பி நம்மால் என்ன செய்ய முடியும்? இவர்களது வேலை முடிந்ததும் நம்மை இவர்கள் கைவிட்டு விடுவார்களானால் நாம் என்ன செய்வது; நாம் மக்களிடையே செய்த இவ்வளவு பிரசாரத்தையும் வீணாக்குவதா? கூடாது! கூடாது! தனி இயக்கம் ஒன்று கண்டே தீரவேண்டும். ‘அவ்வியக்கத்திற்கு என்ன பெயர் கொடுப்பது’ என்று சிந்தித்தார். தம் ஆபீஸ் அகராதிகளையெல்லாம் புரட்டிப் பார்த்தார். அப்போது கண்டெடுத்த வார்த்தைதான். ‘சுயமரியாதை’ என்பது. அப்போது தோற்றுவித்ததுதான் சுயமரியாதை இயக்கமும் ஆகும்.
(அடுத்த கட்டுரையில் தொடரும்)
குறிப்பு: கழக வெளியீடான ‘இதோ பெரியாரில் பெரியார்’ என்ற புத்தகத்தை நமது இயக்க மாணவர், இளைஞர், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கொள்கை பற்றிய விளக்கம் தேடுவோர் வாங்கி, கருத்தூன்றிப் படித்து கற்றுக் கொள்ள முன்வாருங்கள்.
– ஆசிரியர்