குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் : சித்தராமையா

Viduthalai
1 Min Read

பெங்களூரு நவ.17 காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிரூபித்தால் அராசியலை விட்டு விலகுவதாக கருநாடக முதலமைச்சர் சவால் விடுத்துள்ளார். வருகிற 20-ஆம் தேதி மகாராட்டிராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் மராட்டியத்தில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசும்போது, கருநாடகாவில் மக்களிடம் கொள்ளையடித்து, அந்த நிதியை மராட்டிய தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

நேற்று (16.11.2024) கருநாடக முதலமைச்சர் சித்தராமையா சோலாப்பூரில் செய்தியாளர்களிடம், “பிரதமர் மோடி வருகிறார். பொய்களை கூறி விட்டு செல்கிறார். அவர் குற்றச்சாட்டுகளை உண்மை என நிரூபிக்க முடியுமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு முடிவை நான் அறிவிப்பேன். என்னுடைய சவாலை மோடி ஏன் ஏற்கவில்லை? எதற்கு அவர் அச்சப்படுகிறார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அவர் கூறும்போது, பா.ஜ.க. தலைவர்களும், அமைச்சர்களும் உண்மையை சரிபார்க்க கருநாடகாவுக்கு வரட்டும். அவர்கள் தவறு நடந்துள்ளது என நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். ஆனால் நான் கூறுவது சரியென்றால், மகாராட்டிர மக்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடுவார்களா?”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *