மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

Viduthalai
1 Min Read

 மேட்டூர், ஜூலை 27  ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் முக்கிய அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் 25.7.2023 அன்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து அன்று மாலை முதல் படிப்படியாக உயரத் தொடங்கியது. கேரளா, கருநாடகா மாநில வனப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கருநாடகா மாநில அணைகளில் இருந்து காவிரியாற்றில் தமிழ்நாட்டை நோக்கி உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து மற்றும் அணைகளின் நீர் இருப்பு நிலவரத்துக்கு ஏற்ப காவிரியாற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் (25.7.2023) மாலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து சேர்ந்தது. அன்று இரவு 9 மணியளவில் விநாடிக்கு 5,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. அதேபோல, நேற்று (26.7.2023) காலை அளவீட்டின்போது விநாடிக்கு 6,000 கனஅடியாக நீர்வரத்து கூடியது. மேலும், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியுள்ளது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *