நேற்று மதியம் (15-11-2024) சேலம் உத்தமசோழபுரம் அருகே ஒரு திருமண வரவேற்பு விழாவுக்கு சென்று விட்டு வரும் வழியில் மழை வந்த காரணத்தால் ஒரு இரும்புக் கடையின் முன்பு எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தேன்.
அப்போது கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் வெளியே வந்து கடைக்கு உள்ளே போகும் சமயம் எனது ஸ்கூட்டரில் உள்ள கொடியை பார்த்து நீங்கள் திராவிடர் கழகமா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னவுடன் என்னை கடைக்கு உள்ளே அழைத்து அமரவைத்து எனது பெயர் அக்பர் – நான் முஸ்லிம் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
உங்களைப் போன்றவர்களை சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அய்யா என்று சொல்லி, நான் விருத்தாசலம் ஊரைச் சேர்ந்தவன். அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு – தொழில் நிமித்தமாக இங்கே உள்ளேன் என்று சொல்லி விட்டு எனது பெண் பிள்ளைகளிடம் தந்தை பெரியாரின் தத்துவங்கள் நமக்கு வழிகாட்டி மட்டும் அல்ல, அது நமக்கு ஒரு வகை சொத்தும் கூட – நமது மதம் ஒழுக்கத்தை போதித்தால் கூட படிக்க சொல்ல வில்லை. தந்தை பெரியார் தான் எல்லோரும் படிக்க வேண்டும்.அதுவும் பெண் பிள்ளைகள் அதிகம் படிக்க வேண்டும் என்று சொன்னார் – அதன்படி மதக் கட்டுபாடுகளை உதறி தள்ளிவிட்டு படித்து இன்றைக்கு எனது பிள்ளைகள் உயர்ந்த நிலையில் உள்ளனர். அதற்கு தந்தை பெரியாரின் தத்துவங்களும் அதைத் தாங்கி வரும் புத்தகங்களும்தான் காரணம் என்று கூறி மகிழ்ந்தார்.
பிறகு எனது ஊர் ஓமலூருக்கு வந்து வண்டியின் பின்புறம் உள்ள கொடியில் உள்ள சிவப்பு நிறம் மங்கி இருந்ததால் அதை எடுத்து விட்டு புதிய கொடி (ஸ்டிக்கர்) போட்டுக் கொண்டு எனது இல்லம் வந்து சேர்ந்தேன்.
தந்தை பெரியாரின் தத்துவங்கள் அதனை ஆதரிக்கும் கட்சிகளால் நிலை நிறுத்தப்படுவ தில்லை.
ஆசிரியர் அய்யா அவர்கள் கூறுவது மாதிரி கருப்பு சட்டை போடாமல் நன்றியுடன் தந்தை பெரியாரின் தத்துவங்களை மனதில் நிலைநிறுத்தி வலம் வந்து கொண்டிருக்கும் மக்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள்.
தந்தை பெரியார் வாழ்க!
தந்தை பெரியார் தத்துவங் களால் எப்போதும் வாழ்கிறார்.
– ஓமலூர் பெ.சவுந்திரராசன்
பொதுக்குழு உறுப்பினர்
திராவிடர் கழகம்