தூத்துக்குடி,நவ.15 தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற் கொண்டார். மேலும் திருமண நிகழ் வில் “குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் சூட்டுங்கள்” என பெற்றோருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘‘தூத் துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து கார் மூலம் நேற்றைய முன்தினம் (13.11.2024) இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார்.அவரை வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்க்கள் ஜீ.வி. மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து நேற்று (நவ.14) காலை தூத்துக்குடி லட்சுமி மகாலில் வடக்கு மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் மகாலில் ராஜபாளையம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்ல திருமணத்தை உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: சுயமரியாதைத் திருமணங்கள் திராவிட இயக்கங்கள் உருவான தால் தான் நடந்து வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் இல்லை என்றால் இது போன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடத்த வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும். தமிழில் திருமணம் தமிழில் அர்ச்சனை என்பதெல்லாம் திராவிட இயக்கம் தோன்றியதால் தான் வந்தது.கோயில் கருவறையில் கூட இன்றைக்கு தமிழ் ஓசை கேட்கிறது என்றால் அதற்கு திமுக தான் காரணமாகும். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திமுக ஆட்சியில் தான் வந்தது.பிற்போக்குத்தனத்தை வேரோடு பிடுங்கி எறிந்து பெண்களுக்கு சம உரிமை கிடைக்க செய்ததும் திராவிட இயக்கம் தான். இதனால் தான் இன்றைக்கு இந்த விழாவில் கூட பெரும்பாலும் பெண்கள் அதிகமாக வந்துள்ளனர். இருக்கையில் அமர்ந்துள்ளதும் பெண்கள் தான். ஆண்கள் ஓரத்தில் நிற்கும் அளவுக்கு பெண்களுக்கு ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் கலைஞர் ஆட்சியாக இருந்தாலும் சரி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியாக இருந்தாலும் சரி பெண்களுக்கு தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு வேண்டுகோள் உங்கள் குழந்தைக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள் என்றார்.