சென்னை, நவ. 15- மருத்துமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை உயரதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் பணியிடப் பாதுகாப்பு தொடர்பாக காணொலி முறையில் கலந்தாலோசித்தனர். அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை தற்போது அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு தணிக்கை நடத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் முறையாக செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
போதிய மின் விளக்கு வசதிகள் இருத்தல் அவசியம். மருத்துவமனை புறக் காவல் நிலையங்களில் தேவையான எண்ணிக்கையில் காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அனைத்து மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் அவசர உதவி தேவைப்படும் போது காவல் உதவி செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக செய்தி அனுப்பலாம். மருத்துவமனை பாதுகாப்பு குழு, வன்முறை தடுப்பு குழுக்களை அமைக்கலாம் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை:
முன்னதாக, தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், துறை செயலாளர் சுப்ரியா சாஹு, கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், சென்னை கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு) கண்ணன், கூடுதல் காவல் துறை தலைவர் ஸ்சிறீநாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்