அறிஞர் அண்ணாவின் கருத்துரைகளை – பொன் மொழிகளை – உவமைகளையெல்லாம் மேற்கோள் காட்டிப் பேசாதவர்களே இன்று இல்லை. ஆனால் இவர்கள் காட்டும் அண்ணாவின் ஓவியம் பூரணமானது அல்ல என்பதை நாம் வேதனையுடன் ஒப்புக்கொள்ளவேண்டும். அண்ணா எத்தனை பெரிய தீவிர பகுத்தறிவாளராக இருந்தார் என்பதை நினைவுறுத்தவே, அவர் தீட்டிய பகுத்தறிவு ஓவியங்களை இங்கே அளிக்கிறோம்.
சுயமரியாதைப் பணிகளுக்கு வெற்றி
சுயமரியாதை இயக்கம் கடந்த இருபது ஆண்டுகளாக இப்பணியை பலவித இடையூறு களுக்கிடையே செய்துவந்திருக்கிறது. ‘மனு’வை மாற்ற உங்களால் முடியுமா என்று வைதீகம் சீறிற்று – முன்னோர் முறைகளைக் குறை கூற நாம் யார் என்று நவின்றனர் சங்கராச்சாரிகள். தர்ம சாஸ்திரங்களை நிந்திக்காதீர்கள் என அதர்ம நூல்களின் ஆதாரங்களுடன் போருக்குப் புறப்பட்டனர் பலர். இன்று, நிலை, தலைகீழ் மாறி இருக்கிறது. நாம் எதனைத் தகர்த்தெறிந்தால் மக்கள் மக்க ளாக வாழமுடியும் என்று கூறினோமோ அதே பேச்சு, கொஞ்சம்கூட மாற்றமுறாமல், மற்றவர்களால் இப்போது பேசப்படுகிறது. நமது பேச்சுக்கு இருட்டடித்து மறைத்து வந்தவர்கள் இன்று அதே பேச்சு வேறு இடத்திலிருந்து கிளம்பும் காரணத்தால் அலங்காரத் தலைப்புகள் கொடுத்து, முக்கியமான இடத்தில் பிரசுரிக்கின்றனர்.
1-4-1948 ‘ திராவிடநாடு’
மே தின விழாவும் சுயமரியாதைக் கட்சியும்
வைகாசியில் கருடசேவை, ஆனியில் திருமஞ் சனம், ஆடிப்பூர உற்சவம், ஆவணி அவிட்டம், புரட்டாசி சனிக்கிழமை உற்சவம், அய்ப்பசியில் தீபாவளி, கார்த்தி கையில் தீப விழா, மார்கழியில் திருவாதிரை, தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரையில் பவுர்ணமி இப்படி மாதந் தோறும் ஒவ்வொரு திருவிழா நடத்தி, தலை முறை தலைமுறையாக நடத்திப் பழக்கப் பட்ட மக்களிடையே மேதின விழா கொண்டா முற்பட்டிருக்கிறோம்.. முதன் முதலில் தமிழ் நாட்டில் மே தினம் கொண்டாடிய கட்சி சுயமரியாதைக் கட்சி தான் .
– பொன்மலையில் 1948 மே தின விழா உரை
கோயிலிலே கூத்தியுடன் குலாவும் கடவுள்
முலாமில்லாத மதத்தைப் பெற்று. இன்ப வாழ்வு வாழ்ந்துவந்த தமிழரிடம் கோபிகைகளுடன் கூடும் கடவுளையும், கோயிலிலே கூத்தியுடன் குலாவும் கடவு ளையும், தேவி மகன் ஒருவன் – பிற காமக் கருவிகள்பால் தோன்றியவர் வேறு என்ற அளவுக்கு வந்த கற்பனைக் கடவுள்களையும் காட்டி மயக்கிய துடன் தமிழரின் தனிக் கொள்கையை மாய்த்தது. ஜாதி என்ற சொல்லை அறியாத தமிழரிடை, நால் வகை ஜாதியைப் புகுத்திற்று. பேதமற்ற வாழ்க்கை நடத்திய தமிழரிடையே விபரீத வர்ணாசிர மதத் தைப் புகுத்திற்று. இவைகளால் வேதனைப்பட்ட நேரத்திலே விதவிதமான கற்பனைகளையும் காட்டி தமிழனின் உண்மை உணர்ச்சியை மாய்த்தது. வீரத் தமிழனை வீணனாக்கிவிட்டது வெளி யிடத்துக் கலாச்சாரம்.
13-1-1948 ‘திராவிடநாடு’
புராணக் கதைகளின் அபத்தக் களஞ்சியம்
பாற் கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் உந்தியினின்றும் கொடியொன்று கிளம்பி, அதன் நுனியிலே தாமரை மலர்ந்து காட்சிதர, அந்த மலரணைமீது நான்முகன் அமர்ந்திருக்க அவன் நாவிலே சரஸ்வதி வீற்றிருக்க, அவள் கையிலே வீணை இருந்து ஒலிக்க, அதுகேட்டு இன்புற்று நாரதர் கீதம் பாட, அதற்கேற்ப நந்தி மிருதங்கம் கொட்ட, முக்கண்ணன் நடனம் ஆட, அய்யன் ஆடுவது கண்டு அகிலமெல்லாம் ஆனந்தக் கூத்தாட, அதன் சூட்சமத்தை விளக்கி சுத்தானந்த பாரதியின் பேனா ஓட, அதனை மதுரகீதமாக்கி வசந்த கோகிலம் பாட.. இப்படி இன்றும், பிரபஞ்ச உற்பத்திக்கு என்றோ ஏற்பட்ட பழைய கதையைத்தான் பயன்படுத்துகின் றனர் .
21-12-1947 ‘திராவிடநாடு’
பிள்ளைவரம் கேட்கவா விஞ்ஞான சாதனம்?
நாமோ இன்னமும், பூமாதேவி-அண்ட சராசரங் களையும் ஆதிசேஷன் தாங்குவது இரண்யாட்சன் பூலோகத்தைப் பாயாகச் சுருட்டிக்கொண்டுபோய் ஒழித்துவிட்டது போன்ற கதைகளை, புண்ணிய கதைகள் என்று நம்புவதும், இந்த நம்பிக்கைக்கு ஏற்றபடியான பூஜைகள் செய்வதும் திரு விழாக்கள் நடத்துவதுமாகக் காலம் தள்ளுகிறோம். மேனாட்டினரின் ஆராய்ச்சியின் பலன்களை அனுபவிக்கிறோமே. அப்போ தாவது அறிவுக்கு வேலை தருகிறோமா – நன்றியறிதலையாவது காட்டுகிறோமா? அந்த ஆராய்ச்சியாளர்கள் அளித்த அருமையான சாதனங்களை உபயோகித்துக் கொண்டே, அந்த ஆராய்ச்சியாளர்களெல் லாம் ஆத்மார்த்தம் அறியாதவர்கள் என்று நையாண்டியும் செய்கிறோம்! நியாயமா? நாம் கண்டுபிடிக்காத ரயிலில் பிரயாணம் செய்து, எங்கே போகிறோம்? பிள்ளை வரம் கேட்க இராமேஸ்வரத்திற்கோ, திருப்பதிக்கோ,” பெரியபாளையத்தாளின் அருளைத் தேடியோ!
21-12-1947 ‘திராவிட நாடு’
தேர்த் திருவிழா ஏன் கொண்டாடக் கூடாது?
கேள்வி: தேர்த் திருவிழா, பண்டிகை இவை ஏன் கொண்டாடக்கூடாது?
பதில்: ஏன் கொண்டாட வேண்டும்? பக்திக்கா கவா? ஆம் என்றால் அதற்கு வழிபாடும் தியானமும் போதுமே! ஒழுக்கத்துக்காகவா? ஒழுக்கம் இவைகளால் கெடுகிறதே ஒழிய வளர்வதில்லையே! தேர்த் திருவிழா, பண்டிகை ஆகியவைகள் காட்டு மிராண்டிக் காலத்திலே மக்களின் மனதிலே புத்தறிவு தோன்றாத முன்பு இருந்து வந்த நம்பிக்கைகளின் பேரால் உள்ளவை. இந்த நம்பிக்கைகள் இன்று கூடாது என்று அறிஞர்கள் ஒதுக்கியும் விட்டனர். இந்நிலையில் மீண்டும் மீண்டும் அந்த தேர் திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றைக் கொண்டாடுவதால், பழைய நம்பிக்கைகளைத் தலை தூக்க விடுகிறோம், இது கூடாது என்பதற்காகவே அவை கூடாது என்கிறோம்.
-18-1-1947 ‘திராவிட நாடு’
சீரங்கநாதர் யார் பக்கம் பேசுவார்?
பார்ப்பனருக்கு தேவதா பூஜைக்குப் பிறகு வெண் பொங்கலும் சர்க்கரை அக்கார வடிசிலும் ததியோ தனமும் புளியோதரையும் தந்து வருவதை நிறுத்திவிட்டு அதைவிட சாதாரணமான பிரசாதத்தை பிழைக்க வழியற்றவர்களுக்குத் தந்தால் நல்லது தானே. சீரங்கம் கோயிலில் திருச்சி ஜில்லாவிலுள்ள பிச்சைக்காரர்களில் உழைத்துப் பிழைக்க முடியாத நிலைமையில் உள்ள அய்யாயிரம் பிச்சைக் காரர்களுக்கு சோறிட்டுக் காப்பாற்றினால் நல்ல தாகாதா? ‘திருப்பாவை’ பாடிய பிறகு துளசியும், தீர்த்தமும் பிழைக்க வசதியுள்ள பக்தர்கள் பெறட்டும். பிரசாதம், பிழைக்க வழியற்ற பேர்வழிகளுக்குத் தரப்படட்டும். ஏன், என் யோசனையைக் கேட்டால் பள்ளிகொண்டிருக்கும் ரங்கநாதர் திடுக்கிட்டு எழுந்து “இது கூடாது” என்று கூறுவார் என்றா கருதுகிறீர்கள்? இன்று அந்தப் பிரசாதத்தை நம்பி வாழும் பார்ப் பனர் பதைப்பர். ரங்கநாதர் என் பக்கந்தான் பேசுவார், பேசும் வழக்கத்தை அவர் இப்போது கைக் கொள்வதாக இருந்தால்!!
2-11-1947 ‘திராவிட நாடு’
திருவண்ணாமலை தீபமும் காலரா மிரட்டலும்
திருமாலுக்கும் நான்முகனுக்கும் சிவன் வாக்களித்தபடி திருவண்ணாமலை உச்சி யில் ஒரு தீப ஒளி தானாகத் தோன்றுவது மில்லை; அவர் திருவாய் மலர்ந்தருளியபடி அந்தத் தீப ஒளியைக் காண்பவர்கள் நோயும் பசியுமில்லாத வாழ்க்கையை நடத்தவுமில்லையே. எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தாண்டவமாடுகிறதே. இவ்வாண்டுத் தீப ஒளியைப் பார்க்க வருகின்றவர்கள் தங்கள் தங்கள் உணவுக் குப் போதிய அரிசியை அவசியம் கொண்டு வரவேண்டும் என்று சர்க்கார் உத்தரவிட்டிருக்கிறதே.
அதுமட்டுமல்ல, திருவண்ணாமலையில் காலரா நோய் இருப்பதால் அங்கு மக்கள் கூடக்கூடாது என்றும் சர்க்கார் கட்டளை பிறப்பித்திருக்கிறதே. தீப ஒளியைப் பார்த் தால் பசியும் நோயும் பறக்கும் என்று பரமன் திருவாய் மலர்ந்தருளினார் அன்று! இன்று திருவண்ணாமலைத் தீபத்துக்குப் போனால் பசியும் நோயும் வாட்டும்; எனவே அங்கு செல்லாதீர்கள் என்று சர்க்கார் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறதே! இவ்விரண்டு திருவாய் மலர்ந்தருளுதல்களையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும் எவராவது, இப்படி யிருக்க ஏன் அப்படிப் புராணம் நாட்டில் இருக்க வேண்டும் என்று கேட்டால்,நல்ல பாம்பாகி விடுகிறது இந்த நம்பனடியார்கட்கு.
12-12-1948 ‘திராவிட நாடு’
புராணப் பிரியர்களும் சிரிக்கிறார்கள்
“நமது பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போன புண்ய கதைகளைச் சொன்னால் இந்தக் காலத்துப் “பசங்கள்” கேலி பேசறா; நம்ப மாட்டேன் என்கிறா-நையாண்டி செய்யறா – அனுமாரின் வாலை நீர் அளந்து பார்த்தீரோ; அரம்பை ஆடுவது கண்டீரோ; இந்திரன் கண்களை எண்ணிப் பார்த்தீரோ என்றெல்லாம் கேள்விகளைப் பூட்டிப் பேசறா -நாம் என்ன இருக்கு, செய்ய?
ஒவ்வொன்றுக்கும் காரணம் கேட்கிறா, அர்த்தம் கேட்கிறா, ஆதாரத்தைக் காட் டுன்னு மல்லுக்கு நிற்கிறா” என்றுதான் வைதீகர்கள் – புராணப் பிரியர்கள் தங்கள் முகாமிலேகூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது விசாரப்படுகிறார்கள்: பதைக்கிறார்கள் முதலில்-பிறகு திகைக் கிறார்கள் – கடைசியில் அவர்களே சிரிக் கிறார்கள். ஆமாம்! இந்தப் பயல்கள் சொல்வது போல புராணக் கதைகள் நம்ப முடியாதவைகளாகத்தான் இருந்து தொலைக்கின் றன-நாம் என்ன செய்வது- என்று சிந்தித்துவிட்டுச் சிரிக்கிறார்கள்.
5-12-1948 ‘திராவிட நாடு’
ஏன் – எதனால் – யாரால் சூத்திரராக்கப்பட்டோம்?
தமிழ் மக்களில் உயர்ந்தோர் எனக் கருதும் தமிழ் மக்கள், ஆரியர் வகுத்த ஜாதி முறை நான்கினுள் கீழ்ப்பட்ட ஜாதியாகிய சூத்திர ஜாதியுள், சற்சூத்திரர்களாகவாவது தங்களை மதிக்குமாறு செய்துகொள்ள விரும்புகின் றனரேயன்றி, நாம் ஏன் – எதனால்-யாரால் சூத்திரராக்கப்பட்டோம் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. இங்ஙனம் எண்ணிப் பாராதது மட்டுமல்ல; தமிழனுடைய மொழி, கலை, இலக்கியம், சமூக வாழ்வு என்ற அனைத்தும் ஆரியர் களின் உதவியால்தான் நிலை பெற்று நிற்கின்றன என்று நன்றாய்க் கற்பிக்கப் பட்டும் விட்டனர்.
29-8-1948 ‘திராவிட நாடு’
நெருப்பில் தள்ளப்பட்ட பறையன்
பார்ப்பானாக ஆகிவிட முடியுமா?
மதப் பிரசாரம் செய்கின் றவர்கள், தங்களுடைய மதியையும் சிறிதளவாவது கூர்மையாக்கிக் கொண்டாலன்றி விழிப்படைந்த இன்றைய மக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை கூற முடியாது போகுமே! சொல்வதையெல்லாம் அப் படியே கைகட்டி-வாய் பொத்தி நின்று கேட்கும் காலமல்லவே இது.
சைவ சமய அன்பர்களான நந்தனார், தாயுமானவர், பட்டினத்தார், அருணகிரி, இராமலிங்க அடிகளார், திருநாவுக்கரசர் முதலான தமிழ்ப் பெரியவர்களின் முடிவு எப்படி ஏற்பட்டது என்று கேட்பார்களே! விளக்கம் கூறவேண்டுமே! நெருப்பில் தள்ளப்பட்ட பறையன், பார்ப்பானாக மாறினான் என்ற தெனாலிராமன் கதை களை இன்றைய விழிப்படைந்த உலகம் ஒப்புக்கொள்ளாதே! வரலாறுகள் கூறும் உண்மை என்ன? ஆராய்ச்சியாளர்களின் முடிவு என்ன என்று கேட்பார்களே! மதப் பிரசாரகர்களின் மக்கிப் போன புராணக் கதைகளால் மக்களை மயங்க வைக்க முடியாதே.
11-7-1948 திராவிட நாடு
சைவமதம் காட்டும் ஒழுக்கம் இதுதானா?
ஒழுக்கம் இல்லாதவர்களாய் இருந் தாலும் அவர்கள் நீறணிந்து பட்டால் அவர்களை இகழ்ந்து பேசக் கூடாது என்றும், மீறி இகழ்ந்தால் நரகம் கிடைக்கும் என்றும் ஒரு (பெரிய) புராணம் பாடப்பட்டிருக்குமாயின் அத்தகைய ஒரு நூலை உயிரைக் கொடுத்தாயினும் மானத் தைக் காக்கும் தமிழ் மக்களுக்கு உரிமை யாக்கிப் பேசுவது போன்ற பேதைமை வேறொன்றிருக்க முடியுமா என்பதனைப் புராண அன்பர்கள் எண்ணிப் பாராமல் வறிதே எம்மீது சீறி விழுவதால் பெறப்படும் பயன் யாதோ நாமறியோம்.
இனி, மானத்தையும் இழந்து, உடம்பை யும் அழுகி ஒழுகும் தொழு நோய்குள்ளாக்கி, வாழ்க்கையைப் பாழாக்கும் முறை தவறிய சிற்றின்ப நுகர்ச்சியில் ஈடுபடும் ஒருவனை அவன் நீறணிந்துள்ளான், எனவே அவன் பால் மாசில்லை ; அவன் மன்பதையின் வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியவன் என்ற முறையில் அவனுக்கு இரட்டித்த மதிப்புக் கொடுப்பதுதான் சைவ சமயத்தின் சிறந்த பண்பென்றால் அதனை அறிவுடைய எவரும் தங்கள் சமயமாகக் கொள்ளவே மாட்டார் என்பது ஒருதலை.
28-12-1947 இலவசம் சகஜானந்தர் சல்லடம் கட்டுகிறார்
பொது இடங்களிலும் பள்ளிக் கூடங்களிலும் மதங்களைக் கண்டித்து யாரும் பேசக்கூடாது என்று தடை விதிக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை, சகஜானந்தர் சட்ட சபையிலே கொண்டு வருவதாக இருக்கிறாராம். இந்த அபூர்வ கைங்கரியத்தை இவர் செய்ய முன் வந்தது கேட்டு வைகுந்தமும், கைலாயமும் இவரை வரவேற்க ஒன்றோடொன்று போட்டியிடும் என்று நம்புகிறோம். பூதேவர்கள், ஆஹா! புதிதாக ஒரு ரட்சகர் கிளம்பினார் என்று கூறிப் பூரிப்படையக் கூடும்.
மதத்தைக் கண்டிக்கக் கூடாதாம்! தடை உத்திரவாம்! மடாதிபதிகள் அல்ல – ஜீயர்கள் அல்ல- வேத சாஸ்திர விற்பன் னர்கள் அல்ல-சகஜானந்தர் சல்லடம் கட்டுகிறார்.
ஓய், சகஜானந்தரே! உமது இனத்தவரை – திராவிடப் பழங்குடி மக்களை மதத்தின் பெயர் கூறித்தான் இதுநாள்வரை கோயிலிலே நுழையக்கூடாது என்று தடுத்து வந்தனர். ஆதித் திராவிடரை ஏன் ஆலயத்துக்குள் விடக்கூடாது? அவர்கள் வந்தால் சாமியா தீட்டுப்பட்டு விடும் என்று முதன் முதலில் கேட்க ஆரம்பித்த வர்கள், அவ்விதமான அநாகரிக வழக்கத்தைக் கண்டித்தவர்கள், அந்த வழக்கத்தை வேத சம்மதமுள்ளது என்று வாதிட்ட வைதீகர்களின் மதப் பித்தத்தைச் சாடியது யாரோ, அவர்களின் நாவைத்தானே துண்டிக்கச் சொல்கிறீர்! தாராளமாகச் செய்யச் சொல்லும்!
8-8-1947 ‘திராவிட நாடு’ சமண, பவுத்த மதங்களை சைவம் அழித்தது ஏன்?
“யாதொரு தெய்வங் கொண்டீர், – அத்தெய்வமாகி ஆங்கே, மாதொரு பாகனார் தாம் வருவார்” என்று கூறியவர்களே சமண சமயத்தை ஒழித்துக்கட்ட முன் வந்திருப்பார்களா? சமண சமயமும் அதன் கடவுளும் “யாதொரு தெய்வம்” என்பதில் அடங்கவில்லையா? அடங்கவில்லை யென்றால், “யாதொரு தெய்வம்” என்ப தன் பொருள்தான் என்ன? சமண சமயத் தில் நின்று அம்சமயக் கடவுளை வழிபட்ட போதிலும் மாதொரு பாகனான சிவனே வந்து அருள் பாலிப்பான் என்பதில் சைவர் களுக்கு நம்பிக்கை இருந்தால் சமணம், பவுத்தம் முதலான சமயங்களை ஒழிப் பதில் முனைவானேன்? அதற்காக தனித் தனி அவதாரங்கள் எடுப்பானேன்?
1-6-1947 ‘திராவிட நாடு’
பார்ப்பனீயத்தை எதிர்த்த வேமன்னா
பார்ப்பனீயத்தை எதிர்த்து நடத்தப் பட்ட புரட்சி கலைத்துறையிலே அடிக்கடி நடைபெற்றிருக்கிறது. ஆந்திர நாட்டிலே ஆரியத்துக்கு அடிபணிய மறுத்து சிந்தனைச் சுதந்திரத்துக்கு பாடுபட்ட பெரியார் களில் வேமன்னா மிக முக்கியமானவர். அவர் மதத் தரகரின் மண்டைக் கர்வத்தையும் அவர்களின் மாயா வாதத்தைக் கேட்டு மதி மயங்கியவர்களின் ஏமாளித் தனத்தையும் கண்டித்தார்; ஜாதிமத பேதத்தைச் சாடினார். புரட்டு அவருக்கு எட்டி; புரோ கித போதனை, வேம்பு.
வேமன்னா வேதியக் கூட்டத்துக்குத் துதிபாடியிருந்தால் அவரைவிடச் சிறந்த விற்பன்னர் இல்லை என்றும் அவர் வியாசரின் மறுபிறவி என்றும் ஆரியர் ஏடெழுதி விட்டிருப்பர். அவர் ஆரியத்தின் உச்சி குலுங்க அடித்தவராதலால் அவரைப் பற்றி ‘இருட்டடிப்பு’ ஏற்பட்டு விட்டது.
8-4-1945 ‘திராவிட நாடு’
கல்யாண மந்திரத்தின் பொருள் என்ன?
அக்கினி சாட்சியாக ஆரியப் புரோகிதனைக் கொண்டு திருமணம் செய்கிறோம். அதுவே முறை என்று பழைமை விரும்பிகள் கூறுகின்றனர். வைதீக முறைப்படி நடக்கும் கல்யாணத்திலே ஆரியப் புரோகிதர் கூறும் மந்திரம் என்ன? அதன் பொருள் என்ன? இதோ, வங்கப் பல்கலைக் கழக சரிதப் பேராசிரியர் தோழர் நிருபேந்திரநாத தத்தர் கூறுகிறார் – கேளுங்கள், களியுங்கள். ஆரியரே! வெட்கித் தலை குனியுங்கள், ஆரிய அடிவருடிகளே! ஆத்திரத்தை அடக்கி அறிவைப் பரப்புங்கள் தன்மானத் தோழர்களே!
என்ன கூறுகிறார், கல்யாண மந்திரமாக? மணப்பெண்ணை நோக்கிக் கூறுகிறார் புரோகிதர்-மாப்பிள்ளை சார்பில்! “முதலிலே சோமதேவனிடம் நீ இருந்தாய். பிறகு கந்தர்வனிடம் சேர்ந்தாய். அக்கினி தேவன் உன் மூன்றாம் கணவன். நான் உனக்கு நான்காம் நாயகன்” “கலவி இச்சை ஏற்படும் காலம் வரையிலே பெண்ணைச் சோமன் வைத்துக்கொண்டி ருக்கிறான். அந்த ஆசை பிறந்ததும், தனபாரங்கள் தோன்றியதும் கந்தர்வன் அவளைச் சேர்கிறான். பருவம் அடைந்த பிறகு அக்கினி அவளை அனுபவிக்கிறான்.’
இதுதான் கல்யாண மந்திரம். ருக் வேதம் ஆதாரம்; சு. ம. சொன்னதல்ல; வங்கப் பேராசிரியர் எழுதியிருப்பது! அய்யர் இல்லாமல் கல்யாணம் செய்வதா என்று அங்கலாய்த்துக் கொள்கிறாயே அன்பனே! அய்யர் சொல்வதைக் கேட்டாயா? மணப் பெண் நான்காம் புருஷனைக் கல்யாணம் செய்து கொள்கிறாளாம்! பெருமைப்படு, பேதையாக இருப்பின்! இன்றேல் ஆரியத்தைக் கைவிடு, சுயமரியாதை இருப்பின்.
8-4-1945 ‘திராவிட நாடு’