திராவிட மாடல் அரசும் சாமியார் மாடல் அரசும்!

Viduthalai
2 Min Read

‘‘பட்டேங்கே தொ கட்டேங்கே’’ (பிரிந்து நின்றால் வெட்டப்படுவோம்) உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் கூறிய இதே வார்த்தையை பதாகையாக உ.பி.யில் வைக்கப்பட்டுள்ளது. இப்படியொரு முழக்கம் எவ்வளவு ஆபத்தானது.
அதாவது ஹிந்துக்களே ஒன்று கூடி நில்லுங்கள் என்று அறைகூவல் விடுகிறாராம்.
உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பீகாரின் மேற்கு மற்றும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இன்றும் கோவில்களில் சூத்திரர்கள் நுழையக் கூடாது என்ற பதாகை வைக்கப்பட்டு உள்ளது.
2017ஆம் ஆண்டு உத்தராகண்ட் அமைச்சர் ஒருவர் கோவிலுக்குள் செல்ல முயன்ற போது அவரை நுழைய அனுமதிக்கவில்லை.
அவரது ஓட்டுநர் கோவில் உள்ளே சென்று பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.
இதை அமைச்சரவைக் கூட்டத்திலேயே சொல்லி அழுதார்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த அமைச்சர்.
உத்தராகண்டில் மட்டும் 47 பெரிய கோவில்களில் உள்ளூர் தலித்துகள் நுழைய அனுமதி இல்லை. அதே நேரத்தில் சுற்றுலா வருபவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒருவேளை அவர்கள் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று காட்டிக் கொண்டால் அவர்களையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று அந்த ஆய்வுச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
கிரிராஜ் சிங் 5 நாள் ஹிந்து விழிப்புணர்வு யாத்ரா என்ற பெயரில் பீகாரின் 5 மாவட்டங்களில் நடைப்பயணம் மேற்கொண்டார். அங்கும் அவர் ‘‘ஹிந்துக்களே பிரிந்துவிடாதீர்கள் ஒரு முஸ்லீம் உங்களை அடித்தால் 100 ஹிந்துக்கள் ஒன்றுசேர்ந்து அடிக்கவேண்டும்’’ என்று யாத்திரையின் இறுதி நாளில் அனைவருக்கும் திரிசூலம் வழங்கினார்.
ஆனால், பீகாரின் பல மாவட்டங்களில் இன்றும் தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் சில இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை கோவில்களில் அனுமதிப்பதில்லை. பொதுக்கிணற்றிலோ அல்லது, உயர்ஜாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் குழாயிலோ தண்ணீர் பிடிக்கவோ அருந்தவோ அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் அடைந்த நாட்டில் தான் நாம் வாழ்கிறோமா என்பது பொருள் மிகுந்த கேள்வியாகும்.
‘‘சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? நரக நாடா?’’

– தந்தை பெரியார்
(‘விடுதலை’ 15.8.1957)

இந்தக் கேள்விக்கு இதுவரை எந்த ‘மேதாவி’யாவது விடையளித்தது உண்டா?
தமிழ்நாட்டில் யார் பிராமணன், யார் சூத்திரன், யார் பஞ்சமர் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு – பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டம் போடாத அளவுக்கு ஒரு புரட்சி நடந்திருப்பதற்குக் காரணம் தந்தை பெரியாரும் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமுமே.
வட மாநிலங்களுக்குப் பல பெரியார்கள் தேவை என்று பச்சைத் தமிழர் காமராசர் கூறியதையும் நினைவூட்டுகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *