சென்னை, நவ.14 சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு நேற்று (13.11.2024) வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்த னர். இம்மருத்துவமனையின் புற்று நோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி. மருத்துவமனைக்கு வந்தவர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அமைச்சர் ஆய்வு: இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நிகழ்வில் தொடர்புடைய நபரை பிடித்தனர். பின்னர் நிகழ்வு குறித்து கிண்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி காவலர்கள் பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்வு நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த தாக்குதல் நிகழ்வு குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதா வது: மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமை யாகும். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர் காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு தெரிவித் துள்ளார்.