மருத்துவ துறையில் காலி பணியிடங்களை நிரப்ப சட்டப் போராட்டம்

Viduthalai
2 Min Read

சென்னை, நவ.12- “அரசு மருத்துவ மனைகளில், பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மை தான்; அவற்றை நிரப்ப சட்ட போராட்டங்கள் நடத்தப் படுகின்றன,” என, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ஓமந்துாரார் அரசு பல் நோக்கு மருத்துவமனையில், 2025-2026ஆம் ஆண்டுக்கான மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானிய கோரிக்கை தொடர் பான ஆலோசனை கூட்டம் நேற்று (11.11.2024) நடைபெற்றது. பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சட்டமன்றத்தில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை சார்ந்த திட்டங்கள், அதில் எஞ்சியுள்ள திட்டங்கள் குறித்தும், வரும் நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப் பட்டது.
மருத்துவ துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் இருப்பது போன்ற மாய தோற்றத்தை, எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, நிரந்தர மற்றும் தற்காலிக பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா காலத்தில் பணியாற்றிய 1,271 ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரம் செய்வதற்கான ஆணைகள், வரும், 14, 15ஆம் தேதிகளில் வழங்கப்படும்.
மேலும், கரோனா காலத்தில் பணியாற்றிய, 954 செவிலியர்கள், ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றவும் ஆணை வழங்கப்படும். இது முடிந்ததும், 300 செவிலியர் பணியிடங்களை, மருத்துவ தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன் வாயிலாக, செவிலியர்களுக்கான காலி பணியிடங்கள், 100 சதவீதம் இல்லாத நிலை உருவாக்கப்படும்.
தற்போது, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,600க்கும் மேற்பட்ட பணியிடங்கள், பொது சுகாதாரத் துறையில் 1,353 பணியிடங்கள்; மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், 552 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், முதுநிலை படித்து முடித்த மருத்துவர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவர். மருத்துவ துறையில் காலியிடம் இருந்தாலும், அவற்றை நிரப்ப பல்வேறு சட்ட போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட நியமனம் தொடர்பாக, பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கு முடிவுக்கு வந்த பின்தான், பணி நியமனம் மேற்கொள்ள முடிகிறது.
தற்போது, 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு, வரும் ஜன., 27ஆம் தேதி ‘இணையவழி’ தேர்வு நடத்தப்படும். சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புமாறு, மாநக ராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
– இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *