விந்தையான அரிசி ரோபோ!

viduthalai
1 Min Read

நமக்கு நோய் ஏற்படும்போது மருந்துகளை வாய் வழியாக விழுங்குகிறோம். சில மருந்துகள் ஜீரண மண்டலத்தைக் கடந்து உடலுக்குள்ளே செல்லும்போது வலுவிழந்து விடும். அதனால் தான் சில மருந்துகளை ஊசி மூலமாகச் செலுத்துகிறோம். ஆனால், இதிலும் சில பிரச்சினைகள் உள்ளன.

நம் உடலின் உள் பாகங்களுக்கு ஊசி மூலமாக மருந்துகளை அனுப்பும்போது அவை தங்களுடைய ஆற்றலை இழக்கக் கூடும். ஆகவே, இவற்றுக்குப் பதிலாகச் சிறிய அளவிலான ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் நீண்ட கால மாக நடந்து வருகின்றன. அவற்றில் சில வெற்றியும் பெற்றுள்ளன.

சிங்கப்பூரைச் சேர்ந்த என்.டி.யு., பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதுவித ரோபோவை உருவாக்கி உள்ளனர். இது, நாம் உண்ணும் அரிசியின் அளவு மட்டுமே இருக்கும். இதில் மருந்தை வைத்து உடலுக்குள்ளே அனுப்பிவிடலாம். பிறகு வெளியில் உள்ள காந்தப்புலத்தைக் கொண்டு அதை நகர வைக்கலாம்.

இவ்வாறு நகர்த்திக் கொண்டு சென்று எந்த உடல் பாகத்தில் மருந்து தேவையோ, அந்த இடத்திற்கே ரோபோவைக் கொண்டு போகலாம். அங்கே சென்ற பிறகு எந்தக் குறிப்பிட்ட இடைவேளையில் மருந்தைச் செலுத்த வேண்டுமோ அப்படி மருந்தைச் செலுத்த வைக்கலாம்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த ரோபோவால் நம் செல்களுக்கும், தசைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் நம் உடலில் புற்றுக் கட்டிகள் இருக்கக்கூடிய சிக்கலான இடங்களுக்கும் சென்று மருந்தைச் சேர்க்கும் விதமான ரோபோக்களை உருவாக்குவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு உருவாக்குவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *