ஊழல் செய்பவர்கள் எல்லாம் பார்ப்பனரல்லாதவர்களா?

viduthalai
7 Min Read

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மார்கெட் இழந்த நடிகை ஒருவர் அரசுப்பதவிகளில் முறைகேடு செய்பவர்கள் அனைவருமே பார்ப்பனர்ல்லாதவர்கள் என்று நீட்டி முழங்கி உள்ளார்.
ஆனால் உடனடியாக நெறியாளர் இடையிட்டு அவர் கூறியது அவதூறு என்றும், மேலும் பேச அனுமதிக்கமாட்டேன் என்றும் கூறிவிட்டார்.

ஞாயிறு மலர்

கருநாடகத்தில் பா.ஜ.க. சார்பில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியின்போது நடந்த ஒரு கண்க்கெடுப்பில் அரசுத்துறைகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் அதிகம் உயரதிகாரிகளால் பழிவாங்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு அடுத்து இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பழிவாங்கப்படுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை கவனத்தில் கொண்டு கருநாடக உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கை எடுத்து அரசுக்கு விளக்கம் அளிக்குமாறு கண்டிப்போடு அறிககை அனுப்பியது (HC notice to Karnataka Government 29.06.2022)
இந்த ஆய்வறிக்கையில் தங்களது கருத்தை தெரிவித்த அனைத்து பார்ப்பனரல்லாத அதிகாரிகளும் ஒரே குரலில் கூறியது, “எங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தினால் எங்கள் பணிக்கு – பதவிக்கு ஆபத்து ஏற்படும். எனவே, எங்கள் அடையாளத்தை வெளியிடவேண்டாம்” என்று கூறியதோடு பெருவாரியான பார்ப்பனர் அல்லாத இருபால் அதிகாரிகள் “எங்கள் கஷ்டம் எங்களோடு போகட்டும்” என்று கூறிவிட்டு கருத்து தெரிவிக்காமல் விலகிவிட்டனர்.
பார்ப்பனரல்லாத அதிகாரிகள் மீது அதிகம் பாயும் குற்றச்சாட்டு ஊழல் செய்பவர்கள் என்பது மட்டும் தான். குறிப்பாக தங்களுக்கு மேலே பணிபுரியும் பார்ப்பனரல்லாத அதிகாரிகளை பழிவாங்கும் போக்கு நிகழ்வதாக கூறியுள்ளனர்.

குறிப்பாக லஞ்சப் பணத்தை வாங்க – கொடுக்க அனுப்புவது, பேராசை காட்டியோ அல்லது மிரட்டியோ பணம் வாங்க வைப்பது உள்ளிட்ட பல மோசடிகள் கருநாடகத்தில் நடைபெற்றதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக சில பார்ப்பனரல்லாத அதிகாரிகள் தற்கொலை செய்துள்ளனர்.

”ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்” என்பது தான் மேலே கூறிய கருநாடக மாநில பார்ப்பனர் அல்லாத அதிகாரிகள் மீதான கொடுமைக்கு சான்று. நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் இது மிகவும் மோசமாக உள்ளது.

வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பெருவாரியான அதிகாரிகள் அனைவருமே உயர் ஜாதியினர் ஆவர். ‘சாஸ்திரிபவன்’ அலுவலகத்தை ஒருமுறை வலம் வந்தாலே பெரும்பாலானோர் சுக்லாக்களாகவும், வர்மாக்களாகவும், மிஸ்ராக்களாகவும், திரிபாடி, திவாரிகள் மற்றும் வாயிர்க்கர்களாகவும் தான் இருப்பார்கள்.

ஊழல் திவாரி

மதுரையில் ஒரு திவாரி பிடிபட்டது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரின் புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இரவு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

ஞாயிறு மலர்

அந்த அறிக்கையின்படி, புகார் கொடுத்துள்ள அரசு மருத்துவருக்கு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வாட்ஸ் அப்-இல் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் அமலாக்கத்துறை அதிகாரி என்றும், மறுநாள் காலை விசாரணைக்காக மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருமாறும் கூறியுள்ளார்.

விசாரணைக்கு சென்ற அரசு மருத்துவர் மீது 2018–ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்த பிரதமர் அலுவலகத்தில் இருந்த உத்தரவு வந்துள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ 3 கோடி ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும் மருத்துவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

ஆனால், தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும், தான் சட்டத்திற்கு உட்பட்டே பணி செய்வதாக கூறியதனை அடுத்து, அப்போது ஹர்திக் என வாட்ஸ் அப்-இல் அறியப்பட்ட அங்கீத் திவாரி, தனது உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு, ரூ.51 லட்சம் வேண்டும் எனவும், அதனை நவம்பர் 1 ஆம் தேதி தயாராக வைத்திருக்குமாறு கூறியுள்ளார்.

பின், மீண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி இரவு, மருத்துவரை தொடர்புகொண்ட அங்கீத் திவாரி, பணம் தயாராக உள்ளதா எனக் கேட்டுள்ளார். பணம் தயார் என மருத்துவர் கூறியவுடன், மறுநாள் காலை அழைப்பதாக அங்கீத் திவாரி கூறியுள்ளார். மறுநாளான நவம்பர் 1 ஆம் தேதி காலை 7.17 மணிக்கு அழைத்த அங்கீத் திவாரி, நத்தம் வழியாக மதுரைக்கு வருமாறும் வழியில் பணத்தினை பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி, மருத்துவர் நத்தம் தாண்டி, நத்தத்திலிருந்து மதுரைக்கு நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் 7.46 மணிக்கு அழைத்த அங்கீத் திவாரி, மருத்துவரின் காரினை பார்த்துவிட்டதாகவும், காரினை நிறுத்துமாறும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், மருத்துவரின் காரின் முன்பக்கம் வந்து தனது காரினை நிறுத்திய அங்கீத் திவாரி, தான் கேட்ட லஞ்சப்பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா என மருத்துவரிடம் கேட்டுள்ளார்.

அப்போது, மருத்துவர் தான் 20 லட்சம் ரூபாய் மட்டும்தான் கொண்டு வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு அவர் தனது மேல் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும், மருத்துவர் மீதான புகாரினை அவர் முடித்து மேல் அதிகாரிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதியே அனுப்பிவிட்டதாகவும், அங்கு அந்த கோப்புகள் நிலுவையில் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

மீதிப் பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும் எனக்கூறிய அங்கீத் திவாரி, அப்போது மருத்துவரிடம் இருந்த ரூ 20 லட்சத்தை கையில் பெறாமல், காரின் டிக்கியை திறந்து, அங்கே வைக்கச் சொல்லியுள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவர் தமது வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவு செய்துள்ளார்.

மீதிப் பணத்தை கேட்டு தொடர்சியாக அழைப்பு வந்ததால், கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் செய்துள்ளார் மருத்துவர். அதன்அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், மறுநாள் காலை, அங்கீத் திவாரியை கையும் களவுமாகப் பிடித்தனர்.

சத்தீஸ்கரிலும் ஊழல் பார்ப்பனர்

அனில் தெத்துஜா, இணைச்செயலாளர் (2019-2020), அலோக் சுக்லா, முதன்மை செயலாளர் (2018 – 2020), அட்வகேட் ஜெனரல் சத்தீஷ் சந்திர வர்மா (2019 – 2020). இவர்கள் மூவரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகவும் உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் இம்மூவருமே உணவு விநியோகத்துறை, பணியாளர் நியமனம் மற்றும் பதிவுத் துறைகளில் லஞ்சம் கையூட்டு வாங்கிய வழக்கில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சத்தீஸ்கர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்த மூவருமே மாநிலத்தின் மிகவும் உயர் பதவிகளில் இருந்த பார்ப்பனர்கள். அக்காலத்தில் இருந்து இந்த செய்தி வெளியிடும் நேரம் வரை பார்ப்பன ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. நிறையவே ஊழல் செய்து அம்பலப்பட்டுக்கொண்டே உள்ளனர்

கோவில்கள் எல்லாம் பார்ப்பன அர்ச்சகர்கள் வசம் இருக்கையில் கோவில் நிலங்களையும், சாமி நகைகளையும் கணக்கற்ற வகையில் களவாடிய பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் ஒ.பி.ராமசாமி ரெட்டியார் சட்டப் பேரவையில் பேசியவை இன்னும் அவைக் குறிப்புகளில் உள்ளன.

சுதந்திர இந்தியாவின் ஒன்றிய அமைச்சரான
டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் முதல் ஊழல்

‘தி ஸ்டேட்ஸ்மன்’ என்ற டில்லி பத்திரிக்கை கண்டுபிடித்து எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:
செப்டம்பர்-4, 1957: ராம் சுபக் சிங் , காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டி.டி.கே.க்கு எதிராக கேள்வி எழுப்பினார். இதில் நிதி அமைச்சகத்துக்குச் சொந்தமான எல்.அய்.சி., அந்தக் காலங்களில் ரூ.1 கோடிக்கும் மேல் கொல்கத்தாவைச் சேர்ந்த துளசிதாஸ் முந்த்ரா & மன்மோகன்தாஸ் மிந்த்ரா ஸ்டாக் புரோக்கரர்களின் மூலம் போலி கம்பனிகளின் பெயரில், ஷேர்களை வாங்கி எல்அய்சியை நஷ்டமாக்கினர்.

இந்த ஷேர் டீலிங்கை, எல்அய்சி கமிட்டி பரிந்துரை செய்யவில்லை. நேரடியாக டி.டி.கே. பங்குகளை எல்அய்சி மூலம் வாங்கி “ஊழல்கமிசன்” பெற்றனர் எனக் குற்றச்சாட்டு.

இந்த மாபெரும் மோசடி குறித்து நேருவின் மருமகனும், லக்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான பெரோஸ் காந்தியால் நாடாளுமன்றத்தில் பெரிய விவாதமாக, உடனடியாக நேரு சாக்ளா என்ற பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒரே மாதத்தில் விசாரணை முடிந்து ஹரிதாஸ் முந்த்ரா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 22 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. நிதி அமைச்சர் கிருஷ்ணாமாச்சாரி 1958 ஆம் ஆண்டு பதவி விலகினார். பிறகு அவர் அரசியலிருந்து விலகி தொழில் அதிபராக ‘டிடிகே க்ருப்’ என தொடங்கினார் இது ஊழல் பணத்தில் தொடங்கப்பட்டது என்று அப்போது சில மாத இதழ்கள் எழுதியன.

சிறையில் பார்ப்பனர்

ஒருமுறை நடிகவேள் எம்.ஆர்.ராதா சிறையில் இருந்த போது சிறையில் கொலைக்குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்ற பார்ப்பனர் ஒருவரை சத்தமாக.. “என்ன அய்யரே சாப்பிட்டீங்களா, அய்யர்வாள் சவுக்கியமா?” என்று அய்யர் அய்யர் என்பதை அழுத்தி அடிக்கடி கூறுவார். இதற்கு அவரோடு இருந்த தோழர் ஒருவர், “நீங்கள் தான் ஜாதி ஒழிப்பு பேசுபவராச்சே? பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவர் ஆயிற்றே? பிறகு ஏன் அவரை அய்யர் என்று கூப்பிடுகிறீர்கள்?” என்றார்.

அதற்குப் பதில் கூறிய நடிகவேள் எம்.ஆர்.ராதா, “இன்றும் பலருக்கு பார்ப்பனர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்ற பொதுப்புத்தி உள்ளது. அப்படி நினைப்பது தவறு. அய்யரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் எல்லாம் செய்துவிட்டு சிறையில் தண்டனை பெறுவான் என்று அனைவருக்கும் தெரியவே நான் சிறையில் அய்யர் அய்யர்” என்று கூப்பிட்டேன் என்றார்.

மிகச் சமீபத்தில் பங்கு சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களில் சம்பந்தப்பட்டு சிறை சென்ற சித்ரா ராமகிருஷ்ணன் ஒரு பார்ப்பன பெண்ணாவார். நிறைய ஊழல் செய்தும், வங்கிகளை திவாலாக்கியும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா பார்ப்பனரே, அதானி, அம்பானி தொடங்கி மிகப் பெரிய தொழில் அதிபர்களின் ஆடிட்டர்களில் கணிசமானோர் பார்பனர்களே.

சுதந்திர இந்தியாவில் முதல் ஊழல் செய்து பதவியை இழந்ததும் பார்ப்பனர்தான். ஊழல் பார்ப்பனர்களின் பட்டியலை எடுத்தால் ஒரு பெரிய புத்தகம் போடும் அளவிற்குப் போய்விடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *