முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கை! பெண்களே விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்!

viduthalai
5 Min Read

சமீப காலமாக நம்பிக்கையோடு பழகும் பெண்களை சீரழித்து அவர்களது வாழ்க்கையை சீர்குலைக்கும் சில நிகழ்வுகள் நாள்தோறும் செய்திகளாக வருகிறது.

பாதிக்கப்படும் பெண்களுக்கு சரியான விழிப்புணர்வு இன்மையால் அவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விடுகிறது.

இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் அரியானா நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
வாட்ஸ் அப் பதிவுகள், குரல் பதிவு, படங்கள் போன்றவை சான்றுகளாக ஏற்கப்படும். ஆகவே, அச்சப்பட வேண்டாம் – பெண்களே துணிவோடு புகார் கொடுங்கள்.

ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பயின்று வந்த 20 வயது மாணவியை 2 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சட்ட மாணவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் தண்டனை விதித்து சாட்டையை சுழற்றியுள்ளது அரியானா நீதிமன்றம்.

அதுவும் சட்ட வரலாற்றில் முதல்முறையாக வாட்சப் உரையாடல் செய்திகளை (electronic form of evidence) ஆதாரமாக கொண்டு இந்த வரலாற்று தீர்ப்பு இவர்களது செவுளில் அறையப்பட்டுள்ளது, தனது தீர்ப்பில் கூட இச்செய்திகளை சேர்க்கமுடியாதபடி அவ்வளவு கீழ்த்தரமான கொச்சை வார்த்தைகளால் இந்த பெண் பலவந்தப்படுத்தப்பட்டு மிரட்டி பணிய வைக்கப்பட்டிருக்கிறார் என தீர்ப்பில் குறிப்பிட்டு மனம் வருந்தியுள்ளார் நீதிபதி சுனிதா.

மிகுந்த எதிர்ப்புகளையும், போராட்டத்தையும் கடந்தே இந்த நீதி இந்த மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது, அதற்காக இந்த பெண் அனுபவித்த வலிகள், வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. செல்வாக்கு மிகுந்த இந்தக் குற்றவாளிகளை எதிர்த்து இப்பெண் நடத்திய போராட்டத்தின் இத்தீர்ப்பின் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பார்க்கலாம்.

வழக்கின் முதன்மை குற்றவாளி ஹர்திக் சட்டம் மற்றும் அரசியல் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். (20 வயது.) அதே பல்கலைகழகத்தில் சட்டம் பயில்கிறார், படிப்பில் நான்கு முறை தங்க மெடல் பெற்றவர், மேலாண்மை பயிலும் 18 வயது மாணவியுடன் நட்பாக பழகி காதல் என்ற பெயரில் அந்த பெண்ணின் நிர்வாண ஒளிப்படத்தை அனுப்பச் சொல்லி கெஞ்சி கூத்தாடுகிறார், அந்த ஒரு நொடி தான் தன் வாழ்க்கையின் அடுத்த இரண்டு ஆண்டுகளை நார் நாராய் கிழித்து போடப்போவது தெரியாமல் ஒரு உணர்ச்சிவசப்பட்ட சமயத்தில் பார்த்தவுடன் அழித்துவிடுவேன் என்ற தந்திர வார்த்தைகளை நம்பி, காதலன்தானே என்ற குருட்டு நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் தன் அந்தரங்க ஒளிப்படத்தை அவனுக்கு அனுப்பிவிடுகிறார்,

ஆனால், அந்த ஒளிப்படத்துக்காக காத்திருந்தது அவன் மட்டுமல்ல, அவனது அறை நண்பர்களும் தான். ஆம் வெறிநாய்கள் விரித்த வலையில் வெண்புறா வசமாக மாட்டிக்கொண்டது. ‘எனக்கு மட்டுமல்ல, என் நண்பர்களுக்கும் நீ வேண்டும் , மீறினால் இந்த ஒளிப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டப்படுகிறார், செல்வாக்கு மிகுந்த மிரட்டலுக்கு பணிகிறார் இந்த மாணவி, அவனது மிரட்டலுக்கு மட்டுமல்ல , அவன் நண்பர்களுக்கும் சேர்த்தே தான்…

அவர்கள் விரும்பிய போதெல்லாம் இது நடந்தேறியிருக்கிறது, நேரில் மட்டுமல்லாது ஸ்கைப் வீடியோ வாயிலாக சில ஆபாச செயல்களை செய்யச் சொல்லி வற்புறுத்தப்படுகிறார், தப்பிக்க வேறுவழியில்லாமல் இந்த மிரட்டலுக்கும் பணிகிறார் இந்த பெண். ஒவ்வொரு மிரட்டலும் ‘இம்முறை நீ இதை பண்ணிவிடு, உன் ஒளிப்படத்தை நான் அழித்துவிடுவேன்’ என்ற ஓநாயின் கண்ணீரை நம்பியே நிகழ்த்தப்பட்டுள்ளது.

இவ்வகை இச்சைகளும் போரடித்துப் போன இந்த எச்சைகள் வக்கிரத்தின் உச்சமாக அப்பெண்ணை மது அருந்தச் சொல்லி ,ஆபாச நடனம் ஆடச் சொல்லி மூன்று பேரும் சேர்ந்து அப்பெண்ணை வன்புணர்ந்திருக்கிறார்கள்.
இதற்கு மேலும் தாமதித்தால் தன் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் காவல் நிலையம் சென்றுள்ளார் மாணவி, வழக்கம் போல கடமை தவறா நம் காவல்துறை கனவான்கள் செல்வாக்கான இம்மாணவர் குடும்பங்களுக்கு செருப்பாய் மாறி வழக்கை பதிய மறுக்கின்றனர். மிரட்டல்களுக்கு எல்லாம் பணியாமல் தொடர் போராட்டம் நிகழ்த்திய மாணவியின் நிலை கண்டு கலங்கிய ஒரு நல்ல காவல் அதிகாரி வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கையை பதிகிறார். அடுத்த நாளே அரசியல் அழுத்தம் காரணமாக பணியிடம் மாற்றப்பட்டிருக்கிறார் அந்த அதிகாரி.

புதிதாக வழக்கை விசாரித்த அதிகாரி முக்கிய ஆதாரமான பெண்ணின் அலைபேசியை தர சொல்லி வற்புறுத்த – ஆதாரங்கள் அழிக்கப்படும் என்று அந்த பெண் தர மறுக்க இதற்காக பெண்ணின் குடும்பம் மிரட்டப்பட, போதாக்குறைக்கு குற்றவாளிகளின் சட்ட குடும்பங்கள் மாணவியின் நடத்தையில் குறைகூறி வழக்குத் கொடுக்க என நித்தம் நித்தம் போராட்டமும், வலியும் வேதனையுமாகத்தான் இவ்வழக்கு நீதிமன்றத்தை அடைந்துள்ளது. நீதிபதி சுனிதாவின் முன்னிலையில் அந்த பெண் அளித்த கண்ணீர் சாட்சியமே மேலே கூறப்பட்டுள்ள அத்தனை விபரங்களும்.

அரசியல் செல்வாக்கால் அலைக்கழிக்கப்பட்ட வழக்கின் தன்மையை கண்டு அதிர்ந்து போன நீதிபதி உடனடியாக வழக்கின் முக்கிய ஆதாரமான பெண்ணின் அலைபேசியைக் கைப்பற்றி வாட்சப் தகவல்களை ஆராய்ந்தே இந்த வரலாற்று தீர்ப்பை அளித்துள்ளார். இதற்கும் எதிர்தரப்பு இந்த பெண் மாணவர்களுடன் சுற்றுலா சென்றிருக்கிறார், தெரிந்தே தான் குடித்திருக்கிறார், இசைந்தே தான் அவர்கள் இச்சைகளை பூர்த்தி செய்துள்ளார், பணமும் பெற்றிருக்கிறார் என ஏகத்துக்கும் சரடு விட, எரிச்சலான நீதிபதி, இந்தப் பெண் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார். மூன்று ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை மிரட்டும் போது அதை எதிர்க்கும் மனநிலையில் பாதிக்கப்பட்டவரும் இல்லை, அவர் எதிர்த்தாலும் அவரை விடும் மன நிலையில் இந்த மூன்று சாடிஸ் சைக்கோக்களும் இல்லை. ஆகவே, நீங்கள் வாயை மூடுங்கள், 20 ஆண்டுகள் தண்டனை தீர்ப்பை வாங்கிக்கொண்டு ஓடுங்கள் என பத்ரகாளியாய் மாறி எதிர்தரப்பையும் காவல்துறையையும் தோலுரித்து தொங்க விட்டிருக்கிறார் நீதிபதி சுனிதா.

ஆக நம் பெண் நட்புகளுக்கு சில விடயங்கள்.

1. வாட்சப் தகவல்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் ஏற்கப்படும், ப்ளூ டிக் தான் ஆதார ரெசிப்ட்.

2. எந்தச் சூழ்நிலையிலும் அந்தரங்க ஒளிப்படங்கள் எடுக்காதீர்கள், கணவரோ காதலனோ எந்த எருமை கேட்டாலும் இதை செய்துவிடாதீர்கள்.

3. சமூகவலை தளங்களில் மற்றும் இணையத்தில் நிரந்தரம் என்ற ஒன்றே கிடையாது, ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு நொடியும் தகவல்களும், ஒளிப்படங்களும் கொட்டி கொட்டி குவியும் குப்பைமேடு இது,

4. உங்கள் ஒளிப்படம் கசிந்துவிட்டால் கூட போடா மயிரு என்று போய்க் கொண்டே இருங்கள், அதிர்ச்சியாக இருந்தாலும் இப்போதைக்கு இது மட்டுமே ஆறுதல் தரும்.

5. இதையும் மீறி ஒளிப்படத்தை வைத்து மிரட்டினால் தயங்காமல் காவல்துறையை அணுகுங்கள், எவ்வகை மிரட்டலுக்கும் பணிந்துவிடாதீர்கள்.

6. இந்த வரலாற்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி கூட ஒரு பெண் தான், ஆகவே தான் சாட்டை சற்று வேகமாக சுழற்றப்பட்டுள்ளது, ஒரு பெண்ணின் வலியை, வேதனையை எவ்வளவு விளக்கினாலும் ஆணுக்கு முழுவதும் புரிய வைக்க முடியாது.

7 ஆகவே உங்கள் பாதுகாப்பை வேறு யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள், உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் மட்டுமே.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *